ஸ்ரீ முரளீதர சுவாமிஜி




ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் மூன்று நாள் நாமாபிஷா கேந்திரா நடக்கிறது. வாருங்கள் போகலாம் என ஹிந்து கணபதி வம்படியாக இழுத்துக்கொண்டுபோனார். கணபதி முரளீதர ஸ்வாமிஜியை குருவாக ஏற்றுக்கொண்டவர். மார்கழியில் ராஜ் டிவியிலோ அல்லது பொதிகையிலோ திருப்பாவைகளை விளக்கிக்கொண்டிருப்பார். சற்றுநேரம் கேட்டுவிட்டு பெரிய சுவாரசியம் இல்லை என்று கடந்துவிடுவேன். சாமியார்கள் நடத்துகின்ற கூட்டுபிரார்த்தனைகள், யக்ஞம், யாகம், உபன்யாசத்திற்கு போய் அபாயகரமான பணப்பிடுங்கலுக்கு ஆட்பட்ட அனுபவம் எனக்கு நிறையவே உண்டு. ஆனால் மேற்படி சாமியார்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறார் இவர். வேதம், தர்மம், சாஸ்திரம், தவம், யக்ஞம், கர்மம், யோகம் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், கலியுகத்தில் இறைவனை அடைய "நாம சங்கீர்தனமே" எளிய வழி என்ற இவரது கருத்தை மிகத் தெளிவாக, அழகான உதாரணங்களோடு விளக்கினார். டிராமத்தனமில்லாத அந்த அருமையான இரண்டரை மணிநேர உபன்யாசத்தை இரண்டாயிரம் பேர் கவனச்சிதறலில்லாமல் கேட்கவைக்கும் அருமையான சொல்வன்மை. புராணங்கள், வேதங்கள், உபநிசத்துகள், மகான்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், இதர சமயங்கள் என அனைத்திலும் அவருக்கிருந்த பரந்தபட்ட அறிவு ஆச்சரியப்படவைத்தது.


"ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே 1
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே 2" - எனும் மகாமந்திரத்தின் மூலமே கலியுகத்தில் இறைவனை அடையலாம் என ஆணித்தரமாக வாதிடும் இவரது பணிகள் வேதபாடசாலைகள், ஆலய புணரமைப்பு, மருத்துவ முகாம் என விரிகிறது.

உபன்யாசம் முடிந்தவுடன் நாமசங்கீர்த்தனம் ஆரம்பமாகியது. வழக்கமாக இதுபோன்ற பொது இடங்களில் நடைபெறும் கூட்டுபிரார்த்தனைகள் அல்லது பஜனைகளில் வாய்திறந்துபாட வெட்கப்படுபவன் நான். ஆனால், "இறைவனின் திருநாமத்தைச் சொல்ல ஏன் வெட்கம்? அதில் உங்களுக்கென்ன அவமானம் வேண்டிக்கிடக்கிறது? ஏதையெதையோ சொல்ல வெட்கப்படாத வாய் பகவான் நாமத்தை சொல்ல வெட்கப்படுகிறதென்றால் உங்கள் பக்தியே கேலிக்கூத்து" என்று அவர் இடித்துரைத்தது நிணைவுக்குவர நானும் கரங்களை தட்டியபடி உரக்க சொல்ல ஆரம்பித்தேன். நாமாவளி பாடி முடிந்தவுடன் அவரது கையாலே கூடியிருந்த இரண்டாயிரன் ஜனங்களுக்கும் நெல்லிக்கனி, குங்கும பிரசாதங்களை வழங்கிவிட்டு அவர் வண்டியேறிய போது இரவு மணி ஒன்பதைக் கடந்துவிட்டது. மூன்று மணி நேரத்தில் எந்த சிஷ்யகோடிகளும் ரசீது நோட்டுகளை மூஞ்சிக்கு முன்னால் நீட்டாமல் இருந்ததில், இவர் அவரல்ல என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது.

Comments

நான்கூட ராஜ் தொலைகாட்சியில் இவரது நிகழச்சிகளை பார்த்திருக்கிறேன் அருமை!!!

Popular Posts