டாக்டர் கே!

யானை டாக்டர் நினைவு கூறல்’ நிகழ்விற்கு நானும் அருணும் சென்றிருந்தோம். சுமார் 120 பேர்கள் வந்திருந்தனர். பெரும்பாலும் இளைஞர்கள். ஜெயராமன், ஜெயபிரகாஷ், டால்ஸ்டாய், மரவளம் வின்சென்ட், ஆனந்த் போன்ற உள்ளூர் சூழலியல் ஆர்வலர்களும் இருக்கக் கண்டேன்.

யானை டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி பற்றி அவரோடு சிலகாலம் பணியாற்றிய அனுபவம் உள்ள முதுமலை காட்டியல் பூங்கா மருத்துவர் கலைவாணன் பேசினார். தப்பும் தவறுமான தந்தி நடை ஆங்கிலத்தில் அவர் பேசியது பார்வையாளர்களைச் சோர்வாக்கியது. ஆனாலும், டாக்டரைப் பற்றியதொரு முழுமையான சித்திரத்தை அவரது பேச்சிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. மருத்துவர் தன்னுடைய அயராத ஆய்வின் மூலமும், அனுபவங்களின் மூலமும் யானை மருத்துவத்தை எங்கனம் செம்மைப்படுத்தினார் என்பதை ருசிகர உதாரணங்களுடன் தெரியப்படுத்தினார். முகாமில் இருந்த அனைத்து யானைகளின் புள்ளி விபரங்களையும் டாக்டர் விரல் நுனியில் வைத்திருந்தார். மருத்துவர் இல்லாத சமயம் ஒரு யானைக்கு சிகிச்சை அளிக்க நேரிட்டதாம். தொலைபேசியில் தொடர்பு கொண்டு சில யோசனைகளைக் கேட்டபோது ‘ஓ அந்த ரதியா.. அவளுக்கு வலது முன்னங்காலின் இடது ஓரத்தில் சின்ன பிசகு உண்டு. முதுகில் ஒரு காயம் ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன்’ என்று அடுத்தடுத்து தகவல்களை அடுக்கி அதற்குச் செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளையும் சொன்னாராம். மதம் பிடித்து 12 பேரை கொன்ற யானையைக் கூட தன் சுயமுயற்சியாலும், தனித்துவம் மிக்க பயிற்சிகளாலும் சாந்த சொரூபியாக்கி, குழந்தைகள் கூட அச்சமின்றி நெருங்கி விளையாடக்கூடிய யானையாக மாற்றிக் காட்டினாராம்.

யானைகளுக்கான சிகிச்சைகள் குறித்து இதுவரை வெளியான மருத்துவ நூல்கள் அனேகமாக மேலை நாட்டு மருத்துவர்களால் எழுதப்பட்டவை. அவை மிருகக்காட்சி சாலைகளில் உள்ள யானைகளுக்குத்தான் பொருந்துமேயன்றி அடர்கானக யானைகளுக்குப் பொருந்தா. மருத்துவர் கே-வின் ஆய்வுக்குறிப்புகள், சிகிச்சை முறைகள், சுயானுபவங்கள் தொகுக்கப்பட்டு நூல் அச்சில் உள்ளது. அது யானை மருத்துவத்தின் ‘ஹோலி புக்’ஆக விளங்கும் என்பது திண்ணம். ஒரு சாதாரண மருத்துவராகப் பணியில் சேர்ந்து, தொடர்ந்து பல்லாண்டுகாலமாக ஓரே முகாமில் பணியாற்றி டைரக்டர் ஜெனரல் அளவிற்கு பதவி உயர்வு பெற்றவர் டாக்டர் கே. அனேகமாக வனத்துறையில் இது அசாதாரண நிகழ்வு.

அடுத்து பேசிய எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், சூழலியல் புகைப்படக்காரரும், எழுத்தாளருமான மா. கிருஷ்ணனுடான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். வன உயிரின புகைப்பட கலை வளர்ந்து, எத்தனையோ சிறந்த சூழலியல் புகைப்பட கலைஞர்களும் வந்துவிட்ட சூழலிலும் மா. கிருஷ்ணன் ஏன் கொண்டாடப்பட வேண்டியவரென்பதை விளக்கினார். நவயுகத்தில், நவீன கருவிகளின் உபயத்தில் ‘வைல்ட் லைஃப் போட்டோகிராஃபி’ என்பது இளைஞர்களின் மத்தியில் ஒரு ஃபேண்டஸி ஆக உருமாறி இருக்கிறது. அடர் வனங்களுக்குள் சென்று உயிரிகளைப் படமெடுத்து இணையத்தில் வெளியிடுகிறார்கள். புகைப்படம் எடுப்பது என்கிற நோக்கத்தினை தாண்டி வனம் மற்றும் வன உயிரினங்கள் குறித்த எந்தவித பிரக்ஞையும் இல்லாத இந்த வளர்ச்சி ஆபத்தானது.

மா. கிருஷ்ணன் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் முற்போக்கானவர். கடவுள் நம்பிக்கை அற்றவர். சாதிய உணர்வு அறவே இல்லாதவர். ஒருமுறை தலித்திய எழுத்தாளர் ஒருவர் கிருஷ்ணனின் தந்தை மாதவையா குறித்த சில விபரங்களைப் பெற சென்றிருந்தாராம். காலையில் ஆரம்பித்த உரையாடல் மதியம் வரை நீண்டது. சாப்பாட்டு நேரம் வந்தபோது ‘நான் ஒரு வெஜிடேரியன். ஆனால், நீங்கள் விரும்பினால் உங்களுக்காக எதிர்கடையிலிருந்து மட்டன் பிரியாணி வாங்கி வரச் சொல்கிறேன்’ என்றாராம். மாதவையாவைப் பற்றி தெரிந்துகொள்வதில் இருந்த ஆர்வம் வடிந்து கிருஷ்ணனைப் பற்றி தெரிந்துகொள்ள முடிவெடுத்தேன் என்றாராம் அந்த எழுத்தாளர்.

மா. கிருஷ்ணன் நகையுணர்வு மிக்கவர். ‘சேவ் டைகர்’ புரொஜக்ட் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கழித்து, வனத்துறை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. புலிகள் பாதுகாப்பு திட்டத்தினால் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது என்பதே அந்த அறிவிப்பு. அதனைத் தொடர்ந்து கிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதினார். ‘இந்தியா முழுக்க உள்ள புலிகள் இனப்பெருக்கத்தில் விடாமுயற்சியோடு ஈடுபட்டு, அவை அனைத்தும் கர்ப்பமுற்று, ஒவ்வொரு புலியும் நான்கு நான்கு குட்டிகள் வீதம் ஈந்தால் கூட அவைகளின் மொத்த எண்ணிக்கை இந்த 40% இமாலய சாதனையை எட்டி விட முடியாது என்று. லிமரிக் எழுதுவதிலும் கிருஷ்ணன் வல்லவராம். வனச்சரகர் பன்னீர் செல்வத்தினை கேலி செய்து அவரெழுதிய வெண்பாவினை தியோடர் சொல்லியபோது அரங்கமே சிரித்தது.

முதலாவது பேசிய நபரே மணிக்கணக்கில் எடுத்துக்கொண்டதால், பாண்டுரங்க ஹெக்டே ஒரிரு மணித்துளிகளே பேசினார். இயற்கை ஆர்வலன் என்கிற பட்டியலின் கீழ் ஒவ்வொரு மனிதனும் வந்தாக வேண்டியதன் அவசியத்தை நறுக்குத் தெறித்தார் போல் பேசி முடித்தார். இன்னும் கொஞ்ச நேரம் அவர் பேசி இருக்கலாம் என்ற ஏக்கம் எழுந்தது.

நிகழ்வில், மா. கிருஷ்ணனின் முதலாம் ஆண்டு அஞ்சலி கூட்டத்தில் ஜே.சி.டேனியல் ஆற்றிய உரையின் தொகுப்பும், ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ சிறுகதையின் ஆங்கில மொழியாக்கமும் வெளியிடப்பட்டது. அழைப்பிதழில் கூட யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்றுதான் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், நிகழ்வில் ஜெயமோகனின் அந்த மகத்தான படைப்பிற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்பது என் வருத்தம். பெரும்பாலும் கான்வென்டுகளின் உற்பத்திகளே அமர்ந்திருந்த அவ்வரங்கத்தில் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் யாரோ ஒரு எக்ஸ், ஒய், ஸெட் என்பதாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது.

அச்சிறுகதை பற்றியும்; அது இணையத்தில் வெளியானபோது கிடைத்த வரவேற்பு, ஏற்படுத்திய தாக்கம் குறித்தும்; சூழலியல் குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தவும், வனத்திற்குச் செல்பவர்களுக்கு இருக்க வேண்டிய குறைந்த பட்ச பொறுப்புணர்வினைப் பரவலாக்கவும் விஷ்ணுபுரம் முன்னெடுத்திருக்கிற நடவடிக்கைகள் குறித்தும் யாராவது இரண்டு நிமிடம் பேசி இருந்தால் இன்னும் எடுப்பாக இருந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட ஆதங்கம். மற்றபடிக்கு மத்தகங்களின் மீது மாபெரும் அன்பு கொண்டு அவற்றின் மத்தியிலேயே வாழ்ந்து மறைந்த மகத்தான மருத்துவர் ஒருவரைப் பற்றிய நினைவலைகளில் சில மணி நேரங்கள் கால் நனைத்த திருப்தியுடனே இருவரும் வீடு திரும்பினோம்.

Comments

vaanmugil said…
ஆம் புலிகளின் எண்ணிக்கை உயர்த்தி கூறப்பட்டுள்ளதாக தான் தெரிகிறது. அதை அருமையாக சாடி இருக்கிறார் :-))
vaanmugil said…
ஆம் புலிகளின் எண்ணிக்கை உயர்த்தி கூறப்பட்டுள்ளதாக தான் தெரிகிறது. அதை அருமையாக சாடி இருக்கிறார் :-))
ஜெயமோகன் எனும் எழுத்தாளர் யாரோ ஒரு எக்ஸ், ஒய், ஸெட் என்பதாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது.

- இந்த இடத்தில் டாக்டர் கே முன்னிலை படுத்தப் பட வேண்டுமே தவிர ஜெயமோகன் அல்ல. ஜெயமோகன் ஒரு சிற்பி. சிறந்த சிற்பி என்பதில் ஐயமில்லை. ஆனால், சிலை தெய்வமாவதால், சிற்பி தனது அடையாளத்தை இழப்பது பற்றி வருந்தாதீர்கள்.
ஜெயமோகன் எனும் எழுத்தாளர் யாரோ ஒரு எக்ஸ், ஒய், ஸெட் என்பதாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது.

- இந்த இடத்தில் டாக்டர் கே முன்னிலை படுத்தப் பட வேண்டுமே தவிர ஜெயமோகன் அல்ல. ஜெயமோகன் ஒரு சிற்பி. சிறந்த சிற்பி என்பதில் ஐயமில்லை. ஆனால், சிலை தெய்வமாவதால், சிற்பி தனது அடையாளத்தை இழப்பது பற்றி வருந்தாதீர்கள்.
ஜெயமோகன் எனும் எழுத்தாளர் யாரோ ஒரு எக்ஸ், ஒய், ஸெட் என்பதாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது.

- இந்த இடத்தில் டாக்டர் கே முன்னிலை படுத்தப் பட வேண்டுமே தவிர ஜெயமோகன் அல்ல. ஜெயமோகன் ஒரு சிற்பி. சிறந்த சிற்பி என்பதில் ஐயமில்லை. ஆனால், சிலை தெய்வமாவதால், சிற்பி தனது அடையாளத்தை இழப்பது பற்றி வருந்தாதீர்கள்.

Popular Posts