பிரதியங்காரக மாசானமுத்து எழுதிய காதல் கடிதம்

தாட்சாயிணி,

உன்னுடைய கோபங்கள் விசித்திரமானவை. நியாயங்களும், நியாமற்றவைகளும் சரிவிகிதத்தில் கலந்து நிற்கும் அதுமாதிரியான கோபங்கள் அடிக்கடி வாய்ப்பதில்லை. உன்னை அழைக்கிறேனென சொல்லிவிட்டு அழைக்காமல் போய்விட்ட கோபத்தில் இனிமேல் கூப்பிடாதே என்கிறாய். என்னுடைய அன்றாடங்கள் முகம் தெரியாத மனிதர்களால் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதென்பதையும் நான் பல்வேறு கதவுகளை அறியாமல் திறந்துவிட்டு அல்லாடுபவன் என்பதும் நீ அறியாததல்ல. சாவகாசங்கள் ஏறியூட்டப்பட்டுவிட்ட என்னைப் போன்ற ஒருவன் அழைக்காமல் இருந்து வருத்தத்திற்குரியதா அல்லது வாதத்திற்குரியதா?!

உன் அழைப்பிற்காக ஏங்கி நிற்கும் அளவிற்கா நிதர்சன வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொருவிதமான அவதிகள். உன் அவதிகளின்போது அன்பொழுக ஒதுங்கி நிற்கிறேன் நான். ஒருவன் ஒரிரு நாளாக ஓவராக படம் காட்டினான் என்றால் ஏதோ பட்சி சிக்கி இருப்பதால் பதுங்குகிறானென நீ விட்டு பிடித்தால், பழைய குருடி கதவை திறடி என தானே வந்து விடுவேன் என்பது ஏன் புரியவில்லை உனக்கு.

எப்போதும் ஓரே பெண்ணை காதலிக்க முடியாது என்பது சீனபழமொழி. எப்போதும் ஓரே பெண்ணை காதலிக்கவே முடியாது எனும் போது கடலை மட்டும் எப்படி சாத்தியமாகும். வயது ஏற ஏற முகத்திலும், பர்ஸிலும் ஏற்படும் பொலிவால் தற்போது ஒரிரு சிவந்த பெண்களும் ஸ்க்ராப்பித் தொலைக்கிறார்கள். ஆற்றுத்தண்ணீர் என்று அள்ளிக்குடிக்கத் துடிக்கையில் அண்டா தண்ணீர் நீ ஏன் தழும்புகிறாய்?

காலையில் பக்கத்து அலுவலக பெண் வாசலில் மறித்து மணிக்கணக்காய் வறுக்கிறாள். சற்று நேரத்திற்கெல்லாம் தஞ்சாவூர்காரியிடமிருந்து போன் வருகிறது. கணிணியை திறந்தால் பதிவுல தோழி ஒருத்தி சாட்டிங்கில் ஓரமாய் வந்து உருமி அடிக்கிறாள். அட போம்மா என ஆர்க்குட் வந்தால் அகமதாபாத்திலிருந்து அஞ்சலை காட்டுத்தனமாய் ஸ்க்ராப் போட்டிருக்கிறாள். மெயிலைத் திறந்தால் 'ஹாய் டியூட் ப்ரான்ஸிலிருந்து மெனோ' என மெனக்கெட்டு அனுப்பிய மெயில். எத்தனை வழிகளடா எத்தனை பிகர்களடா.

வான்கூவர், பாரீஸ், கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம், சென்னை, திருப்பூர், நொய்டா, அகமதாபாத், தஞ்சாவூர், ரெட்டியார்பட்டி, கும்பகோணம், சாத்தான்குளம் என வெளிநாடு தொடங்கி குக்கிராமங்கள் வரை அடியேனுக்கு ரசிகர் வட்டம் பெரிதென்பதால் நான் படும் அவஸ்தைகளை உனக்குத் தெரியப்படுத்திக்கொள்ளவே இந்த மடல் என்பதை மறுபடியும் உனக்கு நிணைவுறுத்திக்கொள்கிறேன். ஒரு பொன்மாலைப்பொழுதில் எனக்கு இதுவரை அறுபது புரொபசல் வந்திருக்கு தெரியுமா என நீ பீற்றிக்கொண்டதற்கு பதிலுக்குபதிலாகத்தான் இப்படி எழுதுகிறான் பரதேசி என நீ நிணைத்துக்கொள்ளும் அபாயம் இருப்பதால்தான் உனக்கு இதை நிணைவுறுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஊதுகுழலுக்கு ஒரு பக்க ஓட்டை ஊதும் நாயணத்துக்கோ உடலெல்லாம் ஓட்டை.

பெருமைக்காக சிறுபத்திரிக்கைகள் வாங்கி படிக்காதே, படிக்காதேயென பலபேர் சொல்லியும் கேட்காததால் வந்த விளைவை பார்த்தாயா? செக் புக் தீர்ந்துவிட்டது என கடிதம் எழுத வேண்டி வந்தாலும் நான்கு பேப்பர்கள் எழுதியாக வேண்டிய துர்பாக்கியசாலி ஆகிவிட்டேன் நான். செக் புக்கிற்கே நான்கு பக்கமென்றால் செக்கசிவந்த கன்னி உனக்கு பத்து பக்கமாவது எழுதினால்தான் நான் ஒரு இலக்கியவாதியாக காலம் தள்ள முடியும் என் செல்வமே.
நான் அனுப்பும் மொக்கை மெஸெஜூகளையே வாசிக்க சோம்பல் படும் நீ இந்த கடிதத்தை வாசிக்கவே மாட்டாய் என்பது உலக ஜீவராசிகள் அத்தனைக்கும் தெரிந்த உண்மை என்றாலும் இலக்கியம் என்று வந்துவிட்டால் அதில் யாதொரு சமரசமும் செய்ய துணியாதவன் இந்த செல்வேந்திரன் என்பதை நிரூபிக்கவே இந்த கடிதம். முன்பொருமுறை உன்னை காதலிக்கிறேன் என எழுபது பக்கத்திற்கு நான் எழுதிய கடிதத்தின் இரண்டு பாராக்களை மட்டும் படித்துவிட்டு என்ன இது இரண்டு பொட்டலம் அடிச்ச மாதிரி இருக்கு என நீ பதில் சொல்லியபோது என் மனம் என்ன பாடு பட்டது என்பதை நான் மட்டுமே அறிவேன் அன்பே.

உன்னை நான் கூப்பிடாத ஆத்திரத்தில் எனது எண்களை ஆட்டோ ரிஜக்டில் போட்டு விட்டாய். எப்போது கூப்பிட்டாலும் செவிட்டில் அறை வாங்கியது போல் ''டொய்ங்.." என்ற சத்தம் மட்டுமே கேட்கிறது. ஆனாலும் ஆனாலும் உன் ஒற்றை ஹலோவைக் கேட்க ஓராயிரம் முறை நான் முயற்சிப்பேன் என நீ முட்டாள்தனமாய் முடிவெடுத்து விட்டதைக் கண்டு நான் அதிர்ச்சியடைகிறேன். மூன்று தடவைக்கு மேல் எவனும் எவளுக்கும் போன் செய்ய மாட்டான் என்பது உலகப்பொதுவிதியாய் இருக்கையில் நான்காவது கால் நாலு நாளுக்கு முன் பார்த்த நான்சிக்கு போடுவதுதானே முறை. அந்த வகையில் நான்சியோடு நாலு நாளாக வறுத்ததின் பலனாக இன்றிரவு அவள் வீட்டில் வறுவல் சாப்பிட இருக்கிறேன். வறுப்பின் விளைபொருளாய் வறுவலே கிடைத்தலென்பது கடலை வரலாற்றில் ஒரு விசித்திரம்.

இந்தக்கடிதம்கூட எவனாவது நெம்புகோலன் கண்ணில் பட்டுவிட்டால் கூட்டம் போட்டு கூப்பாடு போடும் அபாயம் இருந்தும் கூட, உயிரையே பணயம் வைக்கும் இந்த விபரீத கடிதத்தை உனக்கு எழுதுகிறேன் என்றால் என் காதலில் நீளம் உனக்கு புரிந்திருக்கும். என் காதலின் ஆழம் புரிய வேண்டும் என நிணைத்தால் பால்பாண்டி நாடார் வயல் கிணத்துக்குள் உட்கார்ந்து ஒருமுறைக்கு இருமுறை படித்துபார் ஏதாவது புரிந்ததென்றால் கடிதத்தில் கப்பல் செய்து கிணற்று நீரில் மிதக்க விடு.

புரியவேயில்லையென்றால் உனக்குத் தெரிந்த தீவிர இலக்கிய பத்திரிக்கை ஏதாவது ஒன்றிற்கு உன் அப்பன் பெயர் போட்டு அனுப்பி விடு. வரும் பணம் உனக்கு; பெரும் பெயர் உன் அப்பனுக்கு;

உன்னால் வரும் பெயரும் புகழும் என் குடும்பத்திற்கு தேவையில்லை என நீ நிணைத்தால் இதை எதிர் வீட்டு குஜராத்தி பெண்ணிடம் கொடுத்துவிடு. அப்போதாவது அவளுக்கு புரியட்டும் காதலுக்கு மொழி முக்கியமில்லை (முழிதானே முக்கியம்) என்பது.

இப்படிக்கு,

கழட்டி விடப்பட்ட கலகக்காதலன்

பிரதியங்காரக மாசானமுத்து

Comments

Anonymous said…
செல்வா!

ஒரே குமுறு குமுறுன்னு குமுறீருக்கீங்க.
பால் பாண்டி நாடார் வயல் கிணறு எங்க இருக்கு. ஊர்லயா?
தங்ஸ் said…
பக்கா முடியலத்துவக்கதை...அம்மணி நம்பர் தாங்க..மூணு தடவ ரிங் விட்டுப்பாக்கறேன்:-)))
//மொழி முக்கியமில்லை (முழிதானே முக்கியம்) என்பது.//

ha ha ha... epadiyellam yosikarangaiya....
selventhiran said…
வெயிலான் சாத்தான்குளத்துல பயங்கர பேமஸான கிணறு அது.
தங்ஸ் இதுக்கு பேருதான் சொ.செ.சூ
வாங்க விக்கினேஸ்வரன் வருகைக்கு நன்றி
///அதில் யாதொரு சமரசமும் செய்ய துணியாதவன் இந்த செல்வேந்திரன் என்பதை நிரூபிக்கவே இந்த கடிதம். ///

இப்படிக்கு,

கழட்டி விடப்பட்ட கலகக்காதலன்

பிரதியங்காரக மாசானமுத்து

எங்கயோ இடிக்குதே!!! செல்வேந்திரன் எப்ப மாசானமுத்து ஆனார்?
காலையில் பக்கத்து அலுவலக பெண் வாசலில் மறித்து மணிக்கணக்காய் வறுக்கிறாள். சற்று நேரத்திற்கெல்லாம் தஞ்சாவூர்காரியிடமிருந்து போன் வருகிறது. கணிணியை திறந்தால் பதிவுல தோழி ஒருத்தி சாட்டிங்கில் ஓரமாய் வந்து உருமி அடிக்கிறாள். அட போம்மா என ஆர்க்குட் வந்தால் அகமதாபாத்திலிருந்து அஞ்சலை காட்டுத்தனமாய் ஸ்க்ராப் போட்டிருக்கிறாள். மெயிலைத் திறந்தால் 'ஹாய் டியூட் ப்ரான்ஸிலிருந்து மெனோ' என மெனக்கெட்டு அனுப்பிய மெயில். எத்தனை வழிகளடா எத்தனை பிகர்களடா.


என்ன செல்வா பகல் கனவா? இருந்தாலும் இது ரொம்ப ஓவர் மச்சி.
Anonymous said…
its nice... ore verithanam thaan panga

Popular Posts