தொடரும் உரையாடல்

என்னுடைய முந்தைய இரண்டு பதிவுகளிலும் என்னுடைய ஆத்திரம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறதென்றும், கொஞ்சம் மொட்டை கட்டையாக எழுதியிருப்பதாகவும் நண்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், நான் உறுதியாக நம்பியபடி சிவராமன் அண்ணாவிற்கு என் கோபங்களும், அதன் நியாயங்களும் புரிந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

சிறுகதைப் போட்டியின் முடிவுகள் வெளியான பின் வலைஞர்களுடான உரையாடல்களிலும், சில பத்திகளிலும் சிவராமன் அண்ணாவும், திரு. ஜ்யோவ்ராம் சுந்தரும்தான் நடுவர்கள் என்று தெரிந்திருந்தால் அவர்களது ரசனைக்கேற்ப எழுதி இருப்பேனே என்கிற அங்கலாய்ப்பு இருந்தது. எழுத்தின் நோக்கம் ஜூரிகளை ஈர்ப்பது என்றளவிற்கா இறங்கி வரவேண்டும். தவிர, இவர்கள் இம்மாதிரியான கதைகளைத்தான் ரசிப்பார்கள், தெரிவு செய்வார்கள் என்றெல்லாம் போட்டியாளர்களைக் கற்பனை செய்யத் தூண்டியது எது?! இந்த பேச்சு ஏற்கனவே திட்டமிட்டபடி நடுவர்களாக சம்மதித்த இரு எழுத்தாளர்களையும் கேவலப்படுத்துவதாக இல்லையா?!

மலை முகடுகளில் தேங்கும் தூமழை நீரை மட்டுமே பருகும் தேவலோகத்துச் சக்கரவாகம் என்கிற இமேஜ் எழுத்தாளர் மீது எழ என்னென்ன காரணங்கள் இருக்கமுடியும்?! அதிகம் படிக்கிறார், எழுத்தாளர்களோடு பழகுகிறார், நவீன உத்திகளில் எழுதுகிறார் அதனால் அவர் ஒரு 'கலா ரசிகர்' என்கிற வாதம் ஒரு 'மித்' அல்லவா?!

தங்களது ரசனை மட்டத்தை போட்டியாளன் சமதளத்திற்கு மேலே உயர்த்துகிறானென்றால்... "அச்சச்சோ அப்படியெல்லாம் இல்லை... ஒரு வாசக மனோபாவத்துடனே அத்தனைக் கதைகளையும் படித்தோம்" என்று மறுக்க வேண்டியது ஜூரிகளின் தார்மீக பொறுப்பு இல்லையா?! 'இவய்ங்க போட்டிக்கு நம்மளமாதிரி ஆளுக எழுதக்கூடாது' என்கிற தாழ்வு மனப்பான்மை உருவாகும் அபாயத்தை உடைக்க வேண்டியது யாருடைய வேலை?!

வாசிப்பதற்கான நேர சலுகையை அன்றாடம் எல்லோருக்கும் அளிப்பதில்லை. என்னைப் போல சுடுதண்ணி கேஸூகள் தேர்வான கதைகளைக் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டுதான் படிக்க முடியும். நாளொன்றுக்கு ஒரு கதை என்றாலும் பரிசுக்குறிய கதைகளைப் படித்து முடிக்கவே ஒரு மாதம் ஆகும். தேர்வுப்பட்டியலை வெளியிடும்போதே அவைகள் தேர்வான பிரிவையும், காரணத்தையும் ஒரு வரியில் எழுதி இருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.

போட்டியை நடத்திய விதத்திலோ, பரிசுக்குறிய கதைகளைத் தேர்வு செய்த விதத்திலோ அமைப்பாளர்கள் மீது எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்களது முயற்சியைப் பாராட்டுகிற நேரத்தில் ஆதங்கங்களையும் பதிவு செய்வது அவர்களது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு உதவலாம்.

மற்றபடி நீ எழுதுவதெல்லாம் எழுத்தா? என்ன தெரியும் உனக்கு? தமிழில் யாரையெல்லாம் படித்திருக்கிறாய்? பிராந்திய மொழிகளில் யாரையெல்லாம் படித்திருக்கிறாய்? உலக இலக்கியம் பரிச்சயமா? இன்னாரை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி? என கொஸ்டினர்களைக் கையில் வைத்துக்கொண்டு எதிர்படுபவர்களோடு முஷ்டியை முறுக்கும் 'தமிழிலக்கிய அத்தாரிட்டிகள்' தனி சப்ஜெக்ட். அதற்கும் உரையாடல் சிறுகதைப் போட்டிக்கும் நேரடி தொடர்புகள் இல்லையென்பதால் இப்போதைக்கு ஜூட்!

Comments

Nathanjagk said…
ஆணி! வேறு யாராலும் புடுங்கவே முடியாத ஆணிகள்! //இவர்கள் இம்மாதிரியான கதைகளைத்தான் ரசிப்பார்கள், தெரிவு செய்வார்கள் என்றெல்லாம் போட்டியாளர்களைக் கற்பனை செய்யத் தூண்டியது எது?! // ​மேட்டர் என்னன்ன.. சாதா (!?) எழுத்தாளன் எழுதறது மக்களுக்காக.. ஆனா பிளாக் எழுதறது ஒரு படைப்பாளி, மற்ற படைப்பாளிகளுக்கு எழுதற மாதிரி!! இதுக்கெல்லாம் அழக்கூடாது ​செல்வேந்திரன்..!
செல்வா,

தேர்ந்தெடுத்தலில் உள்ள கடினம் வார்த்தைகளால் சொல்ல இயலாது.

கண்டிப்பாய் அதற்காக இருவருக்கும் ஒரு சுதந்திர தின சல்யூட். ஏற்கனவே விவாதித்து விட்டதால், இப்போதைக்கு நானும் ஜூட்.

உங்களுக்கும் மற்றும் அனைத்து அன்பு இதயங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

வரும் நாட்கள், நமது இதயத்திற்கு இதமாய் இருக்கும் எனும் எதிர்பார்ப்போடு,

பிரபாகர்.
sudanthira dina vazthukkal
selventhiran said…
என் அறிவுக் கண்களை திறந்தீர் ஜெகநாதன்!

வாழ்த்துக்களுக்கு நன்றி பிரபாகர்.

பித்தன் வாழ்த்துக்களுக்கு நன்றி.
Thamira said…
தேர்ந்த விளக்கம் செல்வா.! இது போன்று தெரிவிக்கலாமே.. அதைவிடுத்து ஷாக்கிங்காய் கடுஞ்சொற்கள் (எந்தச்சொல் என நீங்களும் கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்) கொண்டு கருத்து சொன்னால் கேள்வி கேட்கத்தான் செய்வோம்.!

Popular Posts