மறவோம் - Remembering Bapuji உரை
மதிப்புக்குரிய ஆசிரியர் திரு. கமல்ஹாசன் ஒருங்கிணைத்த “மறவோம் - Remembering Bapuji & Brothers” நிகழ்வில் செல்வேந்திரன் ஆற்றிய துவக்க உரை: அனைவருக்கும் வணக்கம். காந்தியாரை மிகவும் நேசித்த ஜெயகாந்தனுடைய வரிகளோடு இந்த உரையை துவங்குவது பொருத்தமாக இருக்கும். “கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.” என்கிறார். இங்கே திரண்டிருப்பதும் அப்படிப்பட்ட ஒரு கூட்டம்தான். நண்பர்களே, ஒரு விடுதலைப் போரை, மக்கள் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர்கள் அந்த நாட்டின் அதிபராக, பிரதமராக ஆட்சி செய்வார்கள். உலக வரலாற்றிலேயே அதற்கு ஒரேயொரு விதிவிலக்கு காந்திதான். காந்தி மதுரைக்கு 6 தடவைகள் வந்திருக்கிறார். முதல்முறை வந்தபோது அவருக்கு...