பிழைத்தலெனும் பெரும் திறன்

காலச்சுவடு புத்தாண்டு சிறப்பிதழை வாசித்துக் கொண்டிருந்தவன் துள்ளிக் குதித்தேன். தாயகம் கடந்த தமிழ் கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக அ.முத்துலிங்கம் கோவை வருகிறார் எனும் செய்தி அதிலிருந்தது. மகுடேஸ்வரனின் வார்த்தைகளில் சொல்வதானால் என்னை நக்கி நகர்ந்த நாயாக அல்லாமல் செத்து விழுந்த ஈயாகச் செய்யக்கூடிய எழுத்தாளர்களுள் அவரும் ஒருவர். எந்த தமிழிலக்கிய வாசகனும் அவரோடு உரையாடும் நாளுக்காக ஆவலோடு காத்திருப்பான். லேப்டாப் டேபிளுக்கு பாய்ந்து உங்களை நான் சந்தித்தே ஆகவேணும். ஸ்டீபன் ஜோசப் ஹார்பரிடமிருந்து கூட சிபாரிசு கடிதம் வாங்கி வர சித்தமாக இருக்கிறேனென மின்னஞ்சல் அனுப்பினேன்.

பிறகு மணிக்கொரு தரம் ரிப்ளை வந்திருக்கிறதா என மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். அ.மு எழுத்தாளர்களை எப்படியெல்லாம் துரத்திப் பிடித்து சந்திப்பாரென்பது ‘வியத்தலும் இலமே’ வாசித்தவர்களுக்குத் தெரியும். நானும் அவரை சந்திக்க என்னவெல்லாம் செய்யலாமென யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு எழுத்தாளரைத் தொடர்ந்து வாசிப்பவன் ஒருவகையில் அவரை உளவு பார்க்கிறவனாகிறான். எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பர்களிடம் துப்பு துலக்கியதில் அவர் பாஸ்டனில் அப்ஸராவுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்றார்கள். என் உளவுப்படை பாஸ்டனில் அவர் பாலாவின் காரை டிரையல் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதுவரை அப்-டேட் செய்தார்கள். ஒருவேளை பதிலேதும் வராவிட்டால் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கலாமா என ரெஸிடென்ஸி வரை ஒரு எட்டு போய் நோட்டம் விட்டு திரும்பினேன். ’உனக்கு கிறுக்காலே’ என்றாள் திரு. அதானே என ஆமோதிக்கும்படி பார்த்தாள் இளவெயினி.

57வது தடவையாக மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோது மெயில் வந்திருந்தது. அவரால் கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை தெரிவித்திருந்தார். ஒரு ரன் வித்தியாசத்தில் மேட்ச் தோற்றது போல் ஆகிவிட்டது. இதற்கிடையில், விஷ்ணுபுரம் குண்டர்கள் அவரைக் கடத்திக்கொண்டு போய் ஒரு ஹெஸ்ட் ஹவுஸில் அடைத்து வைத்து இலக்கியம் பேசியே இம்சையைக் கூட்டுவோமென நம்பியார் ஸ்டைலில் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தார்கள் என்பது தனிக்கதை.

ரொம்பவும் ஏமாற்றமாகப் போய்விட்டது. அவரோடு உரையாடிய உணர்வு கிடைக்கட்டும் என்பதற்காக ‘அங்கே இப்போ என்ன நேரம்?’-ஐ முப்பதாவது தடவையாக வாசிக்கத் துவங்கினேன். மனக்கவலைகளை மறக்கச் செய்வதும், புதிய மனக்கவலைகளை உண்டு பண்ணி விடச் செய்வதும்தானே முத்துலிங்கத்தின் எழுத்துக்கள். பறிப்பாரற்ற காட்டுப்பலா மாதிரி இத்தொகுதியில் ஒரு மகத்தான சிறுகதையொன்று கிடக்கிறது. எடுத்து வாசிக்கும்தோறும் மேலும் கொஞ்சம் ஒளியைக் கூடுதலாகக் கசியவிடும் அக்கதையின் பெயர் ‘யேசு மாதா போன்ற முகம்’. அவரது சிறுகதைகள் தொகுப்பில்தான் இது வந்திருக்க வேண்டும். அவரது எல்லா கட்டுரைகளுமே சிறுகதைகள்தானே என்றாள் திரு. அதுவும் சரிதான்.

‘தாயகம் பெயர்தல்: வலியும் வாழ்வும்’ என்பது கருத்தரங்கில் அ.மு பேச வேண்டிய தலைப்பு. அவரது உரையினை வீடியோவில் பேசி அனுப்பியிருப்பார் போல. அதை மாலன் பகிர்ந்திருந்தார். ‘பிழைத்துக் கிடப்பதே பெரும் தற்செயல்!’ என ஒருமுறை ட்வீட்டியிருந்தேன். இந்த உரையும் அதைத்தான் சொல்கிறது.

Comments

Popular Posts