நிஜம் நிழலாகிறது

"சேரி திரளும் அன்று நாடு புரளும்" என்ற புரட்சி கோஷத்தோடு தமிழக அரசியல் வானில் திருமாவளவன் அடியெடுத்து வைத்தபோது, ஆஹா ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்காக ஒரு தலைவன் கண்முன்னே உருவாகிறார் என்ற மகிழ்ச்சி இருந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில்தான் அவரது செயல்பாடுகளும் இருந்தன. விடுதலைச் சிறுத்தை இயக்கத்தில் எண்ணற்ற தலித் இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொண்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடும் குணமிக்கவர்களாக இருந்தனர். "அடங்க மறு, அத்து மீறு" "வாள் கைமாறினால்தான் உன் வாழ்க்கை மாறும்" என உணர்ச்சி பிழம்பாக பொதுக்கூட்டங்களில் திருமாவின் முழக்கத்தை கேட்கும்போது தமிழ்நாட்டின் ஓடுக்கப்பட்ட சமூகத்திற்கு வெளிச்சம் பாய்ச்சும் நபராக இவர்கள் இருப்பார்கள் என்றுதான் தோன்றியது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திருமா எம்.எல்.ஏ ஆனபோது, சட்டமன்றத்திற்குள் சேரியின் அவலங்களை கட்டவிழ்ப்பார் என நம்பினர் பலர்.

திராவிடக் கட்சிகள் கூட்டணிக்குள் சிறுத்தைகளை வளைக்க காய்களை நகர்த்த ஆரம்பித்தபோது, அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரமாக போகிறார் என்ற நிலையில், சினிமாக்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று களம் மாறினார். கடைநிலை மக்களின் பிரதிநிதியின் இந்த திடீர் மாற்றத்தால் நல்ல விளம்பர வெளிச்சம் கிடைத்ததேயன்றி மக்களுக்கு எவ்வித பயனுமில்லை. அதற்கடுத்து பா.ம.கவினருடன் கைகோர்த்து எடுத்த தமிழ்க் காவலன் அவதாரம், குஷ்பு கற்பு சர்ச்சை எல்லாம் அவரது பயணத்தை திசை திருப்பும் காரணிகளாகத்தான் இருந்தது. இதற்கெல்லாம் மணிமகுடமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் திருமா. முதலில் அன்புத்தோழி, இப்போது கலகம் என்றொரு படம். கலகம் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடிக்க தமிழின் முண்ணனி நடிகைகளோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் குறித்து திருமா விகடனில் அளித்துள்ள பேட்டியில் " ஓரே ஆளு நூறு பேரை பந்தாடுற பாணி படம் இல்லை. பார்வையிலேயே பதற வைப்பேன். கட்சி ஆரம்பிச்ச இத்தனை வருஷங்களில் எதிர்பார்த்த வளர்ச்சி அடையலங்கிறது வருத்தமான விஷயம்தான். தொண்டர்கள் சோர்ந்து போகாம இருக்க ஏதாச்சும் செய்யனுமே. என் கருத்துக்களை மக்களிடன் கொண்டு செல்ல சினிமா ஒரு நல்ல ஊடகமாக இருக்கும்" என்கிறவர் 'நம்ம படம் அதிரடியா வெடிக்கும்; ஆதரவா அணைக்கும்' என்று முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறார் இன்றைய வழக்கமான ஹீரோக்களின் வாய்ச்சவடால் பேட்டி போல!

சினிமாவில் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம், அதற்கு இன்றைய கதாநாயகர்களே கண்முன் நிற்கும் உதாரணம். ஆனால் நிஜவாழ்வில் ஹீரோ ஆவது கடினம். ஒருபக்கம் எம்.எல்.ஏவும் கவிஞருமான ரவிக்குமார் ஆளுங்கட்சியினரோடு நல்ல உறவு கொண்டு இலங்கை அகதிகள் பிரச்சனை முதல் எத்தனையோ வெகுஜன பிரச்சனைகளை கலைஞரின் பார்வைக்கு கொண்டு சென்று தீர்வு காண்கிறார். ஆனால் கட்சியை வழிநடத்தும் திருமாவோ பன்ஞ் டயலாக், டூயட், ஆக்க்ஷன், பேட்டி என தடம் மாறுகிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக வீதிக்கு வந்து போராடுங்கள் அதுவே தொண்டர்களை உற்சாகப்படுத்தும். தொண்டர்களை ரசிகர்களாக மாற்றினால் அழுகின்ற பிள்ளைக்கு கிடைக்கவேண்டிய பால் கட்-அவுட்களுக்கு அபிஷேகமாகிவிடும்!


Comments

ஆளுக்கொரு வேஷம் போடுகிறார்கள்
வேறு என்னத்த சொல்ல. . . . . .
Anonymous said…
யாமறிந்த வரையில் ....
வயிற்று சோற்றுக் தெருவில் வித்தை காட்டி பிழைக்கும் கலைக் கூத்தாடி கூட தன் கூட்டத்திற்காக கவலைப்படுவான், அரசியல்வதிக்கு அவன் குடும்பத்தை தவிர வேறெதைப் பற்றியும் கவலை கிடையது....
selventhiran said…
வெங்கட்ராமன், செண்பா தங்கள் வருகைக்கு நன்றி.
Raj said…
Anbulla Selvendiran,

Thiruma avarkalin panic tharpothu evvaru ullathu endru oru katturai ezhuthalam..

Popular Posts