மழை நாள்


விடாது பெய்து கொண்டிருந்தது மழை. அவரமாய் குளத்துப்பாளையம் சென்றாக வேண்டும். ஜெர்கினையும் தொப்பியையும் எடுத்துக்கொண்டு பைக்கில் கிளம்பினேன். சாலை எங்கும் பெரு வெள்ளம். ஒவ்வொரு சப்வேயிலும் ஆளை மூழ்கடிக்கும் அளவிற்கு நீர் ஓடிக்கொண்டிருந்தது. மின்சாரம் வேறு இல்லாததால் கும்மிருட்டு. குண்டு எது குழி எது தெரியாமல் அங்கங்கே கார்களும், பைக்குகளும் பள்ளங்களில் சிக்கி இருந்தது. மாநகராட்சியை சபித்துக்கொண்டே எனக்குத் தெரிந்த சந்து பொந்துகளுக்குள் நுழைந்து பாலக்காடு செல்லும் பிரதான சாலையை அடைந்தேன்.

சாலையில் வேறு எந்த வாகனப் போக்குவரத்தும் இல்லை. பாலக்காடு செல்லும் ஒரிரு லாரிகளும் சேற்றை என் மீது வாரியடித்து விரைந்து கொண்டிருந்தது. இத்தனைச் சிரமத்தில் இந்தப்பயணம் அவசியமா என யோசித்துக்கொண்டிருந்த விநாடியில் அந்தப் பெண்ணைக் கண்டேன். ஆத்துப்பாலத்திற்கும் குனியமுத்துருக்கும் இடைப்பட்ட சாலையில் மழையில் நனைந்தபடி நடந்து கொண்டிருந்தாள். சுடிதார் ஷாலை தலைமீது முக்காட்டைப் போல் அணிந்திருந்தாள். வண்டியின் வேகம் குறைத்து அவளது முகத்தைப் பார்த்தேன். அழகிய முகம். பதினெட்டு வயது இருக்கலாம். கையில் புத்தாடைகள் வாங்கிய ஜவுளிக்கடை பை. ஏன் இந்த நடு ரோட்டில் நடு ராத்திரியில் அல்லாடுகிறாள்? என நினைத்தபடி கடந்தேன். சிறிது தூரம்தான் சென்றிருப்பேன். அவளது மருண்ட விழிகள் மனதை ஏதோ செய்ய, வண்டியைத் திருப்பி அவளை அணுகினேன். என்னைக் கண்டதும் இன்னும் பயம் கொண்டாள்.

"என்னங்க இது இந்த மழையில நனைஞ்சுகிட்டு இருக்கீங்க...?"

பதிலில்லை.

"பயப்படாதீங்க... இந்த ராத்திரில இப்படி நனையுறீங்களேன்னு மனசு கேட்காமத்தான் திரும்பி வந்தேன்... சொல்லுங்க..."

என் வார்த்தைகளும், என் வாகனத்தில் ஒட்டியிருந்த கம்பெனி ஸ்டிக்கரும் அவளுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். தன் பவளவாய் திறந்து " கோவைப்புதூர் போகனும்... பஸ்ஸோ, ஆட்டோவோ வருமான்னு காத்திருந்தேன். எதுவும் வரலை. அதான் நடந்து போலாம்னுட்டு..."

"அடக்கடவுளே இந்தப் பேய் மழையில் எந்த ஆட்டோங்க வரும்? வண்டில ஏறுங்க நான் குளத்துப்பாளையம்தான் போறேன். கோவைப்புதூர்ல உங்களை இறக்கி விட்டுர்றேன்..."

"இல்லைங்க... பரவால்ல... வேண்டாம் நான் ஏதாவது ஆட்டோ வருதான்னு பாத்துக்கறேங்க"

" ஹய்யோ பயப்படாதீங்க...இனிமே வண்டி வந்து நீங்க போய்ச் சேரவா? ச்சும்மா ஏறுங்க"

பெரும் தயக்கத்துக்குப் பின் வண்டியில் ஏறினாள். மழை தன் உச்சத்தை அடையும் வெறியோடு அடித்து ஆடிக்கொண்டிருந்தது. அவளது உடல் குளிரில் நடுங்குவதை உணர முடிந்தது. என்னிடம் இருந்த தொப்பியை அவளிடம் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னேன். அவளது பயத்தைப் போக்க அவளிடம் பேச்சுக்கொடுத்தேன்.

"என்னங்க இந்த ராத்திரில தனியா?"

"ஹாஸ்டல்ல இன்னிக்குத்தான் பெர்மிஷன் கொடுத்தாங்கன்னு தீபாவளிக்கு பர்சேஸ் பண்ண வந்தேன். பஸ்ஸூல திரும்பறப்போ இருட்டுல ஸ்டாப்பிங் தெரியாம நாலு ஸ்டாப் முன்னமே இறங்கிட்டேன். அப்புறம் பஸ்ஸே வரல. மொபைல் வேற சார்ஜ் இல்லாம சுவிட்ஜ் ஆஃப்"

"எந்த காலேஜ்?"

"சிபிஎம்"

"அட! அங்கதான் என் சித்திப்பொண்ணு படிக்கிறா..."

"எந்த டிபார்ட்மெண்ட்லங்க?"

"ஸ்டேட்டிஸ்டிக் - பைனல் இயர்"

"பேருங்க?"

"சுதா"

"ஓ"

நான் போக வேண்டிய குளத்துப்பாளையம் வந்தது. "நான் இங்கயே இறங்கி நடந்துப் போய்க்கறேங்க" என்றாள் அவள். அவளது ஹாஸ்டல் குளத்துப்பாளையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவு என்பதை நானறிவேன்.

"பரவாயில்லை நான் உங்களை ஹாஸ்டல்லயே விட்டுர்றேன்"

"வேணாங்க உங்களுக்கு ஏன் வீண் சிரமம்... இவ்வளவு தூரம் வந்ததே பெருசு... நான் நடந்து போய்க்கிறேங்க..."

"அட என்னங்க நீங்க பிக்காளித்தனமா பேசிகிட்டு... மூணு கிலோ மீட்டர் சல்பி மேட்டருங்க... "என்றேன். அவள் சிரித்தாள்.

அவளை ஹாஸ்டலில் இறக்கிவிட்டு அவளது நன்றிகளைப் பெற்றுக்கொண்டு குளத்துப்பாளையம் திரும்ப மணி பன்னிரெண்டு ஆகிவிட்டது. நான் உறங்கச் சென்றேன்.

Comments

Karthikeyan G said…
நல்லா இருக்கு!!!
Anonymous said…
Good Samaritan.

Popular Posts