பெரும்வெற்றுக் காலம்

 

2020-ஆம் ஆண்டின் மார்ச் இறுதி வாரத்தில் அரசு முதல் நாடடங்கை அறிவித்தது. ஆனால், அதற்கும் ஒருவாரத்திற்கு முன்னே தன்னைக்கொண்டு பயந்து நான் வீடடங்கைத் தொடங்கிவிட்டேன். சீனாவில் மனிதர்கள் சாலையில் செத்து விழுந்துகொண்டிருக்கிறார்கள் என்று போகன் சங்கர் எழுதிய குறிப்பு ஒன்றை வாசித்திருந்ததே காரணம். பயமுறுத்துவதில் அவர் வல்லவர். சமணத் துறவியானேன்.

ஆனால் இந்தப் பத்தியம் எல்லாம் சில மாதங்களுக்குத்தான். சென்னை என் பிழைப்பிடமாக ஆன பிறகு வாழ்க்கை அடியோடு மாறியது. மாற்றியவர்கள் தம்பி டிஸ்னியும், நண்பர் ஆர். மகேந்திரனும். எழுத்தும் பேச்சும் என் தொழில்கள் ஆகின. அச்சம் துறந்து வாரம் இருமுறை விமானங்களில் பறக்கலானேன். தி ஹிண்டு வேலையை துறந்தேன். நான்கைந்து மழைப்பயணங்களை மேற்கொண்டேன். மாநாடுகள் நடத்தினேன். சினிமாக்களுக்கு எழுதினேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றினேன். விளம்பரங்கள் எடுத்தேன். திருக்குறளரசியின் அர்த்தமண்டபத்தின் சேவைகளைச் சென்னையில் தொடங்கினேன். செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற கணமே இல்லையென்றானது.


நானும் நீங்களும் கடந்து வந்த இரண்டரை ஆண்டுகளின் பதிவுகளே இந்தப் புத்தகம். ஒரு பெருந்தொற்றுப் பேரிடரை சமூகம் எப்படி எதிர்கொண்டதென்பதை ஒரு சாமான்யனின் நினைவுக்குறிப்புகளின் வாயிலாக எதிர்காலத்திற்குச் சொல்லும் ஆவணம் இது. சில நூறாண்டுகள் கழிந்து இந்தப் புத்தகத்தைப் புரட்டி விழிவிரியப்போகும் தங்கைகளுக்குத்தான் இந்நூல் அதிகமும் பொருள்படும். தம்பிகள் எங்கே வாசிக்கப் போகிறான்கள்?


21 கட்டுரைகளடங்கிய இந்நூலுக்கு நீங்கள் ஒதுக்கிய பணமும் நேரமும் பணி நீக்கம் எனும் கட்டுரைக்கே பைசா வசூல். நிச்சயமற்ற நாட்களில் பல லட்சம் பேருக்கு ஆறுதல் அளித்த கட்டுரை. இரண்டாண்டுகளுக்குப் பின்னரும் நன்றி தெரிவித்து கடிதங்கள் வருகின்றன. அவை என் அப்பாவிற்குச் சேரவேண்டியவை.


மெய்ப்பு நோக்கி, தலைப்பும் பின்னட்டை வாசகமும் ஈந்த அண்ணன் ரமேஷ் வைத்யாவுக்கும், அட்டைப்படம் நல்கிய சந்தோஷ் நாராயணனுக்கும், கிண்டில் நூலாக வெளியிட உதவிய அழிசி ஸ்ரீனிவாச கோபாலனுக்கும், அச்சுப் புத்தகமாக வெளியிடும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் ராம்ஜிக்கும் காயத்ரிக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.


உலகமே உயிரச்சத்தில் கிடந்த ஒரு சூழலில், லெளகீகப் பதட்டங்களின்றி என் கனவுகளை நோக்கிச் செல்வதற்கான பாதையை அமைத்துக்கொடுத்த இனிய நண்பர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் அவர்களுக்கும், அருமைத் தம்பி டிஸ்னி சக்திவேலுக்கும் இந்தப் புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன்.


கிண்டில் மின்னூலாக வாசிக்க: https://www.amazon.in/dp/B0BBR2B9Z6


*அச்சுப் புத்தகம் விரைவில் வெளியாகும். 


Comments

Popular Posts