காதில் புகுந்த கள்ளிச்செடி

புத்தகத் திருவிழாவிற்கு தினமும் போயாகவேண்டும் என்று சங்கல்பம் எடுத்ததால், அலுவலக வேலைகளை முடித்துவிட்டு கிளம்பினோம். நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நான் கடந்த ஐந்தாண்டுகளாக தேடியலைந்து வரும் மு. வரதராசனார் எழுதிய "பெர்னார்ட் ஷா" இந்த கண்காட்சியிலும் கிடைக்கவில்லை. பாரதி புத்தகாலயத்தில் பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" வாங்கினேன். சந்தியா பதிப்பகத்தார் கவிஞர். விக்ரமாதித்யனின் " நூறு எண்ணுவதற்குள்" கவிதை நூலை இலவசமாகக் கொடுத்தனர். திலகவதி தன்னுடைய பரிவாரங்களுடன் வந்திருந்தார். எளிதில் கண்டுபிடித்துவிடமுடியாத எளிமை, மாறாத புன்னகை, தெளிவான பேச்சுதான் அவரது அடையாளங்கள். அவரது எழுத்தாற்றலும், மானுடம் மீதான தீராத அக்கறையும் "கல்மரம்" வாசித்தால் புரியும்.

நான்காம் நாள் நிகழ்ச்சியாக கவிதை வாசிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. நண்பர்கள் எவ்வளவோ மறுத்தும் விடாமல் இழுத்துக்கொண்டு, அரங்கினுள் நுழைந்தேன். தேவேந்திர பூபதி, சுகிர்தராணி, கரிகாலன், தென்றல், க்ருஷாங்கினி, இளம்கோ, அவைநாயகன், மரகதமணி என வளர்ந்த, வளர்ந்துகொண்டிருக்கிற, வளர இருக்கிற கவிஞர்களின் கலந்து கட்டின கலவையாக இருந்தது மேடை. தங்களது அபிமான கவிதை ஒன்றும், சொந்த கவிதை ஒன்றும் வாசிக்க வேண்டும் என்பது ஏற்பாடு. சுகிர்தராணி தவிர மீத கவிஞர்களின் கவிதை சத்தியமாகப் புரியவில்லை. ஏதாவது கேட்கவோ, எழுதவோ போனால், புதுச்சேரியில் மீட்டிங் போட்டு "தலையை எடுப்பேன்" என உணர்ச்சி வசப்படுவார்கள். அதிலும் மூத்த கவிஞரான க்ருஷாங்கினி பாடிய "முத்தமும், மூத்திரமும்" கவிதை "உவ்வே" ரகம். கள்ளிச்செடி புடுங்கி காது குடைந்தது போலாகிவிட்டது. கரிகாலன் நல்ல நகைச்சுவையும், இயற்கை மீதான அக்கறையும் மிளிரும் "வீட்டிற்கு புலி வந்த நாளில்" கவிதையை மைக்கை கடித்துக்கொண்டே வாசித்ததில் புலி இறந்துவிட்டது. சுகிர்தராணி தவிர வேறு யாருக்கும் கவிதைகளை வாசிக்க தெரியவில்லை. உரத்த குரலில், ஏற்ற இறக்கங்களோடு, போதுமான இடைவெளி கொடுக்காமல் வார்த்தைகளை மிக்ஸியில் போட்டு அடித்த மாதிரி.... ரிடிகுலஸ்..! மற்றபடி இளம்கவிதாயிணி மரகதமணி அழகாக இருக்கிறார் என்று எழுதினால் ஏதாவது பிரச்சனை வருமா என்ன..?

Comments

இளம்கவிதாயிணி மரகதமணி அழகாக இருக்கிறார் என்று எழுதினால் ஏதாவது பிரச்சனை வருமா என்ன..?


நிச்சயம் பிரச்சனை வராது. முடிந்தால் இந்தப்பதிவில் கவிஞர்களின் புகைப்படத்தையும் இணைத்திடுங்கள் :-)

Popular Posts