எஸ். ராமகிருஷ்ணனுடன் சில மணித்துளிகள்

எஸ். ராமகிருஷ்ணனுடன் இது எனது இரண்டாவது சந்திப்பு. முதல் முறை எங்கள் நிறுவனம் நடத்திய நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தபோது, விஜயா வேலாயுதம் மூலம் அறிமுகம். அன்றைக்கு 'அறியப்படாத மனிதர்கள்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில் மெய் மறந்தேன். தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்க மறந்த அல்லது பார்க்க மறுக்கின்ற எளிய மனிதர்களின் அறியப்படாத வரலாற்றை தனது பவுடர் பூசாத வார்த்தைகளில் விவரித்தார். அவர் பேசி முடித்ததும் இளைஞர் குழாம் அவரைச் சுற்றி வளைத்து கேள்விகளால் துளைத்தெடுத்தது. ஏதேதோ கேள்விகள்... கனிவான பதில்கள். தமிழ்நாட்டின் அணுகுவதற்கு எளிமையான எழுத்தாளர்களுள் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். அன்று மதிய உணவிற்கு அஸ்வினி ஹோட்டலில் நானும் அவரும் ஒன்றாக அமர்ந்திருந்தோம். அப்போதுதான் தீராநதியில் வெளியாகி இருந்த 'நூறு கழிப்பறைகளின் கதை' எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியினை சொன்னபோது சிரித்துக்கொண்டார். அப்புறம் நானும் கேனத்தனமான கேள்விகளால் அவரைத் துளைத்தேன்.

இரண்டாவது சந்திப்பு, கோவை புத்தகக்கண்காட்சியில்... பதினொன்றாம் நாள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
'என்னை உங்களுக்கு மறந்திருக்கும், நான் செல்வேந்திரன்' என்றபடி எனது நண்பர்களை அறிமுகப்படுத்தினேன். என்னோடு வந்திருந்த பத்திரிக்கையாளரது சமீபத்திய நகைச்சுவை ஒன்றை ரசித்ததாக கூறியபடி ஆரம்பித்தார். விகடனில் வரும் அவரது 'கேள்விகள்' புதிய தொடர் நன்றாக இருப்பதைத் தெரிவித்தேன். அவரது நுட்பமான எழுத்தின் தீராத ரசிகரான கணபதி, அவருக்கு ஒரு விவேகானந்தர் படத்தை பரிசளித்தார். புதிய தொலைபேசி எண்களை பெற்றுக்கொண்டு விடைபெற்றேன். எழுதும் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத மனிதன் இவர் என்றார் என்னோடு வந்தவர். அது எனக்குத் தெரியாததா என்ன?

Comments

Popular Posts