உரமிட்ட வாழ்க்கைகள்
நண்பர்களுக்கு வணக்கம். என்னுடைய பெருமதிப்புக்குரிய ஆசிரியர் திரு. ஹேமச்சந்திர ஹாரா அவர்கள் இந்த அவையில் இருக்கிறார். நவீன தமிழிலக்கியத்தின் செழுமை மிக்க கதைகளை பெருவாரி மக்களிடம் கொண்டு சேர்க்கும் இலக்கிய இவாஞ்சலீஸ்ட் திரு. பவா செல்லதுரை இங்கே முன்னிலை வகிக்கிறார் அவர்களை வணங்குகிறேன். கோமதியுடனான உரையாடல்களில் தவறாமல் இடம்பிடிக்கும் இரண்டு பெயர்கள் சுதன் ஐஏஎஸ் மற்றும் பாலா ஐஏஎஸ். இருவரையும் இங்கே பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. காண்பதெல்லாம் மறையுமென்றால் என்கிற இந்தத் தொகை நூலில் இடம் பெற்றுள்ளவர்களில் மூன்று கதாநாயகர்களை என் பிள்ளைகளுக்கு கதைகளாகச் சொல்லியிருக்கிறேன். ஒருவர் லெப்டினெண்ட் கர்னல் துவாரகேஷ். இராணுவத்தில் பணியாற்றுகிறவர். ஒரு விபத்தில் முழு பார்வையும் பறிபோனது. அதற்குப் பிறகு அவர் நீச்சல் போட்டிகளில் தேசிய பதக்கங்கள் பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான துப்பாக்கி சுடுதல் எனும் வகைமையை இந்தியாவில் துவங்கிவைத்து அதன் சாம்பியனாகத் திகழ்கிறார். சியாச்சின் மலை உச்சிக்கு ஏறினார். இன்னொருவர் என் ஆசிரியர் ஹேமச்சந்திர ஹாரா. இன்று வாழும் மகத்தான இலக்கியப் பேராசிரியர...