சிங்கரர்கள்

இரண்டே வாரத்தில் சங்கீதம் கற்றுத் தரப்படும் எனச் சத்தியம் செய்யும் போஸ்டர்கள் காணக் கிடைக்கின்றன. சரணம், பல்லவி, டெம்போ, பிர்ஹாஸ், சங்கதி, பிட்ச்சிங், பாவம், க்ளாரிட்டி, ஸ்வரம் என்றெல்லாம் தமிழர்களுக்கு நிறைய்ய புதிய வார்த்தைகள் கிடைத்திருக்கின்றன. பாட்டுப் போட்டிகளின் உறுபலன்.

ஸ்டார் சிங்கர், சூப்பர் சிங்கர், ஹரியுடன் நான் - மூன்று நிகழ்ச்சிகளையும் முடிந்த மட்டும் பார்த்துவிடுவேன். இளமையான குரல்கள் உள்ளுக்குள் உற்சாகம் நிரப்புகிறது. அதே சமயத்தில் சினிமாப் பாடல்களை அட்சர சுத்தமாகப் பாடுவதுதான் திறமையா என்ற கேள்வியும், கேட்டுச் சலித்த பாடல்களைக் கேட்கையில் மெலிதான அயற்சியும் வருவதுண்டு.

சினிமாவைத் தவிர்த்து நடுவர்களையும், பார்வையாளர்களையும் கவரக்கூடிய எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. என் சுயவிருப்பப் பட்டியலின் சிறு சாம்பிள்:


அருகம்புல்லின் நுனியிலே அம்மா கட்டிய வீடு ஆறு வீடு...

பாரத தேசமே... மக்கள் வாழும் நல்ல தேசமே...

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ...

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயோ...

வில்லினையொத்த புருவம் வளைத்தனை...

செந்தூர் கடற்கரையில் கந்தா உனக்கு ஒரு...

மொச்சைக் கொட்டை பல்லழகி...

ஆற்றுவெள்ளம் நாளை வர தோற்றுதே குறி...

பாவம் செய்யாதிரு மனமே...

மாசில்லா கன்னியாம் மேரியாம் மாதாவாம்...

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே...

காரணம் கேட்டு வாடி சகியே...

- ஆகிய பாடல்களை எவரேனும் பாடினால் எஸ்.எம்.எஸ் ஓட்டு துவங்கி கள்ள ஓட்டு வரை போடத் தயாராக இருக்கிறேன்.

***

பள்ளி நாட்களில் நிறைய பாட்டுப் போட்டிகளில் கலந்திருக்கிறேன். சுருதி கருதியதில்லையென்பதால் வெங்கலக் கிண்ணி கூட ஜெயித்ததில்லை. பரம்பரைக்கே பாட்டு ஆகாதுடா என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லியும் கேட்டதில்லை. காரணம் இருந்தது.

நான் விரும்புகிற பாடல்களுக்கு சுய மெட்டமைப்பது என் தொட்டில் பழக்கம். ஏனோதானாவென்று வில்பர் சர்குண ராஜ் மாதிரி இருந்தாலும் அவைநாகரீகம் கருதாமல் துணிந்து விடுவேன். பிராயத்திலிருந்த பாரதிதாசன் பித்தில் ‘அறிவு கெட்டவன் பணம் படைத்தால் அணுகுண்டு செய்வான்’, பொய்க்கு காலில்லை சிறகுகள் உண்டு’, ‘கொலைவாளினை எடடா மிகுகொடியோர் செயல் அறவே’ ஆகிய பாடல்களைப் பாடி கனகசுப்புரெத்தினத்திற்குக் கணிசமான அவமரியாதை சேர்த்திருக்கிறேன். (அப்போதெல்லாம் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளுக்குப் பரிசாக குடும்ப விளக்கு, குயில் பாட்டு, அழகின் சிரிப்பு, அண்ணாவின் என் வாழ்வு போன்ற புத்தகங்களை வழங்குவார்கள். கடந்தவாரம் ஒரு பள்ளி விழாவில் வீடியோ கேம்ஸ் அடங்கிய பன்னிரெண்டு சிடிக்களைப் பரிசாக கொடுத்ததைக் கண்டு துணுக்குற்றேன்.)

‘கைத்தலம் நிறைகனியை’ - வாரியார், டி.எம்.எஸ், புஷ்பவனம் குப்புசாமி, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் துவங்கி பிளேஸி, யோகி.பி வரை அவரவர் பாணியில் பாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்து சுமார் 20 வகைமைகளில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். மஸாகீஸ்டுக்களுக்கு மட்டும் வேண்டுகோளின் பேரில் அனுப்பி வைக்கலாமென்றிருக்கிறேன்.

***

உடுமலை நாராயண கவி, ஊத்துக்காடு வெங்கடசுப்பு ஐயர், உளுந்தூர்பேட்டை சண்முகம் ஆகிய மூன்று பேர்களது பெயர்களும், பாடல்களும் குழப்பியடிப்பது எனக்கு மட்டும்தானா?! திக்கை நோக்கியா / உற்று நோக்கியா - ரேணுகானமா / வேணுகானமா என்றெல்லாம் வரும் வார்த்தைக் குழப்பங்கள் வேறு. எதில்தான் மனித மனம் குழம்புவதில்லை?!

***

தலைமை அலுவலகம் அளிக்கும் சிறப்புப் பயிற்சி ஒன்றிற்குத் தேர்வாகி இருக்கிறேன். அதன் பொருட்டு வருகிற 26-04-10 முதல் 02-05-10 வரை ஏழு தினங்கள் சென்னையில் இருப்பேன். அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் இருக்கும் நண்பர்கள் வீட்டில் தங்கும் உத்தேசம்.

காத்து ரட்சிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

Comments

/
தலைமை அலுவலகம் அளிக்கும் சிறப்புப் பயிற்சி ஒன்றிற்குத் தேர்வாகி இருக்கிறேன்.
/

இவங்க எப்பவுமே இப்பிடித்தான் பாஸ். என்ஜாய் மாடி.
மணிஜி said…
ரமேஷ் வைத்யாவுடன் வருகிறேன்..
ஜெய் said…
// இரண்டே வாரத்தில் சங்கீதம் //
என்ன கொடும சரவணா இது..
Anonymous said…
நாஞ்சில் அண்ணாச்சிகூடச் சேராதன்னு சொன்னாக் கேக்கமாட்டியா.

பின்ன பாட்டெல்லாம் பாரு அவரு வயசுக்குத் தக்கன இருக்குடே.

புத்தியாப் பொழச்சுக்கோ.
Thamira said…
அதெல்லாம் ரட்சிக்கமுடியாது. நாங்க ரொம்ப பிஸி.!
RaGhaV said…
'சிங்கார' சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.. :-))
Joseph said…
என்ன செல்வா,
நீங்க பாடிருக்கேன்னு எழுதுனதுக்கே மக்கள் யாரும் பதிவும் பக்கம் வரல. நல்ல வேளை வில்பர்ட் சற்குணராஜ் மாதிரி யூடியூப் வீடீயோ எதுவும் போஸ்ட்ல குடுக்காம விட்டீங்க போங்க.

நீங்க இப்பவும் பாடுறது உண்டா?
சென்னையின்
கத்திரி வெயில்
காத்திருக்கிறது
வருக வருக. . .
selventhiran said…
சரவணகுமார், ஜெய், ராகவ் வருகைக்கு நன்றி!

@மங்களூர் - யோவ் அடிக்கிற வெயில்ல என்ன ஓய் எஞ்சாய் மாடி?

@ மணிஜீ - அவரு தேனி சீருடையான் கூட இருக்காரு... ஒரு வாரம் ஆகும் வர்றதுக்கு...

@ அண்ணாச்சி - கேண்டியும் போன் பண்ணி பெர்த் சர்டிபிகேட் கேட்கிறா :)

@ ஆமூகி - யோவ் உமக்கு சிறுகதை எழுதச் சொல்லித் தர்றம்யா (நல்ல சிறுகதைகள் எழுத..)

@ யோசேப்பு - அண்ணாச்சி உமக்காகவே வீடியோ ஆல்பம் போடப்போறம்யா...

@ வெங்கட்ராமன் - அய்யோ... பயம் காட்டறீங்களே...
அப்ப ஒழுங்கா பாடலைன்னா கிங்கரர்ன்னு சொல்லிகிடலாமா :)
Unknown said…
//‘கைத்தலம் நிறைகனியை’ - வாரியார், டி.எம்.எஸ், புஷ்பவனம் குப்புசாமி, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் துவங்கி பிளேஸி, யோகி.பி வரை அவரவர் பாணியில் பாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்து சுமார் 20 வகைமைகளில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். //

செல்வா... அனுப்பி வைங்களேன். பீஸ் பீஸ் பீஸ்.

Popular Posts