அய்யனார் கம்மா - வாசக அபிப்ராயம்

மாட்டுக்கு லாடம் அடிக்கிற சஞ்சீவி, பேக் பைப்பர் குமரன், காதல் தூதர் வர்ஷினி, கோயில்கட்டி முருகன், மெடிக்கல் ஸ்டோர்ஸ் பழனிச்சாமி, வெத்தலப்பெட்டி ஐயப்பன், செம்பட்டைக் கிழவி என புழுதிக்காட்டில் புரண்டெழுகிற குணச்சித்தர்கள் வண்டி கட்டி வளைய வரும் நர்சிம்மின் ’அய்யனார் கம்மா’ தொகுப்பை ஏக்-தம்மில் வாசிக்க ஒரு கிராமத்தின் கதையை குறுநாவலாகப் படித்த உணர்வெழுகிறது.

தொகுப்பின் தலைப்புக் கதையான ‘அய்யனார் கம்மா’ அதிர்ச்சி முடிவால் ஏனைய கதைகளைக் காட்டிலும் தனிக்கவனம் பெறுகிறது. சுதேசமித்திரனின் ‘அணிற்பழம்’ சிறுகதைக்கு இணையான க்ளைமாக்ஸ் திருப்பம். முடிவிலிருந்து தனி அர்த்தம் பெறுகிற இக்கதை மறுவாசிப்பிற்கு துண்டுகிறது.

எங்கள் ஊர் பக்கம் சேட்டைக்காரப் பிள்ளைகளை ’விளங்குற பிள்ளைதான் பொறந்த வீட்ல செத்து போயிருமே’ என்று பெற்றோர்கள் திட்டுவது வழக்கம். ஒரு சொலவடையாக நின்று ரசிக்க முடிவதுதான். ஆனால், பெற்ற பிள்ளையைப் பறி கொடுத்தால் ஆட்டோ சங்கரின் அம்மா கூட கதறி, கதறி அழத்தானே செய்கிறாள்?! பிறந்த சில மணி நேரங்களிலே மரித்து விட்ட தன் குழந்தையை மண்ணடியில் புதைத்து வந்த தகப்பனின் வேதனைதான் ’தந்தையுமானவன்’. கட்டுரையான கதை அல்லது கதையான கட்டுரை.

செம்பட்டைக்கிழவி அசலான கிராமத்தை கண் முன் கொணர்கிறது. கதையின் நேட்டிவிட்டிக்கு நுட்பமான விவரனைகள் உதவுகின்றன. ஆனால், மாடு கட்டும் கல், சும்மாடு, இளந்தாரி கல் என எடுத்ததெற்கெல்லாம் விளக்கம் தருவது ஆயாசம் தருகிறது. இவையெல்லாம் தமிழ் வாசகனுக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட விஷயங்கள்தான் என்பதால் விளக்கங்களைத் தவிர்த்திருக்கலாம்.

அன்றாடம் தரும் நெருக்கடியில் மத்தியான சோற்றையே மறந்து விடுகிற பெருநகரின் பிள்ளைகள் நாம். ஒரு ராத்திரி பிரயாணத்தில் நெருங்கி விடும் தூரத்தில் இருந்தாலும் ‘நாமெல்லோருமே தூரத்து தண்ணீர்தான்’. தொலைபேசியில் உதவி கேட்கிற நண்பனுக்கு நாளையே அழைக்கிறேன் என உறுதியளிக்கிற கதைநாயகன் அடுத்தடுத்த வேலைகளில் ஆழ்ந்து விடுகிறான். நண்பன் கேட்டதை மறந்தும் விடுகிறான். ஒன்றரை வருடங்கள் கழித்து திடீர் ஞாபகம் வந்தவனாய் நண்பனைத் தேடிப் போகையில் அவனது மரணச் செய்தி மட்டுமே அவனை வரவேற்கிறது. ‘ஞாபகமாய் ஒரு உதவி’ மனம் கனக்கச் செய்யும் சிறுகதை.

தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்ததும், வாய் விட்டுச் சிரிக்க வைத்ததுமாக இருந்த இரு கதைகள் ‘தலைவர்கள்’ மற்றும் ‘வெத்தலப்பெட்டி’ ஆகிய இருகதைகளும்தாம். நல்ல நகைச்சுவைக் கதைகள் அவை.
 
‘அவங்க அண்ணே அந்த ஜிம்ம வச்சுருக்கானா மூடிட்டானா?’ // ‘அரட்டையில் ஐக்கியமாகி குவார்ட்டரில்தான் வீட்டிற்குப் போவார்கள்’ // ‘ பகுத்தறிவு பாசறையென அழைக்கப்படும் டாஸ்மாக்’ // ‘சாஜ்ஜாப்பு என்பதை வேறுவழியில்லாமல் எழுதச்சொல்லித்தான் தெரிந்துகொண்டார்களாம்’ // போன்ற சொல்லாடல்கள் மதுரை மண்ணுக்கே உரிய அக்மார்க் லந்துகள். நர்சிம்மின் படைப்புகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கிடக்கிற சிரிப்பாணி வரிகள் கதைகளைச் சலிக்காமல் முன்னெடுத்துச் செல்கின்றன.
தொகுப்பின் பல்வேறு கதைகள் பதிவுலக வாசகர்களை மனதில் வைத்து எழுதப்பட்டிருப்பது ஒரு குறைபாடாகவே தெரிகிறது. மரணம், சந்தர்ப்பவதம், மனக்குரங்கு, அன்பின், தொடரும் முடிவுகள், மாநகரம் ஆகிய ஆறு கதைகளும் என்னளவில் அச்சுத்தகுதி ஏதுமற்ற மிகச்சாதாரணமான கதைகள்தாம். எழுத்தாளர்களின் ஆரம்ப அடையாளங்களுள் ஒன்று வார்த்தை விளையாட்டுக்கள். அவை கதைகளின் அழகைக் குலைத்து அமெச்சூர் தனத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் கொண்டவை. நர்சிம் அவற்றைக் கவனமாக தவிர்க்க வேண்டும்.
 
நர்சிம்மிற்கு இளமையான மொழி நடை வாய்த்திருக்கிறது. அவரது ஞாபக அறைகளில் ‘நோஸ்டால்ஜியா’ பசுமையாக சேகரம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் பொலிவு கெடாமல் வாசகனுக்கு கடத்த முடிகிறது. தன் நிலப்பரப்பை விஸ்தாரமாகப் பதிவு செய்ய முடிகிற எழுத்தாளன் தோற்றதேயில்லை. நர்சிம்மால் மண் மணம் மாறாத நாவல் ஒன்றினை எழுதிட முடியும் என்பதன் அடையாளமாக இந்த மீச்சிறு தொகுப்பு எனக்குத் தோன்றுகிறது.

Comments

நல்ல விமர்சனம்.
Ashok D said…
//நோஸ்டால்ஜியா’ பசுமையாக சேகரம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் பொலிவு கெடாமல் வாசகனுக்கு கடத்த முடிகிறது. தன் நிலப்பரப்பை விஸ்தாரமாகப் பதிவு செய்ய முடிகிற எழுத்தாளன் தோற்றதேயில்லை. நர்சிம்மால் மண் மணம் மாறாத நாவல் ஒன்றினை// :)
Romeoboy said…
மரணம் கதை தான் என்னை ரொம்ப ஈர்த்தது.
taaru said…
///நோஸ்டால்ஜியா’ பசுமையாக சேகரம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் பொலிவு கெடாமல் வாசகனுக்கு கடத்த முடிகிறது.//
அந்த ஒரு சோலிக்காகவே அவர பாராட்டலாம்னே.. ஓ.அது சரி..அவரோட இந்த திறமைய இப்பிடி தான் சொல்லனுமா.. நன்றிண்ணே..

குறிப்பு: இன்னும் அய்யனார் கம்மா படிக்கல.. இந்த வாசக பார்வை என்னைய போட்டு கொடயுது.. ஒடனே கம்மாவ நோண்டிர வேண்டி தான்..

நெம்ப மகிழ்ச்சிண்ணே ..
நல்ல விமர்சனம்.

பொங்கல் நல்வாழ்த்துகள்
இதை விட நல்ல விமர்சனம் வேறென்ன இருக்க முடியும். உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.
நன்றி செல்வா. நீங்கள் சுட்டிய தவறுகளை தவிர்க்க முற்படுவேன்.

Popular Posts