வேப்ப மரம்; புளிய மரம்

புதியதாய் ஒரு உடை வாங்கினால் பழைய உடைகளில் ஒன்றை இல்லாதவர்க்கு தானம் செய்ய வேண்டும் என்ற பிரக்ஞை உடையவனாய் சில காலம் இருந்தேன். ஆனால் போட்டுக் கழித்த பழைய உடைகளைப் பிறருக்கு கொடுப்பதில் 'அறச்சார்பு' இல்லை என்பதால் உணவைப் போலவே உடைகளையும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சங்கல்பத்தில் சில மாதங்கள் உறுதியாக இருந்தேன். ஆனால், கண்ணைக்கவரும் தள்ளுபடி விளம்பரங்களில் சக விட்டில்களைப் போலவே நானும் பலியாகி பல்லாயிரம் இழந்தேன்.
சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு. அயலூரிலோ அவன் சட்டைக்குத்தான் மதிப்பு என்றொரு சொலவடை இருக்கிறது. அதுவும் கொள்ளைப் பணம் கொடுத்து உடை வாங்க நமக்கு சவுகர்யத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. என்னதான் சிந்தித்தாலும் எழுதினாலும் தகப்பனுக்கு உடை வாங்குகையில் மட்டும் சிக்கனம் எட்டிப் பார்ப்பது ஏதாவது ஒரு உளவியல் அல்லது பிறப்புக் கோளாறாகத்தான் இருக்குமோ?
எது எப்படியோ புத்தாடைகள், இனிப்பு பலகாரங்கள், நண்பர்களுக்கானப் பரிசுப்பொருட்களோடு கனத்த பையைக் கட்டிக்கொண்டு ஊர் செல்ல காத்திருக்கிறேன். இந்த முறையாவது குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு மேலாக ஊரில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்.
ஊர் போய் வந்த பின் 'எப்படி இருந்த ஊர்? இப்படி ஆயிடுச்சேன்னு?!' புலம்பல் கட்டுரை எழுதினா உங்க ஊருக்கே துரத்திடுவேன் என்கிறாள் கேண்டி. நெய்யில் மிதந்த அப்பத்திற்கு வடையின் வருத்தம் புரியுமா என்ன?!
"அன்பு கலக்காத ரொட்டி சுவைக்காது" என்பார்கள். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நிபந்தனையற்ற பேரன்பை கலக்குங்கள். இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
Comments
மிகச்சரி
வாங்க வடகரை வேலன்.