ஆத்தா...நான் குடுமி ஆகிட்டேன்...

நண்பர்களே,

ஐந்தாண்டு கால மேன்ஷன் வாழ்க்கையிலிருந்து விடுபடும் முயற்சியாக நாளை முதல் தனிமனை புகுகிறேன். பிரம்மச்சாரிகளுக்கு வீடு கொடுப்பதில்லை என்கிற சர்வதேச இலக்கணத்தை அப்படியே கடைபிடிப்பவர்கள் கோயம்புத்தூர்காரர்கள். வடகரை வேலன் அண்ணாச்சியின் பெருமுயற்சியில் வடவள்ளியில் அருமையான வீடு கிடைத்தது. பெருநகரின் சலம்பல்கள் எட்டாத தொலைவில், வீட்டைச் சுற்றி பசும் புல்வெளிகள் சூழ்ந்த ரம்மியமான வீடு. உரிமையாளர் அருகில் இல்லை என்பது கூடுதல் வரம்.

மாலை மங்கினால் மனித சஞ்சாரமே இல்லை. கனத்த இருளும், பெயர் தெரியாத பூச்சிகளின் ரீங்காரமும் மட்டுமே துணை. தனிமைதான் இவ்விடத்தின் பெரிய சவாலாக இருக்கும் என்பதை யூகிக்கிறேன். தனியார் நிறுவனங்களின் இணைய வசதி அறவே இல்லை. பி.எஸ்.என்.எல் மட்டுமே கதி. தொலைபேசிக்கு விண்ணப்பித்து, பிராட்பேண்டிற்கு விண்ணப்பித்து... முதல்வர் வரை சிபாரிசுக்கு ஆள் பிடித்து இணைப்பு வாங்க இன்னும் இரண்டு மாதங்களேனும் பிடிக்கும்.

இந்த இடைப்பட்ட காலங்களில் வாசிக்காமல் வைத்திருக்கிற புத்தகங்களையும், பார்க்காமல் வைத்திருக்கிற படங்களையும் பார்த்துவிடலாமென்கிற நப்பாசை இருக்கிறது. வாசலில் விரிந்திருக்கும் மைதானத்தின் துணை கொண்டு ரப்பையைக் கரைக்கலாம் என்ற நீண்டகால திட்டம் இருக்கிறது. இடையில் விடுபட்டுப்போன சமைக்கிற வழக்கத்தை திரும்பவும் ஆரம்பிக்க வேண்டும்.

லெளகீக வாழ்விற்குத் தேவையான கட்டில், பீரோ, டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் இன்னபிற சப்புச்சரவுகளையும் சேகரம் செய்ய துவங்க வேண்டும். இந்த சமாச்சாரத்தில் சுணங்கினால் கேண்டி முகவாய்க்கட்டையில் இடிப்பாள். சந்தா கட்டி இருக்கிற பத்திரிகைகள் துவங்கி வங்கிகள் வரைக்கும் முகவரி மாற்றத்தை உடனே தெரிவிக்க வேண்டும். காஸ் சிலிண்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். தினமணிக்கு ஏஜெண்ட் யார் என்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்... ஆஹா! நான் குடுமி ஆகிவிட்டேன்....

வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் நண்பர்கள் மற்றும் நண்பர்கள் அல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும், எவ்வித முன்னறிவிப்பு புடலங்காய்களுக்கும் அவசியமின்றி வீட்டில் தங்கிக்கொள்ளலாம், குடிக்கலாம், ஆடலாம், சண்டையிடலாம். அனைவரும் வருக... ஆதரவு தருக...!

எனது புதிய முகவரி:

செல்வேந்திரன்,
28, ராம்ஸ் நகர்,
பி.என். புதுர்,
வடவள்ளி,
கோயம்புத்தூர் - 641 041

ப்ளடி... பிளாக்கர்...!

கொஞ்சம் கூப்பினி குடித்தால் பரவாயில்லையென தோன்றியது. கோகோ ஷாப்புக்குள் நுழைந்தேன். அறிவிப்பு பலகையின் இன்றைய ஸ்பெஷல் நீத்தண்ணி என்று எழுதி வைத்திருந்தார்கள். ஒரு கலயம் நீத்தண்ணி முப்பது ரூபாய். கூப்பினியைக் காட்டிலும் மூன்று ரூபாய் குறைவுதான். இந்த கொடிய ரிசஷனில் நீத்தண்ணிதான் பெஸ்ட். ஆர்டர் செய்து விட்டு ஜன்னலோரத்து இருக்கையொன்றில் அமர்ந்திருந்தேன்.


எதிர் இருக்கையில் ஆறு வயதுப் பையன் ஒருவன் ஹிம்சாகரின் புத்தகமொன்றைக் கிழித்து கப்பல்கள் செய்து நீச்சத்தண்ணி கலயத்துக்குள் நீந்த விட்டுக்கொண்டிருந்தான். அந்த ஹிம்சாகரின் புத்தகத்தை மூன்று பிறவிகளாகத் தேடிக்கொண்டிருக்கிறேன் நான். காந்தியை நான் சுட்டதையும், பிரவீன் ஆம்தே யாரோடெல்லாம் படுத்தான் என்பதைப் பற்றியும் சுவைபட எழுதப்பட்ட புத்தகம் அது. இந்த பிறவியிலும் அப்புத்தகம் கிடைக்காவிட்டால் பத்ரியிடம் கோரிக்கை வைக்கலாம் என்றிருந்தேன். அப்பேர்பட்ட புத்தகத்தில் கத்திக்கப்பல் செய்பவனை நோக்கி கத்தலாமா? கத்தியைத் தூக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் உற்றுப்பார்ப்பதைக் கண்டுபிடித்துவிட்டான் பொடியன்... "நீ ஒரு எழுத்தாளனா...?!"


"அட...எப்படித் தெரியும்... என் எழுத்துக்களை வாசித்திருக்கிறாயா... டி.வியில் கூட ஒருமுறை வந்தி..."


"உன்னிடமிருந்து எழுத்துக்களின் அழுகிய வாடை அடிக்கிறது" - அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு தன் கடன் கப்பல் செய்வதே என்பது போல சர சரவென பக்கங்களைக் கிழித்து கப்பல்களை உருவாக்கிக் கொண்டிருந்தான்.


அடேயப்பா ராஜபாளையத்தில் பிறந்தவன் போலிருக்கிறது. இந்தச் சின்ன வயதில் எப்படியொரு மோப்ப சக்தி. நான் எழுத்தாளன் என்பதை எளிதில் கண்டு கொண்டானே... ஆனால், இப்படி பொறுப்பில்லாமல் புத்தகத்தைக் கிழித்து கப்பலா செய்வது...


"ஹிம்சாகரை என் ஹிம்சிக்கிறாய்...?!" சற்று உறைப்பாகக் கேட்டேன்.


"குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டலாம். கப்பல் ஓட்டக் கூடாதா?!"


"சைத்தானே... அந்தப் புத்தகத்தின் மதிப்பு தெரியுமா... அது என் சரிதை. நான் காந்தியைக் கொன்ற வரலாறு அதில் இருக்கிறது..."


"என்ன காந்தியைக் கொன்றீரா... ஹா... ஹா... அடிவயிறைப் பிடித்துக்கொண்டு வெடிச்சிரிப்பு சிரித்தான் பொடியன்... மற்றொரு டேபிளில் அமர்ந்து புலி சூப் குடித்துக்கொண்டிருந்த சமவெளி மான் ஒன்று எட்டிப்பார்த்து முறைத்தது. சர்வர் வந்து அமைதியாக பேசுங்கள் அல்லது **டையைக் கசக்கிவிடுவேன் என்று மிரட்டி விட்டுப் போனான். எனக்கு இது ஒன்றும் புதியதல்ல... இந்தக் கடையில் கூப்பினி குடிக்க வரும் ஒவ்வொரு முறையும் இந்த சர்வர் என்னை மகா கேவலமாகப் பேசுவது சகஜம்தான். என் பிரச்சனை சர்வர் அல்ல! இந்தப் பொடியனின் அலட்சியம்தான் எனக்கு பெருத்த அவமானத்தை தந்தது.


"ஏன் நான் காந்தியைக் கொன்றதை நீ நம்பவில்லையா... இதோ என் கழுத்தைப் பார்... என்னை தூக்கிலிட்டதன் கயிற்றுத் தழும்புகள். சாகும் வரைதான் தூக்கிலிடச் சொல்லி உத்தரவு. பரதேசிகள்! நான் செத்தபிறகும் சில நிமிடங்கள் தூக்கில் தொங்க வைத்துவிட்டார்கள். வயலேஷன் ஆஃப் ஜட்ஜ்மெண்ட். செத்த பிறகும் தூக்கில் தொங்குவது எத்தனை அவமானகரமானது தெரியுமா...?"


"நீ காந்தியைக் கொன்றாய் என்பதற்கு இந்த ஆதாரம் போதுமென்று நினைக்கிறாயா... எழுத்தாளா..."


"நிச்சயம் இல்லை. நீ என் அலுவலகத்திற்கு வந்தால் காந்தியைக் கொன்றபோது ரெட்ஜயண்ட் காமிராவினால் எடுக்கப்பட்ட வீடியோவைக் காட்டுகிறேன். வர விருப்பமில்லையெனில் நீயே யூ ட்யூபில் தேடிப் பார்த்துக்கொள்ளலாம்"


"என் காதலிக்காகக் காத்திருக்கிறேன்... இன்னொரு நாள் வருகிறேன்."


"ஓகே... பை தி பை... மை நேம் இஸ் செல்வேந்திரன், எமர்ஜிங் ரைட்டர்! உன்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே..."


நீண்ட பிரசங்கத்திற்கு தயார் செய்பவனைப் போல தன் தொண்டையைச் செருமிக்கொண்டு துவங்கினான் பொடியன்...


"என் இயற்பெயர் அலெக்ஸாண்டர் டூமாஸ். அது மிகவும் கேவலமான வைதீக பெயர் என்பதால் "ஜெனோவா வீரன் பக்கிரிசாமி" என மாற்றிக்கொண்டேன். என் தாய் அம்புஜம் ராஜஸ்தானைச் சேர்ந்தவள். அவளது எண்பதாவது வயதில் நான் பிறந்தேன். என் பிறப்பு ஒரு சோக சரிதம். வாழ்வியல் கடமைகள் பூர்த்தியாகி விட்டதால் சாந்தாரா இருந்து உயிர் துறக்க ஆசைப்பட்டாள் அம்புஜம். ஆனால், அதற்கு முன் ஊரில் உள்ள பிரமுகர்களுக்கு விருந்தளிக்கத் திட்டமிட்டாள்.


விருந்திற்கு சமூக அக்கறையும், அறச்சீற்றமும் கொண்ட அகவலோசைக் கவிஞன் ஒருவன் வாளி நிறைய்ய கவிதைகளோடு வந்தான். கொஞ்சம் கவனப் பிசகாக இருந்தாலும் வாளியில் இருக்கும் கவிதைகள் எகிறி குதித்து ஜனங்கள் மத்தியில் பரவி விடும் அபாயம் இருந்ததால், அம்புஜம் மிகுந்த கவனத்தோடு அவனிடத்தில் இருந்து வாளியை வாங்கி ஜனசந்தடியற்ற இடத்தில் வைக்கச் சென்றாள். எவனோ ஒரு பிரக்ஞையற்ற பரதேசி தின்றுவிட்டு போட்ட வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்ததில் அவளது கையிலிருந்த வாளி கவிழ்ந்து கவிதைகள் எல்லா திசைகளிலும் பரவியது. விருந்துதானே என உள்ளூர் பிரமுகர்களும் முகமூடி, மூக்குமூடி, காதுமூடி என எந்தவொரு மூடியும் இல்லாமல் வந்து தொலைத்திருந்தனர். எவரையும் காப்பாற்ற முடியவில்லை. எங்கும் மரண ஓலம். அந்தக் கவிஞன் என் தாயின் வளையல்களைக் கழற்றி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்..." - இந்த இடத்தில் பக்கிரிசாமியின் கண்கள் கலங்கி விட்டன. என்னதான் இருந்தாலும் சிறுவன் தானே... தாயின் நினைப்பு வந்திருக்கலாம். அவனைத் தேற்றும் பொருட்டு சர்வரை அழைத்து 'பொட்டாசியம் குளோரைடு பொரியல்' ஒரு பிளேட் ஆர்டர் செய்தேன்.


அவன் விசும்பலோடு தொடர்ந்தான்..."என் தாய் புகழ் மிக்கவள். அவள் கேட்டாள் என்பதற்காக ராஜஸ்தான் மன்னர் கானாவிலிருந்து ஒரு கழுதைப்புலியையும் அதை மேய்ப்பதற்கு ஒரு கறுப்பனையும் வரவழைத்தார். மன்னரது இந்த அன்பிற்கு தப்பர்த்தம் எதும் கொள்ள வேண்டியதில்லை. அம்புஜம் ஒரு அறிவுலக மேதை. விஞ்ஞானியும் கூட. கவிதைகள் எழுதும் சிந்தனை ஒருவனுக்கு வராமல் இருக்க அவள் ஒரு சூரணம் தயாரித்தாள். பிறக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் அரசே அச்சூரணத்தை இலவசமாக வழங்கியது. கவிதைகள் மனுவிரோதம் என்றபோதும் அவள் கவிஞர்களை வெறுத்ததில்லை. நாட்டில் கவிஞர்கள் இனம் அருகி வந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு 'கவிஞர் வதை தடுப்புச் சட்டம்' கொண்டு வர பாடுபட்டாள். கவிஞர்கள் வாழ்கிற தெருக்களில் வேட்டை தடை செய்யப்பட்டது. உலோகப் பொருட்களுடன் அத்தெருக்களில் எவரும் நுழைய முடியாது...ச்சே... அப்பேர்ப்பட்டவளைக் கொலை செய்யும் நோக்கோடு அவன் வந்திருக்கலாமா... இதுதான் அறச்சீற்றமா...?!" - திரும்பவும் விசும்பினான் பக்கிரிசாமி. அவனது கண்ணீரில் எனது வேட்டி தெப்பலாக நனைந்துவிட்டது. வேட்டியைக் கழற்றி பிழிந்து பக்கத்து நாற்காலியில் காய வைத்தேன்.


"சரி... அழாதே பக்கி... உன் பிறப்பில் ஏதோ துயரம் என்றாயே... அதைச் சொல்..." என்றேன் நான்.


"அன்றைய விருந்தில் என் தாயுடன் சேர்த்து 78 பேர் மரித்துப் போனார்கள். அம்புஜம் கர்ப்பிணி என்பது யாருக்கும் தெரியாது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடரின் முக்கியக் காட்சி அன்று. சீரியல் பார்க்கும் அவசரத்தில் ஊரார் 78 பிணங்களையும் அவசர அவசரமாகக் கடலில் வீசி விட்டார்கள். அம்புஜத்தின் பிணத்தை கடற் பெருச்சாளியொன்று கடித்தது. பிண வாடைக்கு சுறாக்களும் கூடி விட்டன. பெருச்சாளிக்கும் சுறாக்களுக்கும் ஆகாது என்பது உனக்கு தெரிந்திருக்கலாம். இருதரப்பும் பிணத்திற்கு அடித்துக்கொண்டதில் அம்புஜத்தின் வயிறு கிழிந்து நான் வெளிப்பட்டேன். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்ததால் வெறும் கால்களால் பல நாட்டிக்கல் மைல்கள் நீந்தி யாழ்ப்பாணத்தில் கரையேறினேன். அங்கே அவசர அவசரமாக பலரை மின்படகுகளில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமாக ஏறி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தேன்.
 
மண்டபம் முகாமில் என்னைப் பிடித்து விட்டார்கள். என் பெயர் என்ன என்று கேட்டார் விசாரணை அதிகாரி. என் துயர கதையை அவரிடம் சொன்னேன். அவர் அந்தச் சமயத்தில் 'த்ரீ மஸ்கீட்டர்ஸ்' படித்துக்கொண்டிருந்தார். தான் படித்துக்கொண்டிருக்கிற காரணத்தினாலேயே உலகில் அதை மிஞ்சிய இலக்கியப் பிரதி வேறெதுவும் இல்லையென்றும், இதைப் படிக்காதவன் இலக்கியத்தைப் பற்றிப் பேசவே அருகதையற்றவன் என்றும் உறுதியான முடிவுகள் வைத்திருந்தார். நான் எவ்வளவு மறுத்தும் 'அலெக்ஸாண்டர் டூமாஸ்' எனும் பெயரைத் திணித்து விட்டார். முகாமில் வளர்ந்தேன். அங்கிருந்தவர்கள் அன்பானவர்கள். அவர்களிடமிருந்து நான் கண்ணீர் விடவும், ரத்தம் சிந்தவும், மனம் குமையவும், குருட்டு நம்பிக்கையையும் கற்றுக்கொண்டேன்.


என்னுடைய நான்காவது வயதில் எழுத்தாளர் பிரதியங்கார மாசானமுத்து எங்களது முகாமிற்கு வந்தார். உங்கள் துயரங்களை எழுத்தில் வடிப்பேன், அதை வாசிப்பவர்கள் இதயம் வெடித்து உங்களைத் தேடி ஓடி வருவார்கள் என்றார். உங்கள் துன்பங்கள் தீர நீங்கள் அனுபவித்த துயரங்களை என்னிடத்தில் சொல்லுங்கள். ரியலிஸம் ரொம்ப முக்கியம் என்றார். குறிப்பாக பெண்களிடத்தில் ராணுவம் நடந்து கொண்ட விதத்தை நடித்துக் காண்பிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பார். மாசானமுத்துவைப் போன்ற எழுத்தாளர்களைப் பற்றி என் தாயின் கருவில் இருக்கிற காலத்திலேயே படித்திருக்கிறேன் என்பதால் அவரது பாச்சா என்னிடத்தில் பலிக்கவில்லை. என் தாய் அம்புஜத்தைப் பற்றியும், ராஜஸ்தான் அரண்மனையில் அவளுக்கிருந்த செல்வாக்கைப் பற்றியும் அவன் துருவி, துருவி கேட்டுக்கொண்டே இருப்பான். அதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்போது நான் கர்ப்பத்தில் இருந்தேன் என்று சொல்லியும் விடமாட்டான். கானாவில் இருந்து வந்த கழுதைப்புலி மேய்ப்பன்தானே உன் தகப்பன் என்று ஒரு நாள் என்னிடத்தில் கேட்டான். மாசானமுத்து என் குஞ்சைப் பிடித்து அழுத்துகிறான் என கத்தினேன். மொத்த முகாமும் கூடி அவனை நையப் புடைத்துவிட்டது. அவன் பிரான்ஸிற்கு ஓடிப் போய் விட்டான் என சிற்றிதழ் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டேன்... அப்புறம் ஒரு திரைப்பட இயக்குனர் வந்... சொல்லிக்கொண்டிருந்த பக்கிரிசாமி பேச்சை நிறுத்தினான்... திபு திபுவென போலீஸார் கடைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். பக்கிரிசாமியின் முகம் வெளிறியது...அவனது முகத்தில் கலவரமும், பயமும் கொப்பளித்தது...சட்டென வியர்த்துப்போனான்... அவனை அடையாளம் கண்டுகொண்ட போலீஸ்காரனொருவன் அவனது கழுத்தில் துப்பாக்கியை வைத்து இறுக்கினான்... இன்னொருவருவன் பக்கிரிசாமியின் கரங்களைப் பின்பக்கமாகச் சேர்த்துக் கட்டினான்.


நான் வேட்டியை எடுத்து உடுத்திக்கொண்டு ஓட தயாரானேன். "டேய் எழுத்தாளா... என்னைச் சந்தித்ததை எழுதப் போகிறாயா...?!" பக்கிரிசாமி கத்தினான்.


"எழுதுவேன்... பிரச்சனை வந்தால் எடுத்துவிடுவேன்..." சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் தலை தெறிக்க ஓடத் துவங்கினேன்.


"த்தூ... ப்ளடி பிளாக்கர்..!" அவன் காரி உமிழும் ஓசை தூரத்தில் கேட்டது.

அறிவு ஜீவி

'ரமேஷ் வைத்யா' பதிவினைப் படித்து விட்டு பலரும் தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தனர். அவரது தொலைபேசி எண்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். மருத்துவமனையில் செல்போனை பகிரங்கமாகப் பயன்படுத்த இயலாது. கவுன்சிலிங் வகுப்புகளின் போது பெரும்பாலும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும். தவிர, தொலைபேசியில் அழைத்துப் பேசுவது என்பது சிகிச்சையில் இருப்போர்க்கு கூடுதல் உபத்திரவம் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். அவரது எண்கள் 9566270092. வெளியூர் நண்பர்கள் அவரை உற்சாகமூட்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பலாம் என்பது அடியேனின் யோசனை.

நைஜீரியாவிலிருந்து நேசமித்திரன் அழைத்திருந்தார். எழுத்து அல்லது சினிமாக் கனவுகளை நெஞ்சில் சுமந்து சென்னைக்கு ரயிலேறும் இளைஞர்களுக்கு அபிபுல்லா சாலை வீட்டில் அறிவுமதி அடைக்கலம் கொடுத்ததைப் போல... பல பாட்டுப் பறவைகளின் வேடந்தாங்கலாக ரமேஷின் வீடு இருந்ததை நினைவுப் படுத்தினார். எவ்வித முன்னறிவிப்புமின்றி கிளம்பி, எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்க முடிகிற வீடாக ரமேஷின் வீடு இருந்தது. அற்றைத் திங்கள் அந்நிலவில்... பாடல் நினைவுக்கு வருகிறது.
***
குங்குமத்தில் இருபது கவிதைகளும், தினகரன் தீபாவளி மலரில் இரண்டு கவிதைகளும் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் வெகுஜனப்பத்திரிகைகளில் நூறு கவிதைகள் (ஆம்... பத்திரிகை ஆசிரியர்கள் இதை கவிதைகள் என்றுதான் கிளாஸிபை பண்ணுகிறார்கள்!) என்கிற எண்ணிக்கையை எட்டிப் பிடித்திருக்கிறேன். ஸ்கோர் 101*
தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் கவிதைகள் எழுத வேண்டுமென்கிற என் கனவு சுயமதிப்பீட்டுக் காரணங்களால் தள்ளிப் போகிறது.
***
ஆனந்த விகடனில் ராஜூ முருகன் எழுதிய 'ஹேப்பி தீபாவலி' என்கிற கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதை மிகச் சாதாரணமான ஒன்லைன் தான். ஆனால் ராஜூவின் அக்மார்க் கேலியும், பிரத்யேக நரேட்டிவும் கதையோடு லயிக்கச் செய்கிறது. ராஜூ தன் மொழியை இளமையாக மிக இளமையாக வைத்திருக்கிறார். உதிரி உதிரியாய், கன்னி கன்னியாய் எழுதி அவற்றைக் கதையின் ஒரு சுவாரஸ்ய சந்தர்ப்பத்தில் ஒன்றிணைப்பது அவரது பாணி. ராஜூவின் கதைகள் பொது வாசகனுக்கும், அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களுக்கும் வேறு வேறான உணர்வைத் தருபவை.
***
தமிழ்நதியின் 'ஒரு குடிமகனின் சரித்திரம்' அற்புதமான கட்டுரை அல்லது கதை. சிரிக்க, சிரிக்க படித்து விட்டு வந்தால் கடைசி பாராவில் மனதைக் கனக்க வைக்கிறார். நல்ல கவிதைகள், ஆக்ரோஷ அரசியல் கட்டுரைகள் அல்லது மனதைப் பிழியும் சோகச் சித்திரங்கள் இவைதான் தமிழ்நதி என்கிற என் உள்மன பிம்பத்தை உடைப்பதாக இருந்தது கட்டுரை. http://tamilnathy.blogspot.com/2009/10/blog-post.html
***
தமிழ் நாட்டில் எனக்கு குபீர் சிரிப்பைத் தரக்கூடியவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று தினமணி கார்ட்டூனிஸ்ட் மதி (வெறுமனே அப்படிச் சொல்ல மனசு வலிக்கிறது. இவரது கார்ட்டூன்கள் அறச்சீற்றத்தாலும், ஆண்மையாலும் வரையப்பட்டவை...) மற்றொருவர் நம் இணைய சிரிப்பு வைத்தியர் குசும்பன். வழமையாய் வலையும், அது தரும் சர்ச்சைகளும் ஏற்படுத்தும் மன உளைச்சலை டாக்டர் குசும்பனார்தான் தீர்த்து வைக்கிறார். அவரது சமீபத்திய ஓபாமா கார்ட்டூன் 'இப்படி ஒரு பரிசைக் கொடுத்து கையை கட்டிப் போட்டுட்டாங்களே... விக்காத பாமையெல்லாம் இனி என்ன பண்றது?!' என்கிற நையாண்டியையும் அதன் உள்ளார்ந்த பொருளையும் மிகவும் ரசித்தேன்.
***
'அறிவு ஜீவி' என்கிற வார்த்தையே ஒரு மித். ஜெயலலிதா ஒரு இண்டலெக்சுவல் என்பது எப்படி பைத்தியக்காரத்தனமான ஒரு கற்பனைப் பிம்பமோ அப்படித்தான் இன்னார் ஒரு 'அறிவு ஜீவி' என்பதும். நம் சுய கற்பனைகளால் கட்டி எழுப்பும் கோட்டை நொறுங்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. புத்தகங்கள் படிக்கிறார்கள், தத்துவ விசாரங்கள் செய்கிறார்கள், பொதுப்புத்தி, பிரைவேட் புத்தி, நுண்ணரசியல், மைக்ரோ அரசியல் என எழுதிக் குவிக்கிறார்கள், சக மனிதனை ரத்தம் வர அடிக்கிறார்கள். வாழ்க அறிவு ஜீவிகள்!

எழுத்தில் தனி மனித தாக்குதல்கள் வேண்டாம் என்பதை ஒரு பிரச்சாரம் மாதிரி செய்கிறவர்கள், தனி மனிதனே பிஸிக்கலாகத் தாக்கப்படும்போது எதிர்வினைகள் ஏதுமற்று வாளாவிருக்கிறார்கள். எதிர்வினை செய்பவர்களும், எதிர்ப்பைக் காட்டுபவர்களும் சண்டைக்கு அலைகிறவர்களாக, சர்ச்சை விரும்பிகளாக அடையாளப்படுத்தி விடும் அபாயம் இருந்தாலும் ஜ்யோவ் தாக்குதலுக்கு எதிரான கண்டனங்களை சக இணைய எழுத்தாளனாகப் பதிவு செய்ய வேண்டிய கடமையும், அவசியமும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. சென்னைப் பதிவர்களான தண்டோரா, உண்மைத் தமிழன், நர்சிம் ஆகியோர் முகத்தாட்சண்யத்துக்காகப் பார்க்காமல் சில விஷயங்களைக் கண்டித்து எழுதுவது மகிழ்ச்சியைத் தருகிறது.

என் மீதும், எனது எழுத்துக்கள் மீதும் 'ஜ்யோவ்' வைத்திருக்கும் அபிப்ராயமும், எனக்கும் அவருக்கும் இருக்கும் சர்ச்சைகளும் உலகறியும். ஆனால், தனது கருத்துக்களை, விமர்சனங்களை முன் வைத்ததற்காக ஒருவர் தாக்கப்பட்டால் அது 'அஜ்மல் கசாப்' - ஆக இருப்பினும் எனது நிலைப்பாடு இதுதான்.
***
அதிரசத்திற்கு மாவு பிசையும் வாசனை எவர் வீட்டு அடுப்பங்கரையிலிருந்தோ கிளம்பி என் விடுதியறை ஜன்னலுக்குள் நுழைகிறது. 'பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீடு எத்தனை அழகானது' என்ற வண்ணதாசனின் வரிகளும், பிராயத்து தீபாவளித் தினஙகளும் நினைவுக்கு வருகின்றன. அம்மா, அக்கா, மதினிமார்களென கூட்டுக் குடும்பமாய் இருந்த நாட்களில் தீபாவளி என்பது பத்து நாள் வைபவம். முந்திரிக்கொத்து, சுசீயம், சீடை, அதிரசம், முறுக்கு, தட்டை, கடலை பணியாரம், ரசகுல்லா, கல கலா என அவரவர் விருப்புக்கேற்ற பண்டங்களைச் செய்வதில் வீட்டுப்பெண்கள் முனைப்புடன் இருப்பர். எண்ணெய் வழியும் விரல்களும், வியர்வை வழியும் கழுத்துமாக ராப்பகலாக அடுப்படியில் சுட்ட பலகாரங்களை 'சுவாமிக்கு வைக்கனும்டா...' என்கிற ராணுவக்கட்டுப்பாட்டில் தொட விடமாட்டார்கள். ஆனாலும் யாவரும் உறங்குகிற நள்ளிரவில் ரகசியமாக எடுத்துத் தின்றுவிடுவேன். அந்த சாமிக்குத்தங்களெல்லாம் ஒன்று சேர்ந்து என் குடும்பத்தைக் கலைத்துப் போட்டு விட்டதோ என்னவோ?!

பஸ் ஸ்டாண்டில் என் வருகைக்காக அப்பா காத்திருப்பார். வாட்டர் ஹீட்டர் வெந்நீரில் இருவரும் குளிப்போம். கிருஷ்ணா ஸ்வீட்ஸின் அரைக்கிலோ பார்சலை விளக்கு முன் வைத்து வணங்கி, ஆளுக்கொரு துண்டை சாப்பிட்டு விட்டு, எதிர் வீட்டுக் குழந்தைகளுக்கு மிச்சத்தைக் கொடுத்து விட்டு விட்டத்தைப் பார்க்கும் வறண்ட தீபாவளி. கேண்டி வந்துதான் வெறுமை எனும் நரகாசுரனை வதம் செய்யப் போகிறாள் என்று நம்புகிறேன்.

ரமேஷ் வைத்யா

தமிழ் சினிமாவில் நா. முத்துக்குமார் இருக்கிற இடத்திற்கு நிகரான இடத்தைப் பிடித்திருக்க வேண்டியவர் ரமேஷ் வைத்யா. குறைந்த பட்சம் ஒரு பத்திரிகையில் பொறுப்பாசிரியர் அளவிற்காவது உயர்ந்திருக்க முடியும். அதற்கான அத்தனைத் தகுதிகளும் அவரிடத்தில் இருந்தது, இருக்கிறது. குடியினால் குடும்பம், ஆரோக்கியம், வேலை, சேமிப்பு என அனைத்தையும் இழந்த பின்னும் நாவில் சரஸ்வதி எழுதிய தமிழ் இருக்கிறது. உலகை வெல்ல தமிழ் போதும் என்கிற நம்பிக்கையை பாஸ்கர் சக்தி விதைத்திருக்கிறார். அவரது தொடர்ந்த வற்புறுத்தலின் பேரில் குடிப்பழக்கத்திலிருந்து மீளூம் சிகிச்சையை அடையாறு மருத்துவமனையில் பெற்று வருகிறார். அரை இட்லியிலிருந்து மூன்று இட்லிக்கு முன்னேறி இருக்கிறார். தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது.

துரோகமும், புறக்கணிப்புமே வாழ்வின் மீதான அவநம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அருகிலிருந்து கவனித்துக்கொள்ள நபர்களில்லை. மீண்டும் அவரை தனிமையும்,வெறுமையும் சூழ்கிறது. தனிமை என்னை வதைக்கும்போது குடி எண்ணம் மீண்டும் தலை தூக்குகிறது என்கிறார். சாப்பாடு, பழங்கள் வாங்கி வர... உடனிருந்து கதைக்க... துணை இல்லாத ஆஸ்பத்திரி தினங்கள் எத்தனை இரக்கமற்றது?!

மரணத்தை விட கொடுமையானது மறக்கப்படுவது என ஒரு நேர்காணலில் மம்மூட்டி சொன்னது நினைவுக்கு வருகிறது. வேலையில் இருந்தபோது கொண்டாடிய நண்பர்களில் பலரிடம் இருந்து தொலைபேசி குசல விசாரிப்புகள் கூட இல்லை என்பது எத்தனை சோகம்?! பதிவர்கள் அவருக்கு எப்போதுமே பிரியமானவர்கள். பிரியமானவர்கள் மட்டுமில்லை நெருக்கடி தருணங்கள் பலவற்றிலும் உதவியவர்கள். அவர்களில் பலர் அவரை நேரில் பார்க்காததற்கு அன்றாடங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகள் மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஒரு வார இறுதியை அவருக்காக ஒதுக்குங்களேன். ப்ளீஸ்!

இலக்கிய ஏஜென்ட் - 007


மதனும், ராவும் இணைந்து 'சூரியக்கதிர்' என்றொரு பத்திரிகையை கொணர இருப்பதாகவும், நாமக்கல் தொழிலதிபர் ஒருவர்தான் தயாரிப்பாளரென்றும் யட்சினி சொல்லியது. நவம்பரின் மத்தியில் சந்தைக்கு வரலாம் என்கிறார்கள். புதிது புதிதான பத்திரிகைகளின் வருகை ஆரோக்கியமானதுதான். எல்லா பத்திரிகைகளிலும் நமக்கு வேண்டியவர்களும், வேண்டாதவர்களும் எழுதுகிறார்கள். அப்-டேட்டாக இருக்க எல்லாவற்றையும் வாங்கித்தான் ஆகவேண்டி இருக்கிறது. பாக்கெட் பணால் ஆகிறது.

***

எதிர்வினை அல்லது மாற்று அபிப்ராயங்களுக்கான பேட்டையாக வலை ஒரு போதும் இருந்ததில்லை. வேறெந்த ஊடகங்களிலும் இல்லாத கட்/காப்பி/பேஸ்ட் வசதி இருப்பதனால் எழுதியவன் கேட்கிற நேரடி கேள்விகளை வசதியாக மறந்து விட்டு... ஏதேனும் சில வரிகளையோ, வார்த்தைகளையோ காப்பி, பேஸ்ட் செய்து சித்து விளையாட்டைக் காட்ட வசதியாக இருக்கிறது.

***

நண்பர் ஆர்.ஆர் அமெரிக்காவாசி. பதிவில் எப்போதோ குறிப்பிட்டிருந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் புத்தகத்தை ஞாபகம் வைத்திருந்து வரும்போது வாங்கி வந்ததில் எனக்கு ஏக மகிழ்ச்சியும் பெருமையும். எழுத்தூக்கம் முற்றிலும் வடிந்து தேக்க நிலையில் இருக்கும்போது கிடைக்கும் இதுமாதிரியான பரிசுகள் உற்சாகம் கொள்ள வைக்கின்றன.

***

கார்லோ புரூனியைப் பற்றி ஜொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. ஜாக்குலின் கென்னடிக்கு அடுத்து அழகால் புகழ் பெற்ற அதிபரின் மனைவி. தன்னுடைய அறக்கட்டளை வகைக்காக வளைதளம் ஒன்றைத் திறந்துள்ளார். ரசிக மகா ஜனங்களின் வசதிக்காக

***

நடுக்காட்டில் குடியிருப்பு, சதா பெய்து கொண்டிருந்த மழை, கழுதைப்புலியோடு ஒரு சந்திப்பு, யானைக்கூட்டம் சுற்றி வளைப்பு, வாகனம் சேற்றில் சிக்கிக்கொண்டது, கொஞ்சூண்டு ரத்தம் சிந்தியது என 'ரியல் அட்வெஞ்சர்' டூராக இருந்தது பொக்காபுரம் பயணம். அடர்கானகப்புலியாக இருந்து சமவெளி மானாக மாறிவிட்ட அய்யனார், உமா கதிர், சிவக்குமரன் மற்றும் வெயிலானோடு வனம் புகுந்தது அற்புத அனுபவம்.

இந்தக் காட்டிற்கு நான் செல்வது இது ஐந்தாவது முறை. ஒவ்வொரு முறையும் காடு புதிது புதிதான ரகசியங்களை எனக்காக அவிழ்க்கிறது. காடு குறித்த புரிதல்களும், காட்டின் மீதான நெருக்கமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காட்டில் வாழ வேண்டும் என்கிற என் ஆதி வெறியைக் கொஞ்சமேனும் தீர்க்க உதவிய வெயிலானுக்கு அழுத்தமான அன்பு முத்தங்கள்.

கழுதைப்புலிகள் குறித்தும் யானைகள் குறித்தும் கடந்த தினங்களில் திரட்டிய தகவல்களைக் கொண்டு இரு கட்டுரைகளை மும்முரமாக எழுதி வருகிறேன்.

***

இணையத்தில் சோவாறிக்கொண்டிருந்தபோது கனடாவில் வசிக்கும் ஈழத்துக் கவிஞர் மயூராவின் வலைப்பூவைக் கண்டறிந்தேன். எளிய மொழியில் எழுதப்பட்ட மென்மையான கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தது. அதே சமயத்தில் ஈழம் தொடர்பான கவிதைகளில் ஆத்திரமும் அருமையாக வெளிப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 'எனக்கும் உங்களுக்கும் நீண்டதொரு வழக்கு உண்டு' என்ற நெடுங்கவிதையை கந்தகுரு கவச த்வனியில் வாசிக்க... பக்தி இலக்கியத்தில் மயூராவின் கல்வியும், மொழியில் அவருக்கு இருக்கும் லாவகமும் புலப்படுகிறது.

***

புதிய தலைமுறையின் முதலிரண்டு இதழ்களும் சூடான பக்கோடாவைப் போல விற்றுத் தீர்ந்திருக்கின்றன. ஆனால், இதை வைத்துக்கொண்டு அதன் எதிர்காலத்தை தீர்மானித்துவிட முடியாது என தோன்றுகிறது. இதழின் அமைப்பும் உள்ளடக்கமும் முழுக்க முழுக்க இளைஞர்களை... குறிப்பாக கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களை பத்திரிகைகள் வாங்க / படிக்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தாம் முடிந்திருக்கின்றன.

முன்னணி கடைகளில் விசாரித்த வரையில் புத்தகத்தை கேட்டு வாங்கிச் செல்வது என்னைப் போன்ற கிழ போல்டுகள்தாம். எர்கோ, காலேஜர் போன்ற இளமை இதழ்களைப் போல இன்னும் கொஞ்சம் இளகு தன்மை இருந்தால் தேவலை என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.

பெப்ஸி, கோலா, ஜீன்ஸ், ஸ்டெட், பல்ஸர் போல 'புதிய தலைமுறை'யும் இளைஞர்களின் அடையாளம் ஆனால் மட்டுமே சர்குலேஷன் ரீதியான வெற்றியை பெற முடியும் என யூகிக்கிறேன்.

"கலாப்ரியா கவிதைகள்" - கருத்தரங்கம்

காஸ்ட் கட்டிங் காதல் !




ரிசஷன், ஸ்லோ டவுன் பஞ்சாயத்துக்கள் விடுகிற பாடில்லை. விலைவாசி உயர்வும் குறைகிற பாடில்லை. 'காஸ்ட் ஆஃப் லிவிங்'கைப் போலவே ஏகிறிப் போயிருக்கிறது 'காஸ்ட் ஆஃப் லவிங்'கும். கலவரத்தில் இருக்கும் காதல் மன்னர்களின் அவசரகால நிதி நெருக்கடியை அரசாங்கம் கண்டு கொள்ளாததால் காதல் செலவினங்களை கட்டுக்குள் வைக்க அசத்தலான யோசனைகளை வழங்கி இருக்கிறோம். இவை உண்மையான காதலர்களுக்கும், காதல் எனும் பெயரில் கழிசடைத்தனம் செய்வோர்களுக்கும் பொதுவானவையே!

வீக் எண்ட் வீக்கம் குறைய

காதலியோடு கிளம்புவதற்கு முன் ஆர்.சி புக், லைசென்ஸ், இன்ஸூரன்ஸ் பேப்பர்களையெல்லாம் பத்திரமாக வீட்டிலேயே வைத்துவிட்டுக் கிளம்புங்கள். வெள்ளுடை வேந்தர்கள் மறிக்கும்போது 'சத்தியமா காசு இல்ல சார்... வண்டியை வேணா வெச்சுக்கோங்க...' என்று உருண்டு புரண்டு கதறுங்கள். ஐய்யோ பாவம் என்று அப்போதைக்கி நம்ம ஜிகிடி காசு கொடுத்து 'காதல் வாகனத்தை' மீட்டுக்கொடுக்கும். அப்பாலிக்கா எப்பவாவது 'அவுட்டிங் போலாமான்னு' கேட்டுப்பாரு....

சினிமா இனிமா

'ஆர்.கேதான் என் தலைவன்னு' ரத்தத்தில் அடித்துச் சத்தியம் பண்ணுங்க... திருவண்ணாமலை, மருதமலை, மலை மலை, அழகர் மலைன்னு மலைவாழ் மனிதனா மாறி அடுத்தடுத்து கூட்டிப்போய் அதகளப்படுத்துங்க... சினிமான்னாலே பொண்ணு இனிமா ஆயிடும்.

இண்டர்வெல் கார்டு போடுறதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே 'பாஸ் லைன்ல இருக்காருன்னு...'செல்போனோட ஜகா வாங்கிடுங்க... பாப்கார்ன் கொள்ளையர்கள் பட்டறையை எடுத்து வச்சதுக்குப் பிறகு உள்ளே போய் 'ஹனீ, பாப்கார்ன் இல்ல... பன்னுதான் இருக்காம்...!'

பக்தி ஸ்பெஷல்

உபன்யாசம், ஹரிகதா, நாமசங்கீர்த்தனம்னு எங்கே எது நடந்தாலும் இழுத்துக்கிட்டுப் போங்க... பக்திதான் என் சக்தின்னு உளறுங்க... 'வேயுறுதோளிபங்கன் விடமுண்ட கண்டன்னு' மிட் நைட்ல மெஸெஜ் அனுப்புங்க...'ஆஹா... பையன் அகோரி ஆயிட்டா'ன்னு பாப்பா பறந்துடும்.

இஸபகலா

கவியரங்கம், இலக்கியக்கூட்டம் தொடங்கி ஓய்வு பெற்ற நூலகருக்கு பாராட்டு விழா வரைக்கும் ஒரு எலக்கியக் கூட்டத்தையும் மிஸ் பண்ணிடாதீங்க. 'பின் நவீனத்துவத்தின் உள்ளீடற்ற வெளிகளில் நிகழும் கட்டற்ற பிரதியானது இஸங்களின் பொருண்மைத் தத்துவத்தைப் பகடி செய்வது குறித்த நுட்ப அவதானிப்பு இல்லாதவனெல்லாம் என்ன எழுத்தாளனென்று' ஆத்திரமாக வாதாடுங்கள். ரிபரன்ஸூக்கு 'பாழி' மாதிரி பயங்கரவாத நாவல்களை வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்க சாயங்காலம் 'ஸ்பெஷல் கிளாஸ்' இருக்கும்பா பொண்ணு... இதுக்கு மேலயும் தாக்குப்பிடிக்கிற தாட்சாயிணிகளுக்கு இருக்கவே இருக்கிறது எம்.எல்.எம் மீட்டிங்!



காபிபோஸா

கக்கத்துல ஒரு பிளாஸ்க்கும், கையில ஒரு சமஹன் பாக்கெட்டுமாவேத் திரியுங்க... பாப்பா பவளவாய் திறந்து 'லெட் அஸ் ஹேவ் எ காஃபி'ன்னு கேட்டதும் 'கோகேய்ன் ரொம்ப பித்தம்... சுண்டிப்போகும் ரத்தம்... சுக்குக்காப்பித்தான் சுத்தம்'னு டண்டணக்கா போடுங்க...

டேஞ்சர் டேட்டாஸ்

மிஸ்டு கால் கொடுக்கிறது ஒரு வகையான மன வியாதின்னு ருத்ரன் பேட்டி கொடுத்திருக்கிறார். ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் டான்சில் வளர்ந்து அதுவே கேன்சராகிடும் அபாயம் இருக்கிறது என்று வெர்ஜினியா பல்கலைக்கழகம் கண்டு பிடித்திருக்கிறது. ஹேர் ஸ்பிரே யுஸ் பண்ணின பல பேருக்கு மூளைக் கொதிப்பு வந்துள்ளது என போர்பர்ஸில் போட்டிருக்கிறான். லிப்ஸ்டிக் போட்டால் குடல் புண் வரும்னு ஈ-மெயில் வந்ததுன்னு களேபர கலவர டேட்டாக்களை அரை மணி நேரத்திற்கு ஒருக்கா சொல்லிக்கிட்டே இருங்க...

டிரஸ்

துணிதான் காதலுக்கு சனி. ஆடைகளைப் பரிசளிக்கிற காதல்கள் அரைக்காதல்கள். எதுவும் நிலைத்ததில்லையென செண்டிமெண்ட் புரூடா விடுங்கள். அப்படியும் கேட்காத கிளிகளுக்கு பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த படையப்பா சுடிதாரை எடுத்துக்கொடுங்கள்.

பப்பராக்கா பஃபே

டிஸ்கொதேக்கு இழுத்துக்கிட்டு போற அல்ட்ரா அழகு சுந்தரியா?! கவலையே வேண்டாம். பஃப்புக்குள்ள நுழைஞ்சதும் கர்ச்சீப்பை எடுத்து நெத்தியில கட்டிக்கிட்டு 'அண்ணாத்தே ஆடுறார்... ஒத்திக்கோ... ஒத்திக்கோ'ன்னு குத்தி எடுத்துறுங்க... அடுத்தடுத்து அஞ்சலை சாங்குக்கு ஆடினீங்கனா பயவுள்ள... எழவுக்கு ஆடுறவன்னு பட்சி பறந்துடும்.

கிரேட் எஸ்கேப்பூ

பிறந்த நாள், நியூ இயர் என மடிக்கு வெடி வைக்கும் நாட்களில் கவனமாக கண் காணாத இடங்களில் அப்ஸ்ஹாண்ட் ஆவது நல்லது. கால் பண்ணினா 'ஸ்வைன் ப்ளூ' சிம்டம்ஸ் இருக்குன்னு சொல்லுங்க. ஒரு மாசம் ஆனாலும் பார்ட்டி உங்களைத் தேடாது.

மவனே காஸ்ட் கட்டிங் ஐடியா தர்றேன்னு காதலையே கட்டிங் பண்ண பாக்கேறியேடா பாவிங்கறீங்களா...! லூஸ்ல விடுங்க பாஸூ...!

டிஸ்கி: 30-09-09 தேதியிட்ட குமுதம் இதழில் வெளியான 'காஸ்ட் கட்டிங் காதல்' எனும் எனது விநோத வஸ்துவின் கரட்டு வடிவம். இப்படி எழுதியதற்காக 'இரண்டு பாட்டியாலா சுடிதார்கள்' அபராதம் என்கிறாள் கேண்டி!

ரிலாக்ஸ்!



'பேப்பர் விக்கிறதுக்காக கடைகளில் பத்து கவர்ச்சிக்கன்னிகளைக் கூட நிற்க வைச்சுடுவார்' என்று இவரைப் பற்றி வேடிக்கையாகவோ அல்லது வினையமாகவோச் சொல்வார்கள். 32 வருடங்களாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் பழம் தின்று கொட்டை போட்ட கிழட்டுச் சிங்கம் 'சின்னன் தாஸ்'தான் அவர். சர்க்குலேஷன் எனும் கல்லில் நார் உரிக்கிற சமாச்சாரத்தில் இவர் ஒரு தாதா!

பென்னட் & கால்மென் பதிப்பகத்தின் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரை தெற்குப் பிராந்தியத்தின் 'பிஸினஸ் டெவலப்மெண்ட் இயக்குனராக' டை.ஆ.இ நியமனம் செய்திருப்பதுதான் நியூஸ் பேப்பர் இண்டஸ்ட்ரீயின் தற்போதைய பரபரப்புச் செய்தி. இவரது வருகையை அடுத்து சென்னையில் நிகழும் 'தி ஹிந்து - டைம்ஸ் ஆஃப் இந்தியா - டெக்கான் க்ரோனிக்கல்' - மும்முனைப் போட்டிகள் தீவிரமடையும் என்பதையும், கோயம்புத்தூரில் கால் பதிக்கும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் போன ஜென்மத்துத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதையும் ஆரூடமாகச் சொல்கிறேன்.

இவரது தாத்தா வி.எம். நாயர் மலையாள மனோராமாவில் எடிட்டராகவும், பாட்டி பாலாமணி கேரளாவின் புகழ் பெற்ற கவிஞராகவும் இருந்தவர். அம்மா மாபெரும் கவிஞர் கமலா சுரையா (கமலா தாஸ்)!

சின்னன் தாஸூக்கு கோவையில் பலத்த சவால் காத்திருக்கிறது :)

***

அரிந்தம் சவுத்ரியின் சகாக்கள் அஜ்மல் கசாப்பின் ஒரெயொரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, எர்டெல் இணைப்பு, கோடக் மஹிந்திரா வங்கியில் கணக்கு, நீதிமன்ற முத்திரைத்தாளில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் (இதில் அபு சலீமின் புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தது) ஆகியவற்றை வெறும் எட்டாயிரம் ரூபாய் செலவில் செய்து முடித்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் செலவழித்தால் ரேஷன் கார்டே கிடைத்திருக்கும் என்கிறார்கள் சண்டே இந்தியன் ஆசாமிகள்.

இந்தியாவைப் போன்ற ஊழல் மலிந்த தேசத்தில் இதுமாதிரியான கேலிக்கூத்துக்கள் ஆச்சர்யமில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட திறந்த மடமாகி விட்டது என்பதற்கான எளிய உதாரணங்கள் ஏர்டெல்லும், கோடக் மஹிந்திராவும்.

பார்த்துக்கொண்டே இருங்கள் முகம்மது அப்சலுக்கும், அஜ்மல் கசாப்பிற்கும் எவனாவது ஒருவன் ஜாமீனே வாங்கிக் காட்டுவான். சில்லாயிரம் செலவில்...

****


மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம் ஆண்டுதோறும் நடத்தும் உழவர் திருவிழாவிற்கு தேசம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் வருவார்கள். எனக்கு மூன்று நாட்களாக அங்கேதான் பட்டறை. கர்நாடாகா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் பலரோடும் உரையாடிக்கொண்டிருந்ததில் தமிழ்நாட்டு விவசாயிகள் அளவிற்கு அவர்களுக்குத் துயரங்கள் இல்லை என்பதை உணர முடிந்தது. விவசாயத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு எப்படி என்று ஒரு டர்பனிடம் கேட்டேன் லேசாக முறைத்து "நாங்கள்தானய்யா அரசாங்கம்" என்றார்.

கர்நாடகாவிலிருந்து தன் பேரப்பிள்ளைகளோடு வந்திருந்த எண்பது வயதுப் பெரியவர் கோபிச்செட்டிப்பாளையத்திலிருக்கும் ஒரு கரும்புத் தோட்டத்தைத் தாம் பார்க்க விரும்புவதாகவும் உடனே ஏற்பாடு செய்யும்படியும் அதிகாரி ஒருவரோடு வாதாடிக்கொண்டிருந்தார். எண்பது வயசுக்கு மேலேயும் செய்தொழிலில் இருக்கிற பிடிப்பை வாய்பிளந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

'கோக்கனட் ஸ்வீட் சிப்ஸ்' தந்தார்கள். உலர வைக்கப்பட்ட தேங்காயை கும்பகோணம் சீவல் தடிமனுக்கு சீவி, அதில் இனிப்பு உள்ளிட்ட ஜாலக்குகளைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட சிப்ஸின் சுவை 'டாப் கிளாஸ்'. மத்திய அரசின் தேசிய விவசாயப் புதுமைப் பொருள் திட்டத்தின் தயாரிப்பாம். அரசாங்க தயாரிப்பொன்று இவ்வளவு சுவையாகவும், தரமாகவும் இருந்தது ஆச்சர்யம்!

***

ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடக்க இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து வருகிற நண்பர்களின் வசதிக்காக அண்ணாச்சி ஏற்பாட்டில் மருதமலை அடிவாரத்தில் ஒரு பங்களாவைப் பிடித்திருக்கிறோம். சேக்காளிகள் மட்டுமல்ல 'டூ' விட்டவர்களையும் இருகரம் நீட்டி அன்போடு அழைக்கிறோம்.

***

ஆக்கிரமிப்பிற்கு எதிரான மாவோவின் 'ஹிப்-ஹாப்' திருவிழா வருகிற 26, 27 தேதிகளில் (சனி, ஞாயிறு) வான்கூவர் நகரில் நிகழ்கிறது. கனடாவாழ் நண்பர்கள் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

***

சசவுரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் மேலாண்மை மாணவர்களிடத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். தலைப்பு வழக்கம் போல 'ஹேபிட் ஆஃப் ரிடீங்'. இந்த முறை பேச்சைத் துவங்குவதற்கு முன் விரல் வித்தை நடிகர், வில் நடிகர், பெரிய இடத்து மாப்பிள்ளை, கண்ணழகி, உச்ச நட்சத்திரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் பிரசித்தி பெற்ற கேள்விகளைக் கேட்டேன். பெரும்பாலும் பெண்கள் பகுதிகளில் இருந்து பட், பட்டென்று பதில்கள் வந்தன. ஆக, வார இதழ்களில் வரும் சினிமாச் செய்திகளையேனும் மாணவர்கள் வாசிக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு செய்தித்தாள்கள் எப்படித் தயாராகின்றன? செய்தி அச்சில் இடம் பெயர்வதற்கு முன் நிகழ்கிற சங்கிலித் தொடர் சுழற்சிகள், அதிகாலையில் வீடு தேடி பேப்பர் வரும் மெக்கானிஸம், கல்விக்கும் எதிர்காலத்திற்கும் செய்தித்தாள்களைப் பயன்படுத்தும் விதம் என்பது பற்றியெல்லாம் தீவிரமாகப் பேசினேன். அரங்கத்தில் இருந்த பாதிப்பேர் உறங்கிப் போனார்கள்.

புண்ணரசியல்

ஞாநி, கமல்ஹாசன், சுஜாதா, மணிரத்னம் போன்றவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். இந்த லிஸ்டில் சுஜாதாவைத் தவிர்த்த ஏனைய கலைஞர்கள் பகுத்தறிவாளர்களாக இருந்தபோதும், சமூகத்தின் மீதான நிஜ பொறுப்புணர்ச்சி கொண்டவர்களாக இருந்தபோதும் பிராமண குலத்தில் பிறந்து தொலைத்த பாவத்தால் வாழ்நாள் முழுவதும் அவமானப்படுத்தப்பட்டவர்கள். படுகிறவர்கள். இவர்கள் தங்களது அடையாளங்களை முற்றிலும் துறந்தபோதும் பகுத்தறிவாளர்களென்றும், முற்போக்குச் சிந்தனையாளர்களென்றும் தங்களைக் காட்டிக்கொள்கிற கூட்டம் இவர்களை ஏற்றுக்கொண்டதே இல்லை. காத்திரமான படைப்புகளோடு இவர்கள் வெளிப்படும் ஒவ்வொரு தருணங்களிலும் படைப்பை முன் வைக்காமல் இவர்களது பிறப்பை முன் வைத்து கழிவறை வாசகங்களால் அர்ச்சனை செய்தவர்கள் இன்றைய சமூக நீதிக் காவலர்கள். ஒரு படைப்பாளி தன் நேர்மையை நிரூபணம் செய்யும் பிரயத்தனத்திலேயே ஆயுளைக் கழிக்க வேண்டி இருப்பது தமிழ்ச் சமூகத்தின் சாபம்.

சுயமரியாதை என்பதில் அடுத்தவர் மரியாதையும் இருக்கிறது என்பதை மறந்த இந்த மந்தைக் கூட்டங்கள் கமல்ஹாசனில் உன்னைப் போல் ஒருவன் ஓர் இந்துத்வா திரைப்படம் என்கிற பிம்பத்தை உருவாக்க பதைபதைப்புடன் வலைகளிலும், பத்திரிகையிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. படத்தில் காட்டிய மூன்று தீவிரவாதிகளும் முஸ்லீம்களே என்பதுதான் இந்த வெண்ணெய் வெட்டிகள் முன் வைக்கும் வாதம். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்பதைச் சித்தரிக்கும் இந்துத்வா மனோபாவம் கமல்ஹாசனுக்கு என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். கமல்ஹாசன் மதச்சார்பற்றவர் என்பதை அவர் தன் சொல்லால், செயலால், படைப்பால் நிரூபணம் செய்துகொண்டிருக்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள் அத்துனை பேரும் இஸ்லாமியர்கள் என்பதும். சினிமாவிலும், இலக்கியத்திலும் யதார்த்தம் இருக்கவேண்டும் என்று கூப்பாடு போடுகிற அறிவு ஜீவி முண்டங்கள் இந்த யதார்த்தத்தை ஏற்க மறுப்பதேன்? சிறுபான்மை, மனித நீதி என்றெல்லாம் இவர்கள் அரை நூற்றாண்டு காலமாய் அடித்து வரும் ஜல்லியால்தான் இந்தியாவில் தீவிரவாதத்தை வேரறுக்க இயலவில்லை. கட்டுப்படுத்தும் சட்டங்களை, கடுமையான தண்டனைகளை தொடர்ந்து விமர்சிக்கிற இதே துப்பு கெட்டவர்கள்தாம் பாராளுமன்றத் தாக்குதலின்போதும், மும்பைத் தாக்குதலின் போதும் தேசத்தின் பாதுகாப்பையும் கேலி செய்து கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார்கள் என்பதை நாம் மறக்க வேண்டியதில்லை.

மதக்கலவரமும் தீவிரவாதமும் ஒன்றல்ல. குஜராத்திலும், அயோத்தியிலும் நிகழ்ந்தது இருதரப்பினர் மனங்களிலும் காலம் காலமாக அடியாழத்தில் புரையோடிப் போயிருந்த வன்மத்தில் வெடித்த கலவரம். ஆனால் தீவிரவாதம் அப்படியல்ல. அதற்கு மதத்தைப் பரப்புதல், எதிரிகளை வேரறுத்தல் என நேரடிக் காரணங்களும் நாடு பிடித்தல், கலாச்சாரங்களை அழித்தல் போன்ற மறைமுக காரணங்களும் நிரம்பியது. 'இந்துத்வா' இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. அதன் லாபமும், நட்டமும் நமக்கே. ஆனால் இஸ்லாமிய அடிப்படை வாதம் எனும் பயங்கரவாதம் மொத்த மானுடத்திற்கும் எதிரானது. நாடு, நகர எல்லைகளைத் தாண்டி உலகெங்கும் வேரூன்றி நிற்கிறது. உலகெங்கிலும் இருக்கிற தீவிர வாத குழுக்களில் பெரும்பான்மை இஸ்லாமிய குழுக்கள் என்பதை மறுக்க எப்பேர்ப்பட்டவனாலும் முடியாது. இந்தியனோ, இந்துவோ எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, ஆப்கனிலோ குண்டு வைத்ததாய், மக்களை நோக்கிச் சுட்டதாய் வரலாறு இல்லை.

கந்தகார் விமானக் கடத்தலில் ஈடுபட்டவர்கள், பாராளுமன்றத்தைத் தாக்கியவர்கள், மும்பைபிலும், கோவையிலும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்கள், மும்பையில் பொதுமக்களை குருவிகளைப் போல சுட்டுக்கொன்றவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள். மேற்கண்ட பயங்கரங்கள் மொத்த தேசமும் ரத்தமும் சதையுமாய் எதிர்கொண்டது. இதன் கொடிய முகங்களைச் சித்தரிக்கும் போது இதனைச் செய்தவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகிற ஜிகாத்தின் குழந்தைகள்தாம் என்பதைச் சொல்ல எவனுக்குப் பயப்பட வேண்டும் ?!

நாமெல்லாம் பிரிவினைவாதிகள் இல்லையென்றபோதும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்குச் சப்பைக்கட்டு கட்டும் கம்மனாட்டிகளைக் கண்டால் ஆத்திரம் பொங்கி ஜெரிமி பெந்தாமை அழைக்க வேண்டி இருக்கிறது. அரசியலைப் பாடமாகப் படித்தவர்களின் கடவுள் ஜெரிமி. பெரும்பான்மையோரின் மட்டற்ற மகிழ்ச்சி என்ற கோட்பாட்டை மானுட குலத்திற்கு வழங்கிய மாபெரும் சிந்தனையாளர் அவர். ஜெரிமி சொன்னதை ஒரு பயலும் கேட்கவில்லை. அதன் விளைவாக செசன்யா துவங்கி நாரிமன் வரை மிஸ்டர் பொதுஜனம் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். அதென்ன கோட்பாடு?!

ஒரு காலணியில் இருக்கிற 100 பேர்களில் 99 பேர் இந்துக்கள் ஒருவர் மட்டும் இஸ்லாமியர் என்று வைத்துக்கொள்வோம். இந்த 99 பேர்களும் அந்த ஒருவரைத் தன் சொந்த சகோதரர்களாகப் பாவித்து தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ஒருவராகிய இஸ்லாமியர் தான் ஒடுக்கப்படுவதாகவே உணர்வார். காரணம் ரொம்ப சிம்பிள் அவர் ஒரு மைனாரிட்டி! இந்த ஒரு மைனாரிட்டி தான் மைனாரிட்டி என்கிற சைக்காலஜிகல் பிரச்சனையில் 99 பேரையும் பகைத்துக்கொள்வார். எதிர்ப்பார். இந்த ஒருவரின் மகிழ்ச்சிக்காக 99 பேரையும் ஒடுக்க வேண்டியதில்லை என்பது ஜெரிமியின் வாதம். இதுதான் இந்தியாவில் நிகழ்கிறது. மைனாரிட்டிகளைக் குறித்தே கவலைப்படும் அரசாங்கங்களால் ஒடுக்கப்பட்ட 99 பேர் பொங்கி எழும்போது அந்த ஒருவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.

நான்கு பேர் நகர் புகுந்து நானூறு பேரைச் சுடுவதை ஒரு கூட்டம் மனித நீதியின் பெயரால் நியாயம் கற்பித்துக்கொண்டிருக்குமானால் அந்த எழவைப் பேசுகிறவனையும் சேர்த்தல்லவா ஒழிக்க வேண்டும். மனிதனுக்கே இல்லாத உரிமை மிருகங்களுக்கு எதற்கு என்று கமல் எழுப்பும் கேள்விதான் உ.போ.ஒருவனின் நேரடி அரசியல். இதைப் புரிந்து கொள்ள முடியாத ஈர வாரியல்கள் நுண்ணரசியல், புண்ணரசியலென்று புண்ணாக்குத் தனமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

முன் முடிவுகளோடு படைப்புகளை அணுகுவது ஓர் அயோக்கியத்தனம். அந்த அயோக்கியத்தனத்தை அனுமதிப்பதும் கண்டும் காணாமல் இருப்பதும் பொறுக்கித்தனம். நான் அயோக்கியனும் அல்ல. பொறுக்கியும் அல்ல.

சோர்விலன்

சோர்விலன் எனும் வள்ளுவப்பதம் அட்சர சுத்தமாகப் பொருந்திப் போவது ஜ்யோவ், சிவராமன் இணைக்குத்தான். வாழ்வு தரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், வியாபார நோக்கங்கள் இல்லாமல், விமர்சனங்களையும் சகித்துக்கொண்டு ஒரு நிகழ்வை நடத்தி அல்லது நடாத்தி முடிப்பதென்பது சாமான்ய காரியம் அல்ல.

இணைய தமிழின் வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்தால் எழுத்துரு, திரட்டிகள், பதிவர் பட்டறை வரிசைகளில் சிறுகதைப் போட்டிக்கும், சிறுகதைப் பட்டறைக்கும் நிச்சய இடம் உண்டு. ஆக்கப்பூர்வமான இப்பணிகளுக்கு இவர்களிருவரும் தங்கள் கைக்காசைக் கரைப்பது கவலை அளிக்கிறது. உரையாடல் அமைப்பின் உறுப்பினர்களையும், புரவலர்களையும் அதிகப்படுத்துவதன் மூலம் ஓரளவு சுமையைக் குறைக்கலாம் என்பதை ஓர் அபிப்ராயமாகச் சொல்லிக்கொள்கிறேன்.

சிறுகதை சிருஷ்டி பூர்வமானது. அதைக் கற்றுக்கொடுக்க முடியாது என்பது என் நம்பிக்கை. ஆனால், அதன் தொழில்நுட்பங்களும், சூத்திரங்களும் பகிர்வுக்குறியவை என்பதை பட்டறையில் கலந்து கொண்ட பதிவர்களின் பத்திகள் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அவர்களது பொறுப்பான பதிவுகளுக்கும் வந்தனங்கள்.

***

கோவை வருவதற்கான ரயிலில் ஓப்பன் டிக்கெட் எடுத்து, டி.டி.ஆரைப் பார்த்து அதை ஸ்லிப்பர் கிளாஸாக மாற்றி ஊர் வந்து சேர்ந்தாள் கேண்டி. இந்த நைச்சியம் சர்வ நிச்சயமாக சென்னை கற்றுக்கொடுத்தது. மிரண்ட மான் குட்டியைப் போல இருக்கும் இவளைப் போய் சென்னைக்கு அனுப்பி விட்டீர்களே என்று கேட்காத நபரில்லை. ஆனாலும், அவளது குழந்தைத் தன்மையை சாகடிக்க சென்னையைக் காட்டிலும் பெரிய களம் எது?!

மிஷ்கினின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தால், "நீங்கள் கேட்கிற சமாச்சாரத்திற்கு என்னைக் காட்டிலும் இன்னார் பொருத்தமாக இருப்பார்" என்று கைகாட்டி விடுகிற பொழைக்கத் தெரியாத கோயிந்துக் குணம் குடும்பத்திற்கு கேடு. ஒரு வீட்டில் இரண்டு கோயிந்துகள் வேண்டாமே என்றுதான் உலகைப் படித்து வர அவளை சென்னைக்கு அனுப்பினேன்.

***

தமிழ்ப் பதிப்புலகம் பற்றிய ஆர்.வெங்கடேஷின் கட்டுரையும், தமிழ் வலையுலகம் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணணின் கட்டுரையும் சமீபத்தில் படித்த முக்கிய பதிவுகள்.

***
சன் பிக்ஸர்ஸின் சச்சின் டெண்டுல்கர் 'விஜய் ஆண்டனி'தான். அவர் குத்துற குத்தில் தியேட்டரில் கூட்டம் அம்முகிறது. இயக்குனர்களோ வருகிற ரசிகர்களை கும்மி அனுப்புகிறார்கள். 'நினைத்தாலே இனிக்கும்' படத்திற்கு சகபதிவர்கள் எழுதிய விமர்சனங்களை நம்பி தியேட்டருக்குப் போனால் உதை காத்திருக்கிறது.

படத்தில் கல்லூரியெங்கும் திரியும் 'ரிச்சி கேர்ள்ஸ்'களை விட சுமாராக இருக்கிறார் பிரியாமணி. அம்மையாரின் குரல்வளமும் அமோகம். அவரை எவ்வித முகாந்திரமும் இன்றி காதலிக்கிறார் சிக்ஸ்பேக் லிஸ்டில் லேட்டஸ்ட் வரவான பிரித்வி. பாஸ்போர்ட் சைஸ் போட்டாவை பாக்கெட்டில் வைத்துக்கொண்டே திரிகிற ஒரு காரணம் போதாதா அம்மையாருக்கும் காதல் வைரஸ் தொற்றிக்கொள்ள... சரி விடுங்கள் கதையை வேறு விமர்சனங்களில் படித்திருப்பீர்கள்.

காதலி எலெக்சனில் தன்னை எதிர்த்து நிற்கிறாரென்றால் உடனே வேட்பு மனுவை வாபஸ் வாங்கிக்கொண்டு போடுங்கம்மா ஓட்டு பிரியாமணியைப் பார்த்துன்னு கூவுகிறவன்தானே ஐடியல் காதலன். அதை விட்டுட்டு புண்ணாக்கு மாதிரி...

காதலிப்பது எப்படின்னு ஒரு பொஸ்தவம் போட்டாத்தான் சரிப்படும் போலருக்கு...

படங்கள்: ஆதிமூலகிருஷ்ணன்