கடுதாசிகள்

சந்தியா,
மிக நீண்ட நாட்களுக்குப் பின் என் அன்றாடக் கவலைகளை மறந்து இருந்தேன். ஒரு குழந்தையின் குதுகலத்தை எனக்குப் பரிசளித்தாய். என் இனிய தங்கையே கள்ளங்கபடமற்ற உன் அன்பில் அகம் மகிழ்கிறேன்.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
***
அன்பின் அண்ணா,
பரிசல்காரன் பதிவில் இடம்பெற்ற உங்களது புகைப்படங்களைப் பார்த்தேன். டி-சர்ட் அணிந்து, முகச்சவரம் செய்து அழகாக இருக்கிறீர்கள். வி. செந்தில் குமாருக்கு பத்து நிமிடத்திற்கு முன்பு பிறந்த அண்ணனைப் போன்றதொரு இளமையான தோற்றம். பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
பி.கு:
நீங்கள் என்னை அடிக்கடி அழைத்துப் பேசாவிட்டாலும் நண்பர்கள் புடைசூழ உங்கள் நாட்கள் கழிவதில் மகிழ்கிறேன்.
***
அன்புள்ள அண்ணனுக்கு,
காலம் ஒரு பெரும் அலையைப் போல என்னிடத்தில் அன்பானவர்களிடத்திலிருந்து என்னைப் பிரித்துப்போட்டு விட்டது. முன் ஜாமத்தில் துவங்கி நள்ளிரவில் முடியும் நெடிய நாட்களை கடப்பது தினமும் ஒரு வாழ்கை வாழ்ந்து முடிந்த அயற்சியை அளிக்கிறது. ஆனபோதும், ஆனபோதும் புதிய திசையில் பயணிப்பதும் புதிய மனிதர்களைக் கொண்டாடுவதும் மீண்டும் ஒரு நாள் வாழ்வதற்கான ஆசையைத் தருகிறது.
உங்களை அழைத்து பேசாமல் இருந்துவிட்டது மெல்லிய வெட்கம் அளிக்கிறது. தம்பியின் இந்தப் பிழையைப் பொறுத்து எப்போதும் போல் என் மேல் அன்பாய் இருப்பீராக!
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
***
ஜெயமோகன் அவர்களுக்கு,
பெண்ணேஸ்வரன் குறித்த தங்களது பதிவைப் படித்தேன். இன்றும் பெண்ணேஸ்வரன் டெல்லிக்கு வரும் தமிழிலக்கியவாதிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்பவராகவே இருக்கிறார். டெல்லி என்றாலே பெண்ணேஸ்வரனின் முகமே நினைவுக்கு வருகிறது. அவரது வடக்கு வாசல் இதழும் பெருத்த பொருளாதார நஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் இடையே தொடர்ந்து நடத்தும் அவரது பிடிவாதமும் பிரமிக்க வைக்கிறது.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
***
கிரா டேலி என்கின்ற எனதருமை கிரா,
இதை நான் அதிசயம் என்றுதான் கொண்டாட இருக்கிறேன். கம்யூட்டர் கிட்டத்தட்ட ஒரு கடவுள் என்ற எனது எண்ணம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது கிரா... ஏழு ஆண்டுகளுக்கு முன் தொலைத்துவிட்ட மூன்று நண்பர்களை தேடித் தந்திருக்கும் கம்ப்யூட்டருக்கும், இணையத்திற்கும் எத்தனை நன்றிகளை சொன்னாலும் குறைவுதானே.
போர்களற்ற உலகம், சமாதான சகவாழ்வு, அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற கொள்கைகளில் மிக்க உறுதியும், அமைதியின் மீது தீராத நம்பிக்கையும் உடைய ஒரு சகதனிமனிதனாக உங்களது முயற்சியும், இயக்க பணிகளும் அர்ப்பணிப்பு உணர்வும் எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.
செல்வேந்திரன் என்ற ஒற்றைப்பெயரைக் கொண்டு என்னை நினைவு கொண்ட உனது ஞாபகசக்தியும் அன்பும் பிரமிக்க வைக்கிறது. என்னுடைய யூனிவர்சிட்டி தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகள் தமிழ்நாட்டின் முன்னனி பத்திரிகை ஒன்றின் விற்பனை பிரிவில் பணியில் சேர்ந்தேன். பணி விற்பனை தொடர்பானது என்ற போதும் எழுத்தின் மீதும் படைப்பிலக்கியத்தின் மீதும் உள்ள ஆர்வத்தால் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என சமூக அக்கறை மிளிரும் எழுத்துக்களை எழுதி கொஞ்சம் புகழடைந்தேன். தற்போது தி ஹிந்து என இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகி வரும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் விற்பனைப் பிரிவு அதிகாரியாக பணியில் இருக்கிறேன். நன்றாக சம்பாதிக்கிறேன். இப்போதும் அலுவல் தொடர்பாக ஆங்கிலத்தில் உரையாடும் பொழுதுகளில் உங்களோடு பேசும்போது நான் நிகழ்த்தும் மொழிக்கொலைகள் நினைவுக்கு வந்து சிரிப்பூட்டும்.
உண்மையில் என்னோடு பழகிய தினங்களுக்காவும், எனக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கும் காட்டிய அன்பிற்கும் என்றென்றும் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் கிரா... தாமஸோடும், ஆரோனுடனும், உன்னுடனும் மெனோவுடனும் பழகிய அற்புத தினங்களை எப்படித்தான் ஒருவன் மறக்க இயலும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, கிரிக்கெட் மைதானங்கள், கோவில்கள் (நீ அந்த தீ மிதி விழாவை மறந்திருக்க மாட்டாய் என்று நம்புகிறேன். அன்றிரவு பீட்டர் குடும்பத்தார் நிகழ்த்தியவற்றையும் சேர்த்து) நூலகங்கள், எனது வீடு (தீப்பெட்டிக் கம்பெனி) என எதையும் நீ மறந்திருக்க மாட்டாய் என்று நம்புகிறேன். இன்றளவும் நீ பரிசளித்து விட்டுச் சென்ற புத்தகங்களையும் என்னுடைய ஒவ்வொரு இடப்பெயர்ச்சியிலும் என்னோடு எடுத்துச் சென்றுதான் வருகிறேன்.
புஷ்ஷின் கொடிய கரங்கள் இந்தியாவிலும் நீண்டு கொண்டுதானிருக்கிறது. ஆளும் வர்க்கத்தை கைக்குள் போட்டுக் கொண்டு அணுசக்தி ஓப்பந்தத்தை இந்தியாவுடன் நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறார். பணவீக்கம், தானியத் தட்டுப்பாடு, வறுமை என தேசம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆள்பவர்களோ யாதொரு கவலையுமின்றி அணு சக்தி ஓப்பந்தத்திற்கு மிகுந்த ஆர்வமாய் உள்ளனர்.
நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையத்தில் தொடந்து எழுதி வருகிறேன். அநேகம் பேர் விரும்பி படித்து வருகிறார்கள். பிராந்திய மொழியில் இருப்பதால் அவற்றை உங்களால் படிக்க இயலாதுதான். இன்று உங்கள் இயக்கம் குறித்து எழுதலாம் என்றிருக்கிறேன்.
மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என்ன எழுதுவது என்ற இனம் புரியாத நிலையில் ஏதேதோ உளறிக்கொண்டிருக்கிறேன். தாமஸின் மெயில் ஐடியையும் தெரியப்படுத்தவும். அவன் எனக்கு சூட்டிய 'ஸ்லிக் ரிக்' என்ற பெயரைத்தான் இன்னமும் என் நண்பர்கள் உபயோகப்படுத்தி என்னை அழைக்கிறார்கள். அதனைக் கொஞ்சம் விளக்கவும். ஆரோன் அநேகமாக கனடாவின் சிறந்த 'சீஸ் கட்டராக' மாறி இருப்பான் என்று நம்புகிறேன். அடிக்கடி பரஸ்பரம் தொடர்பு கொள்வோம் கிரா...
வாழ்த்துக்களுடன்,
செல்வேந்திரன்.
(மீனா, இக்கடிதத்தையும் வழக்கம்போல் உன் வளமிக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாயாக...)
***
ப்ரியமுள்ள மீனாவுக்கு,
இதை மாற்றிக்கொடு, அதை மாற்றிக்கொடு என்று உன்னைப் பணிப்பதற்கு வருத்தமாகவும் மெல்லிய அவமானமாகவும் இருக்கிறது. ஒருவரைப் பணிப்பதே குரூர வன்முறை என்கிறார் ஓஷோ. அந்த வகையில் அருமைத் தங்கையை விடாது துன்புறுத்துகிறேனோ என்ற கவலை ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் உன்னை சிரமப்படுத்துவதற்கு வருந்துகிறேன். தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக தடியங்காய் அல்வா வாங்கி வருகிறேன் :)
ஒரு சேஞ்சுக்கு செண்டிமெண்ட் ரோல் பண்ணலாம்னு பாத்தேன். முடியல.... :)
அன்புடன்,
அண்ணன்.
***
அன்பு நண்பன் சுஜித்திற்கு,
உனக்கு கடிதம் எழுதுவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் என்ன சமாதானம் சொன்னாலும் அதில் எனக்கே உடன்பாடு இல்லை. பொதுவாக நண்பர்கள் ஏதாவது உதவி கேட்டால் உடனே ஓடிச் செய்பவனாகத்தான் பால்யம் தொட்டு இருந்து வருகிறேன். ஆனால் அகலத் திறந்த வாயோடு எனை முழுங்கும் என் அன்றாடத்தில் உறவுகளிடத்திலும், நண்பர்களிடத்திலும் பெரும் கெட்ட பெயரை பெற்று வருகிறேன்.
தினமும் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுகின்றேன். நாளிதழ் பணி என்பதால் இந்த அதிகாலை பள்ளியெழல் அவசியமாகிறது. ஏஜெண்டுகளின் பாயிண்டுகளுக்குச் சென்றுவிட்டு அலுவலகம் சென்று பணியில் மூழ்கினால் இரவு எட்டு மணிக்குத்தான் விடுதி அறை திரும்புகிறேன். அதற்குப்பின் அன்றைய தினத்தின் அறிக்கையை தயார் செய்து அனுப்புவது, அடுத்த நாள் பணிகளுக்காக தயார் செய்வது, துணிகளைத் துவைப்பது, ஏதேனும் வாங்க வேண்டி இருந்தால் பஜார் போய் வாங்கி வருவது என்று பத்து மணியைக் கடந்த பின்தான் கணிணியில் அமர முடிகிறது. முதலில் அபிமான பதிவர்களின் புதிய பதிவுகளைப் படித்துவிட்டு, பின் ஜெயமோகன், சாருநிவேதிதாவை மேய்ந்துவிட்டு பின்னூட்டம், பதிலூட்டமெல்லாம் போட்டுவிட்டு படுக்கைக்குச் செல்ல குறைந்தது பன்னிரெண்டு மணி ஆகிவிடுகிறது. சில நாட்களில் ஒரு மணி. பின் மீண்டும் மூன்றரை மணி சுப்ரபாதம். நண்பர்களை சந்திப்பதோ, காலார நடப்பதோ, ஒரு புத்தகத்தை வாசிப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ, தொலைக்காட்சி பார்ப்பதோ, உறவுக்காரர்கள் வீட்டுக்குச் சென்று வருவதோ சாத்தியமேப் படாத ஒரு மிக நீண்ட அயற்சியூட்டும் வாழ்க்கை. ஒவ்வொரு அதிகாலையிலும் படுக்கையை விட்டு பதறி துள்ளி எழுந்து அலாரத்தை அமர்த்தி விட்டு அவசர அவசரமாக பல் துலக்குகையில் ஓரே ஒரு கேள்விதான் எஞ்சி இருக்கிறது.
என்ற வரிகள் வெறுமனே பிளாக்கில் எழுதிய வெற்று வரிகள் அல்ல. எனது அன்றாடம் இப்படித்தான் இருக்கிறது. தவிரவும் என்னை கோவை, கேரளா என்று பந்தாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
உன் தங்கைக்கான வரனை பல முறை நீ நினைவுப்படுத்தியும் விசாரிக்க இயலாத என் கையாலாகாத தனத்தை எண்ணி வெட்கமுறுகிறேன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். வேண்டுமென்றே உதாசீனப்படுத்தி விட்டேன் என்று மட்டும் தயவு செய்து தவறாக நினைத்து விட வேண்டாம். எனேனில், உதாசீனம் நான் அறியாதது...
மிக்க வருத்தத்துடன்,
செல்வேந்திரன்.

Comments

ilavanji said…
செல்வு,

// ஒரு குழந்தையின் குதுகலத்தை எனக்குப் பரிசளித்தாய் //
// உங்களை அழைத்து பேசாமல் இருந்துவிட்டது மெல்லிய வெட்கம் அளிக்கிறது //
// எனேனில், உதாசீனம் நான் அறியாதது... //

என்னதான் அடுத்தவங்க கடிதங்களை படிக்கறது தப்புன்னாலும், படிக்கையில் நெகிழ்வாக இருந்தது உண்மை.

நல்லா இரும்வே.. இதுபோல இன்னும் நெறைய லெட்டரு போடும்ங்கப்பு...
உங்கள் ”கடிதங்கள்” பதிவு பார்த்தேன். பெரும்பாலும் ஆண்களுக்குக் கமென்டுகள் போடும் வழக்கமில்லாவிட்டாலும் இந்தப் பதிவுக்கு எனது கமென்ட் -
”மிகவும் நன்றாக இருக்கிறது”

எழுத்துப் பிழைகளும் வெகுவாகக் குறைந்துள்ளன. பாராட்டுக்கள்!
selventhiran said…
வாங்க லதானந்த் சார், குளிரெல்லாம் குறைஞ்சிருக்குதா?!

இளவஞ்சி அண்ணாச்சி, ஓயாம ஓங்க பக்கத்த தொறந்து பாத்து புதுசா ஒண்ணும் இல்லன்னாலும் பழச படிச்சிட்டு, அற்புதமான போட்டோக்களைப் பாத்துட்டு போயிட்டிருக்கோம். பழைய மாதிரி அடிக்கடி பதிவ எழுதச் சொல்லி என் தானைத்தலைவன் ஆசிப் தலைமையில் அனைத்து பதிவர்களையும் ஒன்று திரட்டி மயிலை மாங்கொல்லையில் மறியல் நடத்தப் போகிறோம் :)

Popular Posts