பரத்தையர் கூற்று - வாசக அபிப்ராயம்

வாசக உழைப்பை அதிகம் கோராத, ஒரு மணி நேரத்திற்குள் படித்து முடித்து விடுகிற தொகுப்புதான் பரத்தையர் கூற்று. கவிதைகள் குறித்த அபிப்ராயங்களை அவ்வப்போது அதன் ஆசிரியருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எழுதுங்களேன் என்றார்.

நவகவிதை இன்று வந்தடைந்திருக்கும் இடம்; கவிதையின் அழகியல் குறித்துத் திறனாய்வாளர்கள் கடைப்பிடிக்கும் கறார் அணுகுமுறை; கவிதைகள் குறித்து நான் உருவாக்கி வைத்திருக்கும் சொந்த அளவுகோல் - இவற்றின் துணையின்றியே இந்நூலை நிராகரிக்க போதிய காரணங்கள் இருக்கின்றன.

பொதுவாக, பரத்தையர் குறித்த சொல்லாடல்கள் ‘அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது’ என்ற த்வனியிலேயே இருக்கக் கண்டிருக்கிறேன். முயங்கிக் கிடப்பவனை முற்றிலும் நிராயுதபாணியாக்கி வெளித்தள்ளும் தாசியரைப் பற்றியோ, ஒளித்து வைத்த காமிராவில் படம் பிடித்து வீட்டிற்கு சிடி வருமென மிரட்டும் சேடிகளைப் பற்றியோ, நெடுஞ்சாலைகளில் தோன்றி ஒதுங்கும் டிரைவரின் சங்கை நெரித்து லாரியை லபக்கும் ராத்திரி ராணிகளைக் குறித்தோ, கவனக்குறைவால் பெற்றெடுக்க நேர்ந்த தளிரை கழிவறைகளில் கடாசி விட்டு கடமையாற்றச் செல்பவர்கள் குறித்தோ எந்த பதிவும் கண்டதில்லை. நிதர்சனங்களோடு முரண்பட்டிருப்பதுதான் அறிவுஜீவித்தனமா என்ற இயல்பான சந்தேகம் எனக்குண்டு. ஒருவேளை நூலாசிரியர் இப்படியான பரத்தையர்களை எதிர்கொண்டதில்லையோ என ஐயப்பட்டால், அவர் முன்னுரையில் இக்கவிதைகளில் சொந்த அனுபவம் கிஞ்சித்தும் இல்லையெனச் சத்தியம் செய்கிறார். ஆக அவர் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையிலேயே பரத்தையருக்கு நியாயம் தேடத் துணிந்திருக்கிறார். பரத்தைமைப் பற்றி அதிகம் பேசிய ஜி. நாகராஜனின் படைப்புகள், மா. தட்சிணாமூர்த்தியின் ‘திவ்ய தரிசனம்’, ராஜசுந்தர்ராஜனின் ‘நாடோடித் தடம்’, மகுடேஸ்வரனின் ‘காமக்கடும்புனல்’, வா.மு.கோமுவின் ‘சொல்லக்கூசும் கவிதைகள்’ வரிசையில் இடம் பிடிக்கத் தேவையான நேர்மை கவிதைகளில் இல்லை.

பரத்தையர் கூற்றை வாசித்த எவரும் இதில் மகுடுவின் சாயல் அதிகம் என்பதை ஒப்புக்கொள்வர். வெளியாகி ஐந்தாண்டுகளாகியும் தன் போன்ற மற்றொன்றை உருவாக்க முடிந்திருப்பதை மகுடுவின் வெற்றியென்றே கொளல் வேண்டும். தொகுப்பிலுள்ள கவிதைகளில் முக்காற்பங்கு மொழிநேர்த்தியுடன் அமைக்கப்பெற்ற துணுக்குகள்தாம். அவற்றிற்கு கவிதை அந்தஸ்தினை வழங்க மனம் மறுக்கிறது. தேய்வழக்குச் சொல்லாடல்களில் இருக்கும் வார்த்தைகளை முன்னுக்குப் பின் அடுக்கி ஓசைநயத்தை உற்பத்திச் செய்வது உழைப்பிற்க்கு எதிரான தப்பித்தல்.

சிஎஸ்கே காயின் செய்திருக்கும் சில வார்த்தைகள் அவரை முக்கியமானவரென நிருவுகிறது. உதாரணமாக ‘திருயோனிப்பெருஞ்சரிதம்’ என்கிற சொல்லாடல். கோலிச்சோடாவிற்குள் உருளும் கோலிக்குண்டினைப் போல மனதில் நெடுங்காலமாய் உருண்டுகொண்டே இருக்கிறது அவ்வார்த்தை. இதுமாதிரியான சொற்ச்சேர்க்கை அவரது பலம். சிஎஸ்கேவினுடைய மொழி சித்தர் மரபின் நீட்சி. அதை வைத்துக்கொண்டு கே.ஆர்.விஜயாவின் அவலக்குரலை எழுப்புவதுதான் அநீதி. சிஎஸ்கே தன் கவிதைகளைக் கொஞ்சம் திறந்த மனதுடன் மறுபரிசீலனை செய்தல் நலம்.

Comments

படித்துப் பார்க்க வேண்டும்.
நன்றி.
Ashok D said…
மொழியாடல்

Popular Posts