துரோணாச்சாரியார்

கேண்டியின் குறுஞ்செய்திகளைத் தாண்டி எப்போதாவது சில நல்ல தகவல்களும் இன்பாக்ஸூகளை வந்தடையத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்றுதான் வடிவேல் அண்ணன் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக சேர்ந்த தகவலும். நண்பர்களின் வாயிலாக நான் அறிந்து வைத்திருக்கின்ற தகவல்களின்படி மிஷ்கின் நல்ல இயக்குனர் மட்டுமல்ல. நல்ல மனிதரும் கூட. தேர்ந்த வாசிப்பும், சினிமா ஞானமும் தாண்டி சக மனிதர்கள் மீதான அவரது அன்பை படைப்புகளின் மூலமாகவும், செய்கைகளின் மூலமாகவும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர். உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் கொடுக்கிற வெகு சிலர்களில் ஒருவர். அவரோடு வடிவேல் இணைந்திருப்பது சந்தோஷமளிக்கிறது. சில நேரங்களில் ஒத்த துருவங்களும் ஒன்றை ஒன்றை ஈர்க்கும் போலும். டைரக்டர் வடிவேல் என்றே அவரது எண்களை மொபைலில் சேமித்துக்கொண்டு விட்டேன்.

அபினவ் பிந்திராவுக்கு தங்கம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் மொத்த அலுவலகமும் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிக்கொண்டிருந்தோம். இனிப்பில் வறுத்த முந்திரியாக இந்திய அணியின் வாலிபால் பயிற்சியாளரான ஸ்ரீதரனுக்கு துரோணாச்சாரியார் விருது கிடைத்த செய்தியும் வந்தடைந்தது. இந்திய அணிக்காக அவர் விளையாடிய காலத்தில் ஏற்கனவே அர்ஜூனா விருது பெற்றவர். பயிற்சியாளராகவும் இந்திய வாலிபால் அணிக்கான அவரது சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அநேகமாக துரோணாச்சாரியார் விருது பெரும் முதல் தமிழர் இவராகத்தான் இருப்பார். அன்று மாலையே அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்திய வாலிபால் அணியில் தற்போதைய நிலை, இத்தாலியில் ஐந்தாண்டுகள் லீக் ஆடிய போது கிடைத்த அனுபவங்கள், வீரர்களை விட அதிகமாக அரசியல்வாதிகள் ஆடும் விளையாட்டு, வாலிபால் வலிமை பெற மேற்கொள்ள வேண்டியவைகள் என்று அவரது கவலைகளும் கனவுகளும் அதிகம் இருக்கின்றன. முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக விளையாடிய களைப்போ அலுப்போ கடுகளவும் தெரியவில்லை. இன்னும் பல சாதனைகளை செய்ய வாழ்த்துக்களை கொடுத்துவிட்டு கேண்டியைப் பார்க்கச் சென்றேன். வாலிபால் மாதிரி சுக்ரீவன் பால், அனுமன் பால் எல்லாம் ஏன் வரவில்லை என்று அவள் கேட்கும் அபாயம் இருப்பதால் ஸ்ரீதரனை சந்தித்ததை சொல்லவில்லை.

திரைப்படங்களுக்கு கேண்டியை அழைத்துச் செல்வது நள்ளிரவு வடபழனியில் நடப்பதை விட அபாயகரமானது என்பதால் குசேலனுக்குத் தனியனாய் சென்றேன். அருமையான கதைகளை வைத்துக்கொண்டு கோமாளித்தனம் செய்வதில் தான் ஒரு வல்லவர் என்பதை பி.வாசு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். பாபாவைக்கூட பல்லைக் கடித்துக்கொண்டு பார்த்து திரும்பிய பரம ரஜினி ரசிகனான என்னையே சாவு அடி அடித்து அனுப்பினார்கள். ஒரு முழுத்தலைவலியை முழுமையாக உணர்ந்தேன். 'அஞ்சு பாபி ஜார்ஜ் தங்கம் வாங்கி விட்டார்' என்ற ஒரு குறுந்தகவலும் அதைத் தொடர்ந்து 'வாங்கிய இடம்: ஜாய் ஆலுக்காஸ், பனகல் பார்க், சென்னை' என்றொரு மெஸெஜும் கேண்டியிடம் இருந்து வந்தது.

Comments

rapp said…
//பாபாவைக்கூட பல்லைக் கடித்துக்கொண்டு பார்த்து திரும்பிய பரம ரஜினி ரசிகனான என்னையே சாவு அடி அடித்து அனுப்பினார்கள்//
:):):)
rapp said…
//'அஞ்சு பாபி ஜார்ஜ் தங்கம் வாங்கி விட்டார்' என்ற ஒரு குறுந்தகவலும் அதைத் தொடர்ந்து 'வாங்கிய இடம்: ஜாய் ஆலுக்காஸ், பனகல் பார்க்//

super:):):)

Popular Posts