பார்த்த முகம்

தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் சென்னைக்கு அரசுப்பேருந்தில் பயணிப்பது ஒரு சுயவதை. முந்தைய இரவில் கிளம்பி மறுநாள் மட்டை மதியத்தில் கோயம்பேடு எதிரே சாவகாசமாக இறக்கி விடுவார்கள். அதுவரை புலன்களை அடக்கியாளவும், தற்கொலை எண்ணத்தை தள்ளிப்போடவும் நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். காலைல பத்து மணிக்கு இண்டர்வியூ சார்.. என டிரைவரிடம் எழுந்து போய் கதறும் இளைஞர்களைப் பார்க்காத ஒரு பயணமே வாய்த்ததில்லை. இம்முறை கூடுதலாக மேலும் ஒரு நரக வேதனை.

அவசர சோலியாக நெல்லையிலிருந்து சென்னைக்கு பஸ் ஏறினேன். அது திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம் வழித்தடத்தில் சென்னை செல்லும் பேருந்து. ஏறி அமர்ந்து அரைமணி நேரமாகியும் வண்டி கிளம்பினபாடில்லை. நடத்துனர் நட்டுவாய்க்காலி போல அங்குமிங்கும் அமைதியற்று அலைந்து கொண்டிருந்தார். ‘ரெண்டு பேரு வரணும் சார்..குடிகாரப்பயக்க எங்க போனானுவளோ..’

தூரத்தில் அலைச்சறுக்கில் ஈடுபடும் பாவனையுடன் இருவர் ஒருவரையொருவர் தாங்கிப்பிடித்தபடி மிதந்து வந்து கொண்டிருந்தனர். வேறு ஏதோ பஸ்ஸில் ஏற இருந்தவர்களை கண்டக்டர் ஓடிப்போய் கூட்டி வந்து பஸ்ஸில் ஏற்றினார். ‘ங்கோத்தா..ஒன்ன எவன்டா கடய பஸ்ஸ்டாண்டுக்கு வெளிய கட்டச்சொன்னது..’என ஒருவன் நடத்துனரின் நெஞ்சில் தலையால் முட்டியபடி கேட்டான். வாஸ்தவம்தான் இவ்வளவு கடைகளைத் திறந்த அரசாங்கம் ஒவ்வொரு பேருந்துநிலையத்திலும் ஆவின் பால் விற்பனையகம் போல ஒரு சாராயக்கடை திறக்கலாம்தான். வருவாய்ப் பெருகும் வழிதானே. பள்ளிக்கூடங்கள் மகளீர் விடுதிகள் வழிபாட்டுக்கூடங்களுக்கு அருகிலெல்லாம் கடைகள் இருக்கலாமென்றால் பேருந்து நிலையத்தில் அமைப்பதில் தப்பில்லையே.

பனியனுக்குள் சனியன் நுழைந்த மாதிரி மிகச்சரியாக நானிருந்த இருக்கையிலேயே அமர்ந்தார்கள். வல்ல பூதங்களுக்கும் வலாட்டிகப் பேய்களுக்கும் அஞ்சா நெஞ்சுரம் கொண்டவந்தான் எனினும் போதைமணிகளைக் கண்டால் கிரிகிரி ஆகிவிடுவேன். சடாரென பையை தூக்கிக்கொண்டு இன்னொரு இருக்கையில் சென்றமர்ந்தேன். அது அவ்வளவு பிரமாதமான முடிவல்ல. எனது முன்னிருக்கையில் இருந்தவர்கள் அவர்களை விட அதிகம் குடித்திருந்தனர். நியாயமாக ஓடும் பேருந்திலிருந்து நான் குதித்திருந்திருக்க வேண்டும்.

வண்டி வண்ணார்பேட்டையைத் தாண்டியிருக்கவில்லை. சலம்பல் துவங்கி விட்டது. தூங்கும் பாவனையில் கால்களைத் தூக்கி முன்னிருக்கை பெண்ணின் தோளில் போட்டார்கள். அந்த குண்டு மலையாளிப் பெண் எழுந்து நின்று மலையாளத்தில் காச் மூச்சென்று கத்தினார். மூன்றாவது பாராவில் நாம் கண்ட குடிகார தோழர்கள் ‘மேடம் நீங்க வேணா இங்க வந்து எங்களோட ஒக்காருங்க.. ஒருத்தருக்கு எடமிருக்கு..’ கண்டக்டர் பதறியபடி ஓடிவந்து ‘டேய் தாலிய அறுக்கறீங்களேடா..எறக்கி வுட்ருவேன்..’ தனக்குத் தெரிந்த அதிகபட்ச கண்டனங்களைத் தெரிவித்து விட்டு பழையபடி தன் சீட்டில் போய் உறக்கத்தில் ஆழ்ந்தார். ரொம்ப குளிருதுல்ல என ஒருவன் தனது லூங்கியை அவிழ்த்து கழுத்தில் மாலையைப் போல அணிந்து கொண்டான். நல்லவேளைக்கு அண்டிராயர் போட்டிருந்தான். மற்றொருவன் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை திரும்பி ‘ப்ரதர் தீப்பெட்டி இருக்குமா?’ என என்னிடம் கேட்டபடி இருந்தான். நான் தீப்பெட்டி வியாபாரியின் மகன் என்பது இந்த மாங்குடிக்கு எப்படித் தெரியும் என நான் குழப்பத்தில் ஆழ்ந்தேன்.

பஸ் தாழையூத்துரைத் தாண்டியது. இருவரும் ஒரே சமயத்தில் தத்தம் செல்போன்களை எடுத்து பாடல்களை ஒலிபரப்பத் துவங்கினார்கள். டேய் பாட்டை நிறுத்தித் தொலைங்கடா என கண்டக்டர் கத்தினார். ‘அப்ப நீ பாடு..’ என பதில் வந்தது. ஒருவர் எழுந்து வந்து பாப்பா அழுதுங்க சவுண்டை குறைங்க என்றார். ‘ *&%$%^ மூடிட்டுப் போடா.. நானும் டிக்கெட் எடுத்துட்டுத்தான்டா வந்திருக்கேன்..’ அந்த சம்சாரி ஆடிப்போய் விட்டார். என் புஜங்கள் துடித்தன. இதுவே ஆசானாக இருந்தால் இரண்டு அறை விட்டிருப்பாரென நினைத்துக்கொண்டேன். ஒத்தை ஆள் என்றால் கூட சவுண்டு கொடுத்துப் பார்க்கலாம். பஸ்ஸூக்குள் இவர்களோடு சேர்ந்த ஸ்லீப்பர் செல்கள் எத்தனை எனத் தெரியவில்லை. பேசாம மூடிக்கிட்டு உட்காருடா என எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
கொஞ்ச தூரம் போயிருக்கும். என் காலில் சூடாக எதுவோ பட்டது. மூத்திரம். குமட்டிக்கொண்டு வந்தது. எழுந்து கடைசி சீட்டுக்குப் போனேன். ஒரு பெரியவர் அருகே அமர்ந்து கொண்டேன். பஸ் தூக்கி தூக்கி அடித்தாலும் எப்படியோ தூங்கிப்போய் விட்டேன். திடீரென கூச்சல் குழப்பம். மலையாளப்பெண்மணி அமர்ந்திருந்த சீட்டை ஒரு போதை மணி எட்டி உதைத்ததில் அவர் முன் சீட்டில் முட்டிக்கொண்டாராம். மூக்கில் நல்ல அடி. வீங்கிப்போய் விட்டது. பயணிகள் எழுந்து நின்று கத்தினர். அவர்கள் இருவரும் அதை உணரமுடியாத ஆழத்திற்குள் உறங்குவதைப் போல பாவனை செய்தனர். கண்டக்டரும் அதே பாவனையைத்தான் செய்துகொண்டிருந்தாரென நான் நினைக்கிறேன்.
சற்று ஆரவாரம் அடங்கியதும் சத்தமிட்டவர்களைச் சீண்டுவது போல ஒருவன் செல்போனில் பாடலை ஒலிபரப்பத் துவங்கினான். மற்றொரு சீட்டு குடிகாரர்கள் போட்டிப்பாடலை ஒலிபரப்பினார்கள். கர்ண கடூர அந்தாக்ஷரி துவங்கியது. உற்சாகமடைந்த ஒருவன் சீட்டில் இருந்து எம்பியபடியே ஆடினான். ரப்பர் பந்து சிமெண்ட் தரையில் குதிப்பது போலிருந்தது அந்த நடன அசைவுகள். ஒரு பைத்தியக்கார விடுதிக்குள் மாட்டிக்கொண்டது மனநிலை உருவானது. பொதுவாக தொடர்ந்து இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஃபேஸ்புக் பார்த்தால்தான் எனக்கு இந்த மனநிலை உருவாகும்.
என் பக்கத்திலிருந்த பெரியவர் அடிக்கடி கண் விழிப்பதும் இவர்களைப் பார்ப்பதும் மறுபடி கண்களை மூடி உறங்க முயற்சிப்பதுமாக இருந்தார். வயது 75க்கு மேல் இருக்கலாம். எங்கோ பார்த்த முகமாக இருந்தது. இவரைப் போன்ற முதியவர்களுக்கு இவ்வகைப் பிரயாணங்கள் கூடுதல் சித்திரவதை. காலை நீட்டிக்கொள்ள முடியாது. சிறுநீரை அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை உணவகங்கள் சமயங்களில் ஆளையே கொன்றுவிடும். இதில் குடிகாரப் பைத்தியக்காரர்களின் சித்திரவதை வேறு.
நள்ளிரவைத் தாண்டியதும் ஒரு குடிகார ஜோடி ஆடி அடங்கி அலங்கோலமாக சீட்டில் கிடந்து உறங்கியது. மற்றொரு ஜோடியின் ஆட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. பஸ்ஸில் இருந்த ஒவ்வொருவரையும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டத் துவங்கினார்கள். ‘இவரு பெரிய டீஸண்டுப் *&^$&*#*’ எனும் வசவு எனக்குக் கிடைத்தது. பெரியவர் என் முகத்தைப் பார்த்தார். திரும்பவும் கண்களை மூடிக்கொண்டார். எங்கோ இவரைப் பார்த்திருக்கிறோமே..

பேருந்து மதுரை தாண்டி ஒரு டோல்கேட்டில் நுழைவுச் சீட்டுக்காக நின்றது. வண்டிக்கு முன்னால் எழெட்டு வண்டிகள் காத்திருந்தன. பெரியவர் எழுந்து குடிகாரர்களை நோக்கிச் சென்றார். ‘பஸ் பத்து நிமிஷம் நிக்கும்ங்க.. பீடி சிகரெட் குடிக்கறதுன்னா போய் குடிச்சிக்கங்க..’ என்றார். இருவரும் புதைகுழிக்குள் விழுந்த மிருகத்தைப் போல சீட்டிலிருந்து திமிறி திமிறி எழுந்து தள்ளாடியபடியே வண்டியை விட்டு இறங்கினர். ‘டேய் எங்கடா போறீங்க..’ என கண்டக்டர் பதறினார். பெரியவர் கண்டக்டரைப் பார்த்து சங்கை அறுத்துடுவேன் என்பது போல சைகை காட்டினார். கண்டக்டர் புரிந்துகொண்டு சீட்டில் தயக்கத்துடன் அமர்ந்தார். பெரியவர் மெளனமாக திரும்பி வந்து இறுக்கையில் அமர்ந்து பழையபடி கண்களை மூடிக்கொண்டார். பேருந்து தயங்கி கிளம்பியது. நான் பின்னால் திரும்பி கண்ணாடி வழியாக சாலையைப் பார்த்தேன். மங்கலான மஞ்சள் ஒளியில் குடிகாரர்கள் நடுரோட்டில் நின்று பஸ்ஸை தேடிக்கொண்டிருந்தது தெரிந்தது. அவர்களது பயணப்பை பேருந்தினுள் இருக்கைக்கடியில் கிடந்தது. நான் விக்கித்துப் போய் பெரியவரைப் பார்த்தேன். அவர் அமைதியான முகத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

மதியம் கோயம்பேட்டில் கண் விழித்த இன்னொரு குடிகார ஜோடிகள் தங்களது பயணப்பை செல்போன்களைக் காணவில்லை என கூச்சல் போட்டனர். தங்களோடு வந்த நண்பர்களும் மாயமாக மறைந்து விட்டதை தாமதமாக உணர்ந்து கலவரமானார்கள். அவர்கள் போட்ட கூச்சலை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஏறும்போது நீங்க பை எதுவும் கொண்டு வரலை.. கண்டக்டர் ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு டீக்கடையை நோக்கி நடந்து போனார். பெரியவர் மிக நிதானமாக தனது சிறிய துணிப்பையை எடுத்துக்கொண்டு இறங்கினார். அவரை திருவனந்தபுரம் சாலைத்தெருவில் பார்த்திருக்கிறேன் என்பது சட்டென நினைவிற்கு வந்தது.

Comments

Popular Posts