நிலவெரியும் கவிவரிகள்

ரான் ஆஃப் கட்சில் அஸ்தமனங்களையும் உதயங்களையும் பார்க்க தோதாக காட்சிக்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் ஏறி நின்று கண்களைச் சுழல விடுகையில் நாம் நொடிக்கு நொடி நம்முள் ஒடுங்குகிறோம். சிகரங்களுக்கு முன் நிற்கையில் இப்பேருருவிற்கு முன் என் எளிய ஆணவத்தின் பொருளென்ன என மனமடங்கும். இங்கோ வாழ்வின் அனைத்து அபத்தங்களையும் வெண்மணல் பரப்பு ஒன்று ரப்பரைப் போல் அழிக்கிறது. சிந்தை உப்புக்காற்றில் ஓடியோடி கரைந்தழிந்து போகிறது. சுற்றுலாப் பயணிகள் விரும்பும் எல்லை வரை சுற்றித் திரிய ஒட்டகம் பூட்டிய வண்டிகள் உண்டு. மணமகள் போல அலங்கரிக்கப்பட்ட தனி ஒட்டகங்களும் இருந்தன. டூரிஸ்டுகள் ஸ்பீர்க்கர்களில் கேவலமான இசையை ஒலிக்கவிட்டு ஆடிப்பாடி ஊர்வலம் சென்றார்கள். புதுமணத் தம்பதிகள் வளர்பிறை நிலவின் குளிரொளியில் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டு தோள் சாய்ந்தார்கள். காதலின் புத்தொளிக்கு ஆட்பட்ட இளம்பெண்ணொருத்தி காதலனின் ஸ்வெட்டருக்குள் புகுந்துகொண்டாள். படியேற தெவங்கி நின்ற மூதாட்டியை கழுத்தில் மஃப்ளர் சுற்றிய கிழட்டுக் கணவன் அலேக்காகத் தூக்கி வான்பார்த்து கொஞ்சினான். காட்சிக்கோபுரத்தின் ஈசான மூலையில் அத்துவானம் பார்த்து கண்ணீர் வழிய நின்றுகொண்டிருந்தான் ஒரு மத்திய வயதுக்காரன். காற்றில் பொன்னிற கேசம் அலைய கால் மூட்டுக்களைக் கைகளால் கோர்த்துக்கட்டியபடி வெளிநாட்டுப் பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள். கழுத்தைச் சாய்த்தபடி வான் நோக்கியிருந்த அவளது வாய் ஓவென பிளந்திருந்தது. அவளது உலகில் கடிகாரம் மட்டுமல்ல காலண்டரும் நின்றுவிட்டது போலத் தோன்றியது.

நண்பர்கள் பரவசத்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். எனக்குள் ஏதோ ஆகிவிட்டதை உணர்ந்தேன். திருக்குறளரசியை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டேன். பூரண நிலவிரவில் நாம் ஒருமுறை இங்கு அவசியம் வருவோம் அன்பே என மானசீகமாக சொல்லிக்கொண்டேன். பிரிதலின் குற்றவுணர்வு.

தொடர்ந்து அம்மாவின் நினைவு. பிள்ளைகளின் நினைவு. ஊரின் நினைவு. நாங்கள் ஒரு கூட்டுப் பறவைகளாக சிறகடித்துப் பறந்த வாழ்க்கையின் நினைவு. கந்தக நெடி. அத்தை மகளின் நிபந்தனையற்ற நேசம். துள்ளத்துடிக்க விட்டுச் சென்ற தந்தையின் நினைவு. செய்து விட்ட சத்தியங்கள். ஈவிரக்கமற்று செய்துவிட்ட துரோகங்கள். வாசித்த கவிதைகள். ஆஹ் கவிதைகள். நிலவைப் பாடிய பெருங்கவிஞன் பிரமிள் இல்லாமல் இந்த இரவு முழுமை கொள்ளாது. தலை ஒட்டிப் பறந்தது ஒரு வெளவால். இல்லை இது உழவாரக்குருவி. ச்சே இங்கேது உழவாரம். இது ஆலா. இறகை விரித்து சாண் சாணாய் கடல் அளக்கும் ஆலா. "வெளிச்சச் சிறகில் மிதக்கும் குருவி." இந்த உப்பளத்தில் இது இன்னொரு பறவையை எப்போது பார்க்கும்? என்ன விசாரிக்கும்? "எந்தப் பறவை எதனிடம் சொல்கிறது / பறந்ததை, பார்த்ததை, கூட்டை, நிழலை சிறகொடிந்ததை..." வாருங்கள் பிரமிள் சார். உங்களைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். முழுநிலா காயும் இரவுகளில் இந்த ரான்சாத்தானின் ஓவியம்ஆகிவிடுகிறது கவனித்தீர்களா சார். பாழ்வெளி பால்வெளியாகத் திரிந்துவிடுகிறது. வெட்டவெளியில் வெள்ளைப் பொட்டலில் நின்று சூரிய அஸ்தமனம் பார்த்த இந்த வெள்ளைக்கார அழகியின் வாய் வளர்பிறை நிலா போல பிளந்திருக்கிறதை கவனித்தீர்களா சார். எனக்கு ஆங்கிலம் தெரியாது. தெரிந்திருந்தால் இசை சொல்வானேஇந்த இரவில் மேலும் மேலும் நிலவைத் திருகுகிறான் ஒருவன்கவிதையை இவளிடம் நிச்சயம் சொல்லியிருப்பேன். இவள் அழகி. நிலவு மகள். தூரத்தின் பார நினைவுகள் இவளைச் சிலையென்றாக்கியிருக்கிறது. சொற்கள் எனக்குள் ஏன் மழை போல பொழிகின்றன. கவிதையை art of rain என்று நெரூதா சொன்னது சரிதான். திருக்குறள் ஒரு மூலமந்திரம் போல வாழ்க்கை முழுக்க வருகிறது என்று ஜெ சொல்கிறார். நமக்குக் கவிதைகளும் அப்படித்தான். இடம் பொருள் ஏவலின் தடம் பார்த்து வந்து தாடையை தடவிக் கொடுக்கும். “இருளின் நிறமுகக் கதுப்பில் தணல்கள் சிரித்தனஅட இது பைத்தியத்துக்குப் பக்கத்து நிலையல்லோ. அகத்தைக் காலி செய்ய வேண்டும். குறைந்த பட்சம் இடத்தையாவது. திருவை அழைக்கவேண்டும். அவளென் பிறவிப்பயன். ‘இன்று, இடையறாத உன் பெயர் நிலவிலிருந்திறங்கி என் மீது சொரியும் ஓர் ரத்தப்பெருக்குலேசாக நெஞ்சடைக்கிறது. இளையராஜா கேட்கலாம். ஆனால் உடைந்து அழ வேண்டியிருக்கும். இந்தப் பயல்களுக்கு முன் அழப்படாது. செந்திலெல்லாம் சிரித்தே கொன்று போடுவான். முற்றிலும் இருள் கவிந்து சிவந்த நிலா இன்னும் துலங்கியது. "இது புவியை நிலவாக்கும் / கண்காணாச் சரக்கூடம் / நடுவே நெருப்புப் பந்திழுத்து / உள்வானில் குளம்பொலிக்கப் / பாய்ந்துவரும் என் குதிரைஅட என் சிந்தனைக் குதிரை தடுமாறி தடுமாறி தடம் மாறுகிறதே. யாரிடமோ தண்ணீர் வாங்கிக் குடித்தேன். கண்களைத் துடைத்து மூச்சை இழுத்து விட்டுக்கொண்டேன்.

கூட்டம் குறையத் தொடங்கியது. நண்பர்களிடமும் மெள்ள அரவம் குறைந்து அமிழத் துவங்கினர். தொலைநோக்கியில் உயிரசைவற்ற நிலப்பரப்பைத் துருவினேன். வளர்பிறை வான். கடுகு கிடந்தாலும் கண்ணுக்குத் தெரியும் பொட்டல். பாலைமீ தெங்கும் திசையின்மையுள் திசை தவறி ஓடும் சுவடுகள்ஐம்பது கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிராமத்தில் ஒலித்த பாடல் ஊதுவத்திப் புகையைப் போல வந்து தொட்டுச் சென்றது. அடிவானம் முடியும் இடத்திலோர் நீலப்புள்ளி. மின்னி மறைந்த நீலப்புள்ளியில் சிந்தையை நிறுத்தி அவதானித்தேன். எட்டாத தொலைவில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தின் சிலுவை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பிரமிளின் கவிதை வரிகள் முன் பின்னான குழம்பிய சொற்களாக நினைவில் வந்து குதித்துக்கொண்டிருந்தன. மனதின் கிடங்கிற்குள் இத்தனைக் கவிதைகள் பரமாரிப்பின்றிக் கிடந்தனவா. பாலையும் நிலவும் பரிதியும் பிரமிளால் உருவேற்றப்பட்ட படிமங்கள். நம் ஆழ்மனம் படிமவெளி. இரவில் குளித்து உலகம் வீசும் வெளிச்சச் சாயை பரிதிஎங்களைத் தவிர யாரும் இல்லை. குளிரத் துவங்கியிருந்தது. நட்சத்திரங்களை விடவும் நண்பர்களின் கண்களில் பளபளப்பு அதிகம் இருந்தது. சக்தி கிருஷ்ணன் மட்டும் ஒரு திசையை நோக்கிஇம்ரான்கான்இம்ரான்கான்நான் கூப்பிடுறது கேட்கிறதா...’ என கத்திக்கொண்டு இருந்தான்.

(பாலை நிலப் பயணம் நூலின் ஒரு அத்தியாயம்)

x

Comments

Popular Posts