விடியல் ரசிக்கவில்லை

விகடன் தீபாவளி மலரை கேண்டி எடுத்துச் சென்றிருந்தாள். அதன் கடைசிப்பக்கங்களில் வெளியாகி இருந்த லதானந்தின் 'மச்சா போரடிக்குதுங்...' என்ற சிறுகதை மிகவும் அருமையாக இருந்ததாகவும் குறிப்பாக "அதுதான் புளுவ எடுத்து எறிஞ்சு போட்டீங்கல்லோ? அப்புறம் ஏன் என்ற காலைச் சொறிஞ்சிட்டிருக்கீங்?" என்ற வாசகத்தை நினைத்து நினைத்து சிரிப்பதாகவும் சொன்னாள். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. "அவரு என்னமோ நல்லாதான் எழுதுறாரு... நீதாங் தேவையில்லாம ஓரண்டை இழுக்கிற... நீ ஒரு மார்க்கமா எழுதிகிட்டுத் திரியறதையும், தப்புத்தப்பா எழுதறதையும் அவரு கண்டுபிடிச்சித் தட்டிக் கேக்குறதாலதான் ஒனக்கு ஷிவரிங் ஆவுது.." என்றாள். "போடி உன் சங்காத்தமே வேண்டாம்" என்று உறுமிவிட்டு வந்துவிட்டேன். ஆனாலும் அவள் சொன்னதில் கொஞ்சம் உண்மையும் இருக்குமோ என்று வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

படைப்பை முன்வைத்து படைப்பாளியின் தனிப்பட்ட விஷயங்களை விமர்சிப்பதும் தவறு. படைப்பாளியை முன்வைத்து படைப்புகளை விமர்சிப்பதும் தவறுதான். படைப்பாளி வேறு. படைப்பு வேறு. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான இடைவெளிகள் இல்லாத இலக்கியவாதிகள் இறந்தகாலத்தில்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டு எல்லாவிதமான படைப்புகளையும் நியாயதராசு மன நிலையிலேயே அணுகுவதுதான் நல்ல வாசகனுக்கு அழகு.
***
'தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு மதிப்பு இல்லை. எழுத்தை நம்பி பிழைப்பவர்களின் வாழ்க்கை எப்போதும் விடை கண்டுபிடிக்க முடியாத கேள்விகளைக் கொண்டிருக்கிறது.' என்ற புலம்பல் புதுமைப்பித்தனில் தொடங்கி இன்றைய சாருநிவேதிதா வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக எழுத்துக்கு கிடைக்கும் சன்மானம் மிகவும் சொற்பமானது என்ற கருத்தும் நிலவுகிறது. எழுத்தாளனுக்கு கிடைக்கும் மதிப்பிற்கும் எழுத்திற்கு கிடைக்கும் சன்மானத்திற்கும் கேரளா துவங்கி அமெரிக்காவரை பல்வேறு உதாரணங்களை இவர்கள் குறிப்பிடத் தயங்குவதில்லை.

இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் தெருவிற்கு தலா மூன்று கவிஞர்களும், நான்கு சிறுகதையாசிரியர்களும் பெருத்துக் கிடக்கிறார்கள். காகிதம், பேனா, கணிணி இவற்றும் ஏதாவது ஒன்று சிக்கினால்கூட என்னைப் போன்றதொரு 'எழுத்துப்போலி' தோன்றிவிடும் அபாயம் இருக்கிறது. ஒரு மாதத்திற்கு சுமார் இருநூறு முதல் ஐநூறு வரையிலான தமிழ் நூல்கள் வெளியாகின்றன. அவற்றுள் ஒன்றிரண்டு கூடத் தேறுவதில்லை.

இந்திய கிரிக்கெட் அணியில் அவரவர் தர வரிசைக்கேற்ப பிரிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டு வருவதைப் போல தமிழ் எழுத்தாளர்களையும் படைப்பு, இலக்கியப் பங்களிப்பு அடிப்படையில் தரம் பிரித்து சன்மானம் வழங்கினால் உண்மையான எழுத்தாளர்கள் நிம்மதியாக வாழ்வார்கள். வேதனையும் புலம்பலும் குறையும். விருப்பமே இன்றி வாழ்க்கைத் தேவைகளுக்காக கிடைத்த வேலைகளில் ஓட்டிக்கொண்டிக்கின்ற எழுத்தாளர்கள், நம்பிக்கையோடு முழு நேர எழுத்துப்பணிக்குத் திரும்ப முடியும். ஜெயமோகன் சாணித்தாள் கோப்புகளில் மூழ்கி இருப்பதையும், சாருநிவேதிதா கருப்புப்பூனையாக மாறுவதையும், நாஞ்சில் நாடன் நகரப்பேருந்துக்குள் நசுங்கிக்கொண்டே இருப்பதையும் ஜீரணிக்க சிரமமாய் இருக்கிறதில்லையா?!
***
தினமும் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுகின்றேன். நாளிதழ் பணி என்பதால் இந்த அதிகாலை பள்ளியெழல் அவசியமாகிறது. ஏஜெண்டுகளின் பாயிண்டுகளுக்குச் சென்றுவிட்டு அலுவலகம் சென்று பணியில் மூழ்கினால் இரவு எட்டு மணிக்குத்தான் விடுதி அறை திரும்புகிறேன். அதற்குப்பின் அன்றைய தினத்தின் அறிக்கையை தயார் செய்து அனுப்புவது, அடுத்த நாள் பணிகளுக்காக தயார் செய்வது, துணிகளைத் துவைப்பது, ஏதேனும் வாங்க வேண்டி இருந்தால் பஜார் போய் வாங்கி வருவது என்று பத்து மணியைக் கடந்த பின்தான் கணிணியில் அமர முடிகிறது. முதலில் அபிமான பதிவர்களின் புதிய பதிவுகளைப் படித்துவிட்டு, பின் ஜெயமோகன், சாருநிவேதிதாவை மேய்ந்துவிட்டு பின்னூட்டம், பதிலூட்டமெல்லாம் போட்டுவிட்டு படுக்கைக்குச் செல்ல குறைந்தது பன்னிரெண்டு மணி ஆகிவிடுகிறது. சில நாட்களில் ஒரு மணி. பின் மீண்டும் மூன்றரை மணி சுப்ரபாதம். நண்பர்களை சந்திப்பதோ, காலார நடப்பதோ, ஒரு புத்தகத்தை வாசிப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ, தொலைக்காட்சி பார்ப்பதோ, உறவுக்காரர்கள் வீட்டுக்குச் சென்று வருவதோ சாத்தியமேப் படாத ஒரு மிக நீண்ட அயற்சியூட்டும் வாழ்க்கை. ஒவ்வொரு அதிகாலையிலும் படுக்கையை விட்டு பதறி துள்ளி எழுந்து அலாரத்தை அமர்த்தி விட்டு அவசர அவசரமாக பல் துலக்குகையில் ஓரே ஒரு கேள்விதான் எஞ்சி இருக்கிறது.

Comments

//நாஞ்சில் நாடன் நகரப்பேருந்துக்குள் நசுங்கிக்கொண்டே இருப்பதையும் ஜீரணிக்க சிரமமாய் இருக்கிறதில்லையா?!//


உண்மை!
//பின் மீண்டும் மூன்றரை மணி சுப்ரபாதம். நண்பர்களை சந்திப்பதோ, காலார நடப்பதோ, ஒரு புத்தகத்தை வாசிப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ, தொலைக்காட்சி பார்ப்பதோ, உறவுக்காரர்கள் வீட்டுக்குச் சென்று வருவதோ சாத்தியமேப் படாத ஒரு மிக நீண்ட அயற்சியூட்டும் வாழ்க்கை.//

:((
என்னைப் போன்றதொரு 'எழுத்துப்போலி' தோன்றிவிடும்

இந்த வரிகளுக்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

----------------------------

பிழைப்பே பிரதானம்.
//நாஞ்சில் நாடன் நகரப்பேருந்துக்குள் நசுங்கிக்கொண்டே இருப்பதையும் ஜீரணிக்க சிரமமாய் இருக்கிறதில்லையா?!/

நாஞ்சில் நாடன் நகரப்பேருந்துக்குள் நசுங்கிக்கொண்டே இருப்பதால் எனக்கும் போட்டோ எடுக்க ரொம்ப சிரமமா இருக்கு நண்பா !!!
Lancelot said…
உண்மைதான் இயந்திர வாழ்க்கை என்பதுவும் போய் இயந்திரங்களின் வாழ்க்கை ஆகிவிட்டது...
Saminathan said…
அதே கேள்விதான் எனக்கும் தோன்றுகிறது...
selventhiran said…
வாங்க பரிசல், விக்கி, வெங்கட்ராமன், சிநேகிதன், அருண்குமார், ஈரவெங்காயம்... வருகைக்கு நன்றி.

சிநேகிதன், தீதும் நன்றும் படங்கள் அருமை. அடிக்கடி சொல்ல வேண்டாமே என்று உள்ளுக்குள் ரசிக்கிறேன். நாஞ்சிலாரின் வீட்டை வாரம் ஒருமுறை கடக்கிறேன். உள்ளே நுழைய தயக்கமாய் இருக்கிறது. கோவை வந்தால் சொல்லுங்கள். போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம்.

ஈரவெங்காயம், நிறைய எழுதுங்கள்.
செல்வா!
என்ர ஆசிரமத்துக்கு இன்னொரு பகதை கெடைசிருக்காப்ல இருக்கு! நெம்ப சந்தோஷம்!
selventhiran said…
லதானந்த் சார், அவசரப்படாதீங்க... அவள் ஒருபோதும் உங்கள் ஆசிரமப் பக்தையாகி விடமாட்டாள்.
//சிநேகிதன், தீதும் நன்றும் படங்கள் அருமை. அடிக்கடி சொல்ல வேண்டாமே என்று உள்ளுக்குள் ரசிக்கிறேன். நாஞ்சிலாரின் வீட்டை வாரம் ஒருமுறை கடக்கிறேன். உள்ளே நுழைய தயக்கமாய் இருக்கிறது. கோவை வந்தால் சொல்லுங்கள். போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம்//.

நன்றி நண்பா... கண்டிப்பாக பார்ப்போம்.. அவரும் பார்க்க வேண்டும் என்று கூறினார்...
selventhiran said…
நன்றி நண்பா... கண்டிப்பாக பார்ப்போம்.. அவரும் பார்க்க வேண்டும் என்று கூறினார்...//

நண்பா அதற்கான வாய்ப்பு இருந்தால் என்னை மறந்துவிட வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.

Popular Posts