பதிவனாய் ஆனபயன்

சொன்னபடி நடக்காதவன் என்ற குற்றச்சாட்டு என் மீது எப்போதும் உண்டு. நண்பர்கள் எங்கேயாவது அழைத்தால் 'நிச்சயம் வருவேன். சத்தியம்' என்று வாக்களிப்பேன். ஆனால், விரும்பியோ விரும்பாமலோ போக முடியாமல் போய்விடும். முதல் முறையாக வெயிலானுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதில் எனக்கு ஏக மகிழ்ச்சி. திட்டமிட்டபடி நடப்பவை திட்டங்களே இல்லை என்பதில் திடமாக இருந்து எங்களது எல்லா திட்டங்களையும் நாங்களே திட்டம் போட்டு அழித்தபடி மசினகுடி சென்று திரும்பினோம்.

பரிசல், வெயிலான் இவர்கள் இருவரைத் தவிர மீத நபர்களை அறிமுகம் இல்லை. அவர்களது எழுத்துக்களும் பரிச்சயம் இல்லை. ஒருவேளை மொடாக்குடியர்களாய் இருந்து தொலைப்பார்களோ? அல்லது நான் அதிகம் அறியாத பதிவுலகம், கம்ப்யூட்டர் டெக்னிக்கல் சமாச்சாரங்களைப் பற்றி பேசி மொக்கை போட்டு விடுவார்களோ என்று பயந்தேன். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் உதவும் என்று நாஞ்சிலாரின் 'மாமிசப் படைப்பினை' பிரயாணப் பையில் எடுத்து வைத்திருந்தேன். கூடுதலாக வேளுக்குடியின் உபன்யாசங்களையும் மொபைல் போனில் போட்டு வைத்துக்கொண்டேன். இரண்டையும் உபயோகிக்க வேண்டிய தேவை கடைசி வரை ஏற்படவில்லை.

இதை ஒரு சுற்றுலா என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடமுடியாது. இஃதொரு இலக்கியப் பயணம். பயணித்துக்கொண்டே விவாதித்தோம். விவாதித்துக்கொண்டே குடித்தோம், விவாதித்துக்கொண்டே உணவருந்தினோம், விவாதித்துக்கொண்டே விளையாடினோம், விவாதித்துக்கொண்டே குளித்தோம், விவாதித்துக்கொண்டே வீடு திரும்பினோம். எந்தத் தருணத்திலும் உரையாடல் முற்றுப்பெறவேயில்லை. பேச்சைக் காட்டிலும் சுவையானது என்ன இருக்க முடியும்?!

இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், இசை, பதிவுலகம், விளையாட்டு என பல்வேறு தலைப்புகளில் உரையாடல்கள் நீண்டபடி இருந்தாலும் பயணம் முழுக்க எங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது சட்டம், தனிமனித ஒழுங்கு ஆகியவைகள்தான். முற்றிலும் ஆரோக்கியமான பாதையில் பயணித்த விவாதங்களையும் அவற்றினால் உண்டான புதிய சிந்தனைகளையும் தனிப்புத்தகமாகத்தான் எழுத முடியும்.

இந்தப் பயணத்தில் நான் பரந்த புல்வெளிகளில் படுத்து உருளவில்லை. ஆர்ப்பரிக்கும் அருவியில் குளிக்கவில்லை. சிங்கம் புலி சிறுத்தைகளைக் காணவில்லை. படகுவீடுகளில் பவனி வரவில்லை. ஆனால், அவை அனைத்தையும் தோற்கடிக்கும் பேரானந்தத்தை என்னுடன் வந்த மனிதர்கள் எனக்குப் பரிசளித்தார்கள். மிகவும் இயந்திரமயமான, உடலையும் உள்ளத்தையும் ஒரு சேர நொறுக்கித் தள்ளும் என் அன்றாடங்களில் இருந்து என்னைத் துண்டித்து ஒரு பூலோக சொர்க்கத்தில் இரண்டு நாட்கள் அமர வைத்தார்கள். வெட்டியாய் பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறாயே என்ன பிரயோசனம் என்று என்னிடம் கேட்பவர்களிடம் சொல்ல எனக்கோர் பதில் கிடைத்து விட்டது.

"வெயிலான், பரிசல், வடகரை வேலன், கார்க்கி, கும்கீ, தாமிரா, ரமேஷ் கிடைத்தார்கள்".

Comments

அருமை செல்வா.

நம்மை அழைத்துச் சென்ற சாரதி ரமேஷையும் சேர்த்துக் கொண்ட உங்கள் பண்புக்கு எங்கள் சல்யூட்!!
உண்மை செல்வா. பேச்சை விட சுவாரஸ்யம் என்ன இருக்கமுடியும்... அதுவும் இசை, நாட்டு நடப்பு, எழுத்து, கவிதை, காதல் என்று கட்டற்று ஓடும் பேச்சுக்கு ஈடு கொடுத்துப் பேசிக் கொண்டிருந்த நம் எல்லோராலும் சிறந்தது இப்பயணம். ஒரு கட்டத்தில் நம் சாரதி ரமேஷே நம்மோடிணைந்து சில கமெண்டுகளை உதிர்த்தது மறக்க முடியாது.


நிச்சயம் நாம் திரும்பியபின், ஊட்டி நம்மை மிஸ் பண்ணியிருக்கக் கூடும்!
நிச்ச்யம் உங்களுக்கு எங்களை விட சிறந்தவர்கள் உடன் பழகும் வாய்ப்பு கிட்டியிருக்கும். நாங்கள் பெருமையாய் சொல்லலாம் செல்வேந்திரனுடன் சுற்றுலா சென்றோமென்று.

என் வாழ்வில் மறக்கமுடியாத தருனங்கள். நன்றி
//நிச்சயம் நாம் திரும்பியபின், ஊட்டி நம்மை மிஸ் பண்ணியிருக்கக் கூடும்!//

நிச்சயமென்று உறுதியுடன் தொடங்கி கூடுமென சந்தேகத்துடன் சொல்வதேன்? நிச்ச்யம் மிஸ் பண்ணித்தானிருக்கும்
//பேச்சைக் காட்டிலும் சுவையானது என்ன இருக்க முடியும்?!//
நச்!
//எனக்கோர் பதில் கிடைத்து விட்டது.//
எங்களுக்கும் ஒரு செல்வேந்திரன்(ர்) [நன்றி பரிசல் கிருஷ்ணா] கிடைத்திருக்கிறார்.
Anonymous said…
// நாஞ்சிலாரின் 'மாமிசப் படைப்பினை' பிரயாணப் பையில் எடுத்து வைத்திருந்தேன் //

பையிலிருந்து எடுக்க விட்றுவோமா என்ன?
Anonymous said…
// நம் சாரதி ரமேஷே நம்மோடிணைந்து சில கமெண்டுகளை உதிர்த்தது மறக்க முடியாது. //

அதிலொன்று எனக்கு மட்டும் தான் தெரியும்.

“ஏதேதோ புரியாததா பேசி அறுக்கிறீங்க. அதனால இனிமே நீங்க கூப்பிட்டா வரமாட்டேன்” :)))))
Mahesh said…
//நிச்சயம் நாம் திரும்பியபின், ஊட்டி நம்மை மிஸ் பண்ணியிருக்கக் கூடும்!
//

ம்ம்ம்... நாங்கதான் ரொம்ப மிஸ் பன்ணிட்டோம்...
Anonymous said…
செல்வா,

உன்னைப் பற்றிய ஆரம்ப தயக்கங்கள் எனக்குமிருந்தது.

எனினும் பயணத்தை மேலும் சுவையாக்கியது மட்டுமில்லாமல் உன் பத்திரிக்கைத் துறை அனுபவங்களைக் கொண்டு அதைச் செறிவூட்டியதிலும் உன் பங்கு அளவிடமுடியாதது.

சடார் சடாரென்று வந்து விழும் உன் இலக்கிய நயம் தோய்ந்த வார்த்தைகள் என்னை வசீகரித்துவிட்டன.

கல்வி என்று சொல்ல வேண்டிய இடமொன்றில் கேடில் விழிச் செல்வம் என்று சொன்னதொரு உதாரணம்.

மொத்ததில் பெரிசு என்றென்னை ஒதுக்காமல் எல்லாவற்றிலுமென்னைக் கூட்டாளியாக்கிய உங்களைவருக்கும் நன்றி.

நானொரு 15 வயது குறைந்தவனிப்போது.
Anonymous said…
Dear selva,
as per parisal's post, you are an man with high principles & diciplined person. But, in this post you have said that we drink while we are talking. By drinking, do you mean liquor? ( i hope it is not so)if so, it contradicts parisal's statement. please don't use these types of statement in your post, which may misguide the people (like me) who have kept you in high esteem.
selventhiran said…
அன்பின் குமார், அடியேன் ஒரு 'டீ டோட்டலர்' என்பது அகில உலகத்திற்கும் தெரிந்த விஷயமாச்சே... எனக்கு குடிக்கின்ற பழக்கம் இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குடித்தல் என்பது சைவம், அசைவம் சாப்பிடுதல் போல அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். பல்லாயிரம் வருடத்திற்கு முந்தியப் பழக்கம் அது. எல்லா பழந்தமிழ் இலக்கியங்களும் கள் குறித்து பேசுவதில் இருந்து அதை நாம் புரிந்து கொள்ளலாம். எந்த பழக்கமும் அடுத்தவருக்கு தொந்தரவை ஏற்படுத்தும் போதுதான் கண்டனத்திற்குரியது ஆகிறது. மோசமான குடியர்கள் மதுவை சாக்காக வைத்துக்கொண்டு சலம்புவதும், சமூகக் கேடுகளை உண்டு பண்ணுவதும்தான் கண்டிக்கத்தக்கது.
selventhiran said…
பரிசல், சரியோ தவறோ தன் வாடிக்கையாளர்களின் சந்தோசமே தனக்கு முக்கியம் என சாரதி ரமேஷ் பல்வேறு தருணங்களில் வாதாடியதும்,

அதி வேகம், மனோ வேகம், வாயு வேகத்தில் வந்து தாமிரா பஸ்ஸை மிஸ் பண்ணாமல் இருக்க வைத்ததும்,

நாம் என்ன பேசினாலும் சகித்துக்கொண்டு கருமமே கண்ணாயினாராக வாகனத்தை செலுத்தியதும்

எப்போதாவது வாயைத் திறக்கும்போது அற்புதமான கமெண்டுகளை அடித்ததும்

என்னைப் பெரிதும் கவர்ந்தது. நாம் செல்ல இருக்கிற எதிர்கால சுற்றுலாக்களுக்கும் அவரையே அடியேன் சிபாரிசு செய்கிறேன்....
Sanjai Gandhi said…
//வெயிலான், பரிசல், வடகரை வேலன், கார்க்கி, கும்கீ, தாமிரா, ரமேஷ் கிடைத்தார்கள்//

அப்போ நானு? :(
//SanJaiGan:-Dhi said...

//வெயிலான், பரிசல், வடகரை வேலன், கார்க்கி, கும்கீ, தாமிரா, ரமேஷ் கிடைத்தார்கள்//

அப்போ நானு? :(//

இதயத்தில் இருக்கின்றாய் உடன்பிறப்பே!
selventhiran said…
சஞ்சய் கவனப்பிழை. பொறுத்தருள்க... ஒரு பொன்மாலைப்பொழுதில் அன்னபூர்ணா காபியுடன் சமாதானம் ஆகிவிடுவோம். என்ன சொல்றீங்க?
Thamira said…
படிச்சு ரெண்டு நாளாச்சு, கமெண்ட் போட விடாம ஆப்பீஸ்ல என்னா பிடுங்கல்ப்பா.. //முதல் முறையாக வெயிலானுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதில் எனக்கு ஏக மகிழ்ச்சி.// நல்ல வேளைடா சாமி, நல்லது நடந்தது.. அழகாக எழுதியுள்ளீர்கள், இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.
Thamira said…
வேலன் :கல்வி என்று சொல்ல வேண்டிய இடமொன்றில் கேடில் விழிச் செல்வம் என்று சொன்னதொரு உதாரணம்// இதில்தானப்பா நான் உங்கிட்ட விழுந்துட்டேன்..

Popular Posts