ரசீதுக்கட்டை ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்திற்கு எனது மூன்றாவது விசிட் இது. இரண்டு முறை உள்ளூர் நண்பனுடன், இந்த முறை சிவசங்கருடன். சிவசங்கர் புராணக்கதைகளோடும், வரலாற்றுப்பிண்னனியோடும் ஆன்மீக விஷயங்களை அறிமுகப்படுத்துவதில் வல்லவர். விடுமுறை தினங்களில் கோவையிலிருந்து திருச்சி செல்வதே சவாலான விஷயம். சுமார் ஆறுமணி நேர காத்திருப்பு, ஐந்தரை மணிநேர பஸ் பயணத்திற்கு ஸ்ரீரங்கம் வந்துசேர்ந்தபோது மிகவும் களைப்புற்றிருந்தோம்

கோவிலின் முன்பு சாக்குகளால் சுற்றுசுவர் எழுப்பபட்டு, ஆயுதம் தாங்கிய நான்கைந்து போலீசாரின் பாதுகாப்பில் பெரியார் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். பிரார்த்தனைகள் அர்த்தமற்றது என்ற புத்தன் கடவுள் ஆக்கப்பட்டான். தனிமனிதவழிபாட்டை வன்மையாகக் கண்டித்த பெரியாரின் சிலைகளை ஊர்தோறும் திறந்து சிலையின் பெயரால் அரசியலும், வன்முறையும் செய்கிறார்கள் பெரியாரின் பிள்ளைகள். "மனிதன் மகத்தான சல்லிப்பயல்" என்று ஜி.நாகராஜன் சொன்னது நிணைவுக்கு வந்தது.

கன்னக்கதுப்புகள் பொசுங்கும் மொட்டை வெயிலில் விடுதியைத் தேடி கண்டுபிடித்து, குளித்துவிட்டு விசுவரூபதரிசனம் பார்க்க கிளம்பினோம். வழக்கத்திற்கு மாறாக மிகநீண்ட க்யூ இருந்தது. சிறப்புதரின க்யூவில் புகுந்த எங்களுக்குப்பின்னால் ஒரு முதிய ஜோடி கால்களை மாற்றி, மாற்றி நின்று கொண்டிருந்தது. கணவர் பாலக்காட்டு ஐயர், மனைவியோ தெலுங்கு பிராமின். தங்களது அந்திமத்தை ஊர்சுற்றிக் கழிக்கும் அளவிற்கு பணவசதி கொண்டவர்கள் என்பது நவரத்தின மோதிரங்களிலிருந்து தெரிந்தது. சில பேர் க்யூவில் நிற்காமல் இடையே புகுந்து செல்கிறார்களே என புலம்பிக்கொண்டிருந்தார் மாமி. இடைவிடாமல் புலம்பிய மாமியை மாமா ஆத்திரத்துடன் " என்ன பண்ணலாம்? எல்லாரையும் தூக்கில் போட்றலாமா?" எனக்கேட்டவுடன் மொத்தக் க்யூவே சிரித்தது. அவமானம் தாங்காமல் தெலுங்கில் திட்ட அவர் பதிலுக்கு மலையாளத்தில் திட்ட, உயர்மட்ட ஆங்கிலமும் கலந்துகொள்ள பகவான் தரிசன க்யூவில் பன்மொழிபுகழுரைகள். வயதான ஜோடிகளுக்கு எனது யோசனை ஊர்சுற்றிப்பார்ப்பதாக இருந்தால் மே மாதத்தை தேர்வு செய்யாதீர்கள். வெயிலும், கூட்டமும் உங்கள் முதுமையால் தாக்குப்பிடிக்க முடியாத சுமை.
தென் திசை இலங்கை நோக்கும் அரங்கனைத் தவிர ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் எனக்கு மிகவும் பிடித்த விசயங்கள் நரசிம்மர் சன்னதியில் அழகிய சித்திரங்கள் சூழ இருக்கும் ஆக்ரோச நரசிம்மசுவாமிகளும், ஸ்ரீமத்ராமனூஜர் சன்னதியும்தாம். நாங்கள் சென்றதினம் சித்ராபவுர்ணமி-நரசிம்ம ஜெயந்தியாய் இருந்தும் இரு சன்னதிகளும் பூட்டப்பட்டிருந்தது. ஒரு அழகியபெண் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபத்தில் அமர்ந்து எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருந்தாள்.
சிவசங்கர் குலசேகரஆழ்வார் கோவில் கைங்கர்யத்துக்கு தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, மதில் சுவர் கட்டும் பணிக்காக கொள்ளையடித்த வரலாற்றினை சுவைபட சொல்லிக்கொண்டிருந்தார். திருமங்கை ஆழ்வார் காலத்தில், வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்கு, நம்மாழ்வார் திருஉருவசிலையை நம்மூர் ஆழ்வார்திருநகரியிலிருந்து எடுத்துவருவார்கள். பின்பு ராமானுஜர் ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார் சிலை ஒன்றை செய்தார் என்ற அவரது தகவல்கள் ஆச்சரியமூட்டியது. சைவத்தின்பால் ஆர்வம் கொண்டிருந்தாலும் சோழமன்னர்களும், பாண்டியர்களும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கைங்கர்யம் செய்வதில், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்களுக்கு எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்றார்.
கோவிலுக்குள் இருக்கும் அருங்காட்சியகத்துக்கு நுழைவுக்கட்டணமாக வெரும் ஒரு ரூபாய்தான் வாங்குகிறார்கள். உள்ளே நுழைந்தால் பண்டைய மன்னர்களின் வாள், செப்புப்பட்டயங்கள், சிற்பங்கள், பழைய பூட்டுகள், நாணயங்கள், இரும்பு கவசங்கள், ஆலய வரலாறினை விளக்கும் குறிப்புகள் என ஏகப்பட்ட ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஆனால் 'கடைவிரித்தேன் கொள்வாரில்லை' என்ற கதையாக பிரசாத ஸ்டாலில் இருந்த கூட்டத்தில் ஒரு சதவீதம்கூட அருங்காட்சியகத்தில் இல்லை.
மாலிக்கப்பூரின் சூறையாடல்களுக்குப்பின்னும் அழகும் கம்பீரமும் குறையாத ஸ்ரீரங்கம் கோவிலின் ஒரே அருவருக்கத்தக்க விஷயம்... அங்கு பணியில் இருக்கும் அர்ச்சர்கர்களிடம் தற்போது தலைதூக்கி இருக்கும் ரசீதுக்கட்டை பணப்பிடுங்கல்தான். ஒவ்வொரு சன்னதியிலும் அர்ச்சகர்கள் ஏதாவது யாகம், அர்ச்சனை, பூஜை, கைங்கர்யம் என சொல்லி முகத்திற்கு முன்னாள் ரசீது நோட்டை நீட்டுகிறார்கள். சீக்கிரத்தில் பழனியை பின்னுக்கு தள்ளிவிடுவார்கள் எனத்தோன்றுகிறது. தாயார் சன்னதியில் ஒரு புதுமணத்தம்பதியிடம் தக்கணுண்டு மஞ்சள் பொடியைக் கொடுத்துவிட்டு ஒரு பட்டர் ரூ.300/- பிடுங்கிய அநியாயம் நடந்தது. ஜாக்கிரதை..!

இந்த பயணத்தில்தான் முதன்முதலாக டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்த தெரிந்துகொண்டேன். நான் எடுத்த சிலபடங்கள் நன்றாக இருப்பதாக அலுவலக நண்பர்கள் சொன்னதால் இந்த பதிவில் இடம்பெறச் செய்திருக்கிறேன். அனைத்து படங்களும் என்னால் எடுக்கப்பட்டதே...!









Comments

Popular Posts