அம்மா பதிப்பகம்!

ராயல்டியெல்லாம் தர முடியாது வேண்டுமானால் ராயல் பேக்கரியில் டீ வாங்கித் தருகிறேனென பதிப்பாளர்கள் பகுமானம் காட்டுவதால் எழுத்தாளர்கள் அண்ணாஹசாரே வழி அறப்போராட்டமாக வீட்டு வாசலில் தர்ணா செய்யுமளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. இது ஒரு பக்கமென்றால் பர்ஸ்ட் ஃபார்ம் அச்சில் ஓடிக்கொண்டிருக்கும்போதே நூலின் பிடிஎஃப்பை இணையத்தில் இலவசமாக வெளியீட்டு ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி...’ என கட்டையைக் கொடுக்கும் வன்கொடுமையும் நடக்கிறது. கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் ”பாஞ்சாயிரம் மட்டும் கொடுங்க பாஸ் கவிதை பொஸ்தவம் + வெளியீட்டு விழா + ரெண்டு ரெவியூன்னு ஜமாய்ச்சுடலாம்” என கேரண்டி பிளஸ் வாரண்டியுடன் புதிதாய் முளைத்திருக்கும் நமக்கு நாமே மாமே பதிப்பகங்கள் இன்னொரு புறம்.

என்னங்க இது பலான ஐட்டமா இருக்கு என வாசகர்கள் விழி பிதுங்க ’மடையர்களே.. இது டிஜிமார்டனிஸம்டா’ என பொடனியில் தட்டுகிறார் ஒரு சீனியர். ஆயிரம் பக்கத்துக்கு குறையா எழுதுற எல்லாமே குறுநாவல்தான் என அச்சுறுத்துகிறார் இன்னொருவர். கதை உங்களுதா இருக்கலாம் ஆனா தொகுத்தது நான்தான். ஆக்சுவலா என் பேருதான் அட்டையில வரணும் என சட்டையை மாற்றுகிறார் மற்றொருவர். ‘என்னய்யா நடக்குது இங்க...?’ என தமிழ் வாசகாஸ் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள்.

அம்மா திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா தியேட்டர் போல “அம்மா பதிப்பகம்” ஒன்றினை உருவாக்குவதுதான் இந்த அலப்பறைகளைத் தட்டிக் கேட்க ஒரே வழி எனும் எனது யோசனையை சொன்னதுமே சமகால சிந்தனையாளர் அதிஷா ‘அமோகமான ஐடியா. மலிவு விலையில் கவிதைப்புத்தகம் போடுவதன் மூலம் தமிழகத்திலுள்ள இரண்டரைக் கோடி கவிஞர்களின் வாக்குகளை அள்ளிவிடலாம்’ என்கிறார். ட்வீட்டுகளின் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்கப் போராடி வரும் சில்டுபியர் என்பார் ‘கவிதைகள் ப்ளேட் 2 ரூபாய்க்கும், சிறுகதைகளை 4 ரூபாய்க்கும் விற்கலாம்’ என தன் யோசனையை முன் வைக்கிறார். இதன் சாத்தியங்களைச் சற்றே சாய்ந்தமானிக்கு அமர்ந்து அவதானிக்கையில் ஏழு கோடி தமிழர்களில் குடிப்பவர்களைக் காட்டிலும் கவிதைகளை வடிப்பவர்கள் ஜாஸ்தி என்பதால், டாஸ்மாக் வருவாய் எனும் சரித்திர சாதனையையே கூட அம்மா பதிப்பகம் முறியடிக்கக் கூடும்.

என்னென்ன செய்யலாம்?

1. மலிவு விலையில் புத்தகங்களைப் பதிப்பிக்கலாம். ஒரே கண்டிசன் பின்னட்டையிலும் முன்னட்டையிலும் பச்சைப் பின்னணியில் குதிரை இறக்கை பறக்கும். தலைப்புகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

2. நூறு ஜோடிகளுக்குத் திருமணம் செய்துவிப்பது மாதிரி ஒரே மேடையில் நூறு கவிஞர்களின் நூல்களை வெளியிடலாம். இதனால் பாஞ்சாயிரம் பதிப்பகத்தாரின் ஆசை வார்த்தைக்குப் பலியாகும் புதிய எழுத்தாளர்கள் பயனடைவார்கள்.

3. அம்மா பதிப்பக எழுத்தாளர்கள் எல்லாருமே ’அம்மா எழுத்தாளர் நலவாரியத்தின்’ பயனாளிகள். அடையாள அட்டை வழங்கப்படும். சீரான இடைவெளியில் ராயல்டி வழங்கப்படுவதோடு தீபாவளிக்கு ஒரு கதர் ஜிப்பாவும், பொங்கலுக்கு ஒரு வேட்டியும் ரேசன் கடைகளில் வழங்கப்படும்.

4. சீனியர் எழுத்தாளர்கள் அம்மா பதிப்பகத்தின் நூல்களைப் பாராட்டிப் பேச, எழுத எவ்வித தடையுமில்லை. அபகீர்த்தி உருவாக்கும் விமர்சனங்களைச் செய்தால் சிறையில் தள்ளப்படுவார்கள்.

5. அதிமுக மாநாடுகள் நடைபெறும் இடங்களில் கவிஞர்களுக்கென்று ஒரு ஓரமாகப் பந்தல் போட்டுத் தரப்படும். அங்கே கவியரங்கம்  நடத்தி எவ்வளவு வேண்டுமானாலும் அணத்திக்கொள்ளலாம்.

6. ஐநூறு பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் எந்த நூலும் அரசுடமை ஆக்கப்பட்டு அம்மா பதிப்பகத்தால் மறுபிரசுரம் செய்யப்படும்.

7. ஒவ்வொரு பத்திரிகைகளும் ஒவ்வொரு இதழிலும் தலா ஐந்து அம்மா பதிப்பக நூல்களுக்கெனும் மதிப்புரைகள் எழுதவேண்டும். மரியாதையாகத்தான் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

8. குடிப்பழக்கத்தை தூக்கிப் பிடிக்கும் எழுத்தாளர்களின் நூல்கள் டாஸ்மார்க்கிலும், தின்பதைப்பற்றியே அதிகமும் எழுதும் சாப்பாட்டுப் புராணிகர்களின் நூல்கள் அம்மா உணவகத்திலும், புனைகதைகள் சட்டமன்ற வளாகத்திலும் விற்பனைக்கு வைக்கப்படும். சினிமா தமிழர்களின் உயிர்நாடி என்பதால் அப்புத்தகங்கள் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கச் செய்யலாம்.

9. இஸங்கள் பொதுமக்களுக்குப் பேராபத்தை விளைவிப்பதால், பின்நவீனத்துவம் பற்றி பேசவும் எழுதவும் தமிழக அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வெழுதி லைசென்ஸ் பெற வேண்டும்.

10. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதும் நாவலாசிரியர்கள் நார்த் அமெரிக்கா, சவுத் கொரியாஸ்வீடன் போன்ற நாடுகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான நியுஸ்பிரிண்டைத் தாங்களே நேரில் வாங்கி வர உத்தரவிடலாம்.

Comments

கலக்கல் செல்வா! ஆனா என்ன இதெல்லாம் நடந்துவிடக்கூடிய அபாயமும் இருக்கிறதென்பதால் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது.

Popular Posts