ராமசுப்ரமண்யன் எம்.ஏ. தமிழ்

ற்றது தமிழ் திரைப்பட இயக்குனர் ராம் என்கிற ராமசுப்ரமண்யத்திற்கு கோவை நாய்வால் திரைப்பட இயக்கத்தின் சார்பாக ஞாயிறன்று நிகழ்ந்த பாராட்டுவிழாவிற்கு சென்றிருந்தேன். இயக்குனர் பாலுமகேந்திரா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவ்விழாவில் கலந்து கொள்ள இயக்குனர் ராம் கொட்டும் மழையிலிருந்து சென்னையிலிருந்து பைக்கிலே வந்துவிட்டாராம்.

மேக்கிங் ஆஃப் கற்றது தமிழ்

இயக்குனர் ராம் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் எம்.ஏ தமிழிலக்கியம் படித்துவிட்டு இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியர். கல்லூரி நாட்களில் கவிதைகள், கதைகள் எழுதுவதில் சிறந்து விளங்கிய இவரது ஒரு சிறுகதைக்கு லில்லி தேசிய விருது கிடைத்திருக்கிறது. கற்றது தமிழ் திரைப்படத்தின் கேமராமேனாக பாலுமகேந்திரா பணியாற்றினால் சிறப்பாக இருக்கும் என அவரை நா.முத்துக்குமார் மூலம் அணுகி கதை சொல்லியபோது அவரிடம் பாலுமகேந்திரா இரண்டு விஷயங்கள் சொல்லியிருக்கிறார். ஒன்று நீ என்னிடம் சொல்லியபடியே இப்படத்தை எடுப்பாயா? மற்றொன்று இத்தனை அருமையான கதைக்கு நான் கேமராமேனாக செயல்பட்டால், நானே இப்படத்தை உங்களுக்கு எடுத்து கொடுத்துவிட்டதாகச் சொல்வார்களே? எனக் கேட்டிருக்கிறார். பாலுமகேந்திராவினால் ஈர்க்கப்பட்ட ராம் திரைப்படம் எடுக்கும் யோசனையை ஒத்திவைத்துவிட்டு அவரிடமே உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறார். சில வருடங்கள் கழித்து அதே கதையைத் திரைப்படம் எடுக்க முயலுகையில் நல்ல சினிமாவை எடுப்பதற்குள் தமிழ் சினிமா இயக்குனர்கள் படும் அத்தனைப்பாடுகளையும் அனுபவித்திருக்கிறார். இப்படத்தின் கதையை கேட்டு இசையமைக்க சம்மதித்த யுவன் சங்கர் ராஜா தாம் வழக்கமாக வாங்கும் தொகையில் பாதியை மட்டுமே சம்பளமாகப் பெற்றிருக்கிறார். இப்படத்தின் மூன்று பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். சுமார் எழரை மணி நேரம் படமாக்கப்பட்ட இப்படத்தின் பல்வேறு காட்சிகளும், பாடல்களும் நீளம் கருதி கத்தரிக்கப்பட்டுவிட்டது. படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். படத்தை முதன்முதலில் பாலுமகேந்திராவிடம் போட்டுக் காண்பித்தபோது அவர் சொன்ன வார்த்தை 'இப்படம் ஆசியாவின் ஐந்து சிறந்த படங்களுள் ஒன்றாக இடம் பிடிக்கும்' என்றாராம். இனி விழாவில் பேசியவர்களிடமிருந்த வந்த சுவாரஸ்யங்கள்....

நா. முத்துக்குமார்:

"நாளைய தமிழ் சினிமாவை ஆளப்போவது பாலுமகேந்திராவின் பரம்பரைகள்தான். ஏற்கனவே பாலா இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் திரைப்படங்களைத் தந்து கொண்டிருக்கிறார். இதோ ராம் கற்றது தமிழ் கொடுத்திருக்கிறார். பாலாவிடமிருந்து அமீர். அமீரிடமிருந்து வெற்றித்திருமகன், சுரேஷ்குமார் என வாழையடி வாழையாக இயக்குனர்கள் வந்துகொண்டே இருக்கிறோம். நானும் விரைவில் இயக்க இருக்கிறேன். இப்படத்தின் மூன்று பாடல்களையும் நான் வெவ்வேறு சூழலில் இருந்தபோது அவசர அவசரமாக எழுதிக்கொடுத்தேன். கர்ப்பமுற்ற மனைவியோடு ஸ்கேன் செண்டர் வந்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த வேளையில் 'இன்னும் ஒரிரவு' பாடலை எழுதினேன். என் மனைவியின் சீமந்தம் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் 'பறவையே எங்கு இருக்கிறாய்' பாடலை எழுதினேன். தமிழ் படித்தவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது என்பதில் உண்மையில்லை. என்னுடைய தந்தை ஒரு தமிழாசிரியர். எங்கள் வீட்டில் சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் இருந்தன. அதனாலேயே தமிழ் மேல் எனக்கு ஆர்வம் ஏற்பட்டு கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இளங்கலை இயற்பியலில் 80% மதிப்பெண்கள் பெற்றும் தமிழ் படிக்கும் ஆர்வத்தில் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை வகுப்பில் சேர்ந்த முதல் நாளில் எனக்கு நேர்ந்த சொந்த அனுபவமே பிரபாகரனிடம் கல்லூரி விரிவுரையாளர் பேசும் காட்சியானது. குரூப்1 மற்றும் ஆட்சிப்பணி தேர்வுகளில் தமிழ் கற்றவர்கள் சோபிக்க முடியாமல் போவதற்கான முக்கிய காரணம் அவர்களது முதன்மைத் தாளில் கேட்கப்படும் 200 கேள்விகளும் ஆங்கிலத்தில் இருப்பதுதான். அந்தக் கேள்விகளை முழுவதுமாகப் புரிந்துகொண்டு எதிர்கொள்ளும் அளவிற்கு ஆங்கில அறிவு இல்லாததுதான். அந்த முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் எளிதாக மற்ற பேப்பர்களைத் தமிழிலேயே எழுதி ஜெயித்துவிடலாம். உண்மையில் தமிழிலக்கியத்தை ஆழ்ந்து, உணர்ந்து படித்தவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை. கற்றது தமிழ் ஒரு அரசியல் படம். அது ஒரு மனு. அதன் நுட்பமான அரசியலைப் புரிந்துகொள்ளுங்கள். இன்னும் பலருக்கு இப்படம் போய் சேரவில்லை. ஒரு இயக்கமாக்கி இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்."

பாலுமகேந்திரா:

"இன்றைய ஒளிப்பதிவாளர்கள் காட்சியில் தங்களது இருப்பை ஜனங்களுக்கு, தயாரிப்பாளர்களுக்குத் தெரியப்படுத்துகிற போலியான எண்ணத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு உன்னதமாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பாலுமகேந்திரா எனும் காமேராமேனுக்குப் பின்னே பாலுமகேந்திரா என்ற இயக்குனர் இருக்கிறார் என்பதே காரணம்.

யதார்த்த சினிமாவில் ஒளிப்பதிவு என்பது அந்தக் காட்சியில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கே தெரியாமல் அந்தக் காட்சி பதியப்பட்டது என்ற மனநிலையைப் பார்வையாளனுக்கு ஏற்படுத்தும் அளவிற்கு இருக்க வேண்டும். அறிமுக ஒளிப்பதிவாளர் கதிர் இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

நான் மூடுபனி படத்திலிருந்து அது ஒரு கனாக்காலம் வரை சுமார் இருபத்தைந்து வருடங்கள் இளையராஜாவோடு பணியாற்றி வருகிறேன். நான் முதன்முதலில் ராஜாவோடு பணியாற்றும்போது அவரிடம் சொல்லியது ஒன்றே ஒன்றுதான். அது 'பின்னணி இசையமைக்கும்போது எனது அர்த்தமுள்ள மெளனங்களை கலைத்துவிடாதே' என்பதுதான். மெளனங்கள் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளவை. என் மெளனத்தையே உன்னால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் என் வார்த்தைகளை எப்படி புரிந்துகொள்வாய்? ராஜாவும் பின்னனி இசையில் என் மவுனங்களை சிதைக்காமல் இருப்பார். அப்படி ராஜா வீட்டுக்குப் போகும்போது யுவன் வெளக்கெண்ணெய் முகத்துடன் உம்மென்று இருப்பான். என்னைப் பார்த்தால் ஒரு வணக்கம்கூட அவனுக்கு சொல்ல தோண்றாது. நான் ராஜாவிடம் கேட்பேன் ஏன் இந்த பையன் இப்படி இருக்கிறான் என்று. அந்த வெளக்கெண்ணையிடமிருந்து உன்னத இசை வெளிப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சுப்பு என்னிடம் போட்டுக் காண்பித்தபோது எனக்கு ஏற்பட்ட ஓரே பயம் இத்தனை உன்னதமான ஒரு க்ளைமாக்ஸை பின்னணி இசை என்ற பெயரில் கோரமாக்கிவிடக்கூடாதே என்பதுதான். உடனே சுப்புவின் மூலம் யுவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'யுவன் வாழ்க்கையில் அரிதான சந்தர்ப்பங்கள் எப்போதாவதுதான் ஏற்படும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்' என்றேன். தம்பி யுவன் அதை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டான்.

படத்தின் துவக்கம் முதம் முடிவு வரை ஓரே ஷாட்டில் (சிங்கிள் ஷாட்) எடுக்கப்பட்டது என்ற உணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவதே நல்ல படத்தொகுப்பு. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் உழைப்பு என்னைப் பிரமிக்க வைக்கிறது.

என்னுடைய உதவி இயக்குனராக இருந்த நா.முத்துக்குமார் சினிமாவிற்குப் பாட்டெழுதப்போகிறேன் எனக்கிளம்பியபோது நான் மிகுந்த ஆத்திரமுற்றேன். என் வாழ்நாளில் அதுவரை உபயோகித்திராத கெட்ட வார்த்தையொன்றை உபயோகித்து திட்டி அனுப்பி வைத்தேன். இவனும் அந்த சாக்கடையில் கலந்துவிடக்கூடாதே என்ற கவலைதான் காரணம். ஆனால் எனது மகன் முத்துக்குமார் நல்ல அற்புதமான, கவித்துவமான பாடல்களை எழுதிக்கொண்டிருக்கிறான். நல்ல பாடல்களை கேட்கும்போது இவன் எழுதியதா என்றுகூடத் தெரியாமல் ரசிக்கிறேன். ஆனால் நல்ல பாடல்களை கேட்கும்போது அதை இவன் தான் எழுதியிருக்க வேண்டும் என்று நிணைத்துக்கொள்ளும்படி எழுதி வருகிறான் முத்துக்குமார்"

இயக்குனர் ராம்:

"உலகத்திலேயே சர்வாதிகாரம் மிக்க வாகனம் பஸ்தான். டிரைவர் நிறுத்தும்போதுதான் சாப்பிட முடியும், சிறுநீர் கழிக்க முடியும் என்ற நிலைமை. அதிலும் துருபிடித்த ஜன்னல் கம்பிகள் சட்டைகளை இழுத்து பதம் பார்க்கத் துடிக்கும் அந்த சர்வாதிகார பயணத்தை நான் வெறுக்கிறேன் என்பதால் எப்போதும், எங்கும் எனது பைக்கில் போவதையே நான் விரும்புகிறேன். அப்படி செல்கையில் பல்வேறு மனிதர்களை, ஊர்களை, நிலத்தின் தன்மைகளை நான் உள்வாங்கி கொள்ள முடிகிறது. எனது படத்தில் இடம்பெற்ற பல்வேறு லோக்கேஷன்களை நான் பைக்கில் பயணிக்கும்போதுதான் கண்டறிந்தேன். தவிரவும் எனக்கு விருப்பப்படும்போது நிறுத்திக்கொள்ளவும், ஒய்வெடுக்கவும் முடியும்.
காத்திருப்பின் உச்சம் சினிமா. கதையை யோசிக்க, திரைக்கதை தயாரிக்க, அதன் கதையை சொல்லி தயாரிப்பாளரை சம்மதிக்க வைக்க, கதைக்குப் பொறுத்தமான பாத்திரங்களின் தேதிகளைப் பெற, இசையமைக்க, பாடல்களை எழுத, தொழில்நுட்பக் கலைஞர்களை சேர்க்க எனப் பலகாலம் காத்திருக்க வேண்டும். இப்படத்திற்காக நான் பலகாலம் காத்திருந்தேன்.
என்னால் என்னுடைய படத்தை மீண்டும் ஒரு முறை கூட பார்க்க இயலவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும்போது அடடா இதை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாமே என்றுதான் ஒவ்வொரு முறையும் நிணைக்கத் தோன்றுகிறது. ஒரு இயக்குனரின் சாபக்கேடும் இதுதான்.
என் படம் குறித்து பல்வேறு பட்ட விமர்சனங்கள் வந்துகொண்டுதானிருக்கின்றன. எனது படம் சிலரை ஆத்திரப்பட வைத்திருக்கிறது. ஒரு படைப்பு ஒருவரை ஆத்திரப்பட வைத்திருக்கிறது என்றால் கலை வெற்றி பெற்றுவிட்டது என்று பொருள். நான் எதிர்பார்க்கும் ஓரே விமர்சனம் என்னுடைய ஆசான் இயக்குனர் பாலுமகேந்திராவின் விமர்சனத்தை மட்டும்தான் அவரே 'ஆசியாவின் ஐந்து சிறந்த படங்களுள் ஒன்று' என சொல்லியபின் வேறு விமர்சனங்கள் குறித்து எனக்கு கவலையில்லை.
திரைப்படம் உள்வரிகளால் நிரப்பட்டது. இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் சப்டெக்ஸ்ட்களால் நிரம்பியிருக்கிறது. அந்த நுட்பமான உள்வரிகளை பார்வையாளன் உணர்ந்து கொண்டு ரசிக்கும்போது அதை சொல்லி பாராட்டும்போதுதான் நான் உண்மையில் மகிழ்வேன். எனவே அந்த சப்டெக்ஸ்டுகளைப் புரிந்து கொள்ள படத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள்".

Comments

செல்வேந்திரனை எப்படிப்பாராட்டுவது எனத் தெரியவில்லை.அழைப்பிதழைப் பெற்றுக்க்கொண்ட போதிலும் வரச் சாத்தியமற்ற சூழல் என்னைப் போக விடவில்லை.இவ் அற்புதமான நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியவில்லையென மனம் முழுக்க துயரச்சாரல் படிந்திருந்தது.இன்றைய காலையிலேயே விழா பற்றிய முழு விவரங்களையும் படிக்கக்கிடைத்ததில் பெரும்மகிழ்ச்சி.நன்றி நண்பரே...!
Anonymous said…
மிக அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள் செல்வா!
நன்றி!
பகிர்வுக்கு நன்றி, செல்வேந்திரன்!
selventhiran said…
ரிஷான், தென்றல், வெயிலான் வருகைக்கு நன்றி!

Popular Posts