காலம் கடந்த கேவல்

'சுஜாதா எக்ஸ்பைர்டு' என தோழியிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தபோது நேரம் இரவு பத்தரையை தாண்டி இருந்தது. 'எக்ஸ்பைர்டு' என்றால் காலாவதியாகிவிட்டது என்று பொருளா அல்லது காலத்தைக் கடந்து விட்டது என்று பொருளா என்ற குழப்பம் ஒருபுறமிருக்க, மரணமெனும் பெருஞ்செய்தியைக் கூட காலம் 'குறுஞ்செய்தி'யாகக் குறுக்கி விட்டதை பார்த்தீர்களா?!
இந்த செய்தியை உறுதி செய்துகொண்ட பின்னரே வேறு எதுவும் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தேன் நான். எனக்குத் தெரிந்த ஓரிரு எழுத்தாள நண்பர்களையும், பத்திரிக்கையாளர்களையும் அழைத்து விசாரித்தால் யாருக்கும் உறுதியான தகவலில்லை. பல பேருக்கு அகாலத்தில் எழவு சொன்ன பெருமையோடும், சுஜாதா குறித்த சிந்தனைகளோடும் படுக்கையில் சாய்ந்த வேளையில் கணபதி சுப்ரமண்யம் அழைத்தார். பின்னனியில் ஒலிக்கும் பிரிண்டிங் மிஷின் இரைச்சலைத் தாண்டியும் அவரது கேவல் சத்தமாய் இருந்தது. அவரை ஒருவழியாய் சமாளித்து முடிக்கையில் தொடர்ந்து ஜல்லிபட்டி பழனிசாமி, பிரசாத், விஸ்வம், ஜெயராஜ் என தொடர்ந்து பல தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. எப்படி மரித்தார்? எப்போது மரித்தார்? எப்போது அடக்கம்? போன்ற கேள்விகள் மறுநாள் காலைவரை என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தது. இறப்பதற்கு முன் சுஜாதா என்னைத் தன் இலக்கிய வாரிசாக அறிவித்துவிட்டாரோ என்ற இயல்பான சந்தேகம் எழுந்து அடங்கியது.
அவருக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு வரலாமென மாணிக்கம் அழைத்தபோது உறுதியாக மறுத்து விட்டேன். நல்ல வாசகன் எழுத்தாளனை ஒருபோதும் தேடி வருவதில்லை என்ற வரிகளை வாசித்த எவரால்தான் போக முடியும்?!
தீர்க்கதரிசனம் என்கின்ற வார்த்தை பகுத்தறிவிற்கு முரணானதுதான் என்றபோதும் சுஜாதாவின் கட்டுரைகளை அவர் எழுதிய காலம் தாண்டி வாசிக்கையில், இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், சினிமா குறித்த அவரது அவதானிப்புகள் அனைத்தும் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருவதைப் பார்க்கையில் அவர் எதிர்காலத்தைக் கூறும் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரோ என்ற எண்ணம் வருகிறது.
எழுத துவங்கும் அல்லது எழுதப் பழகும் எவருக்கும் தன் அபிமான எழுத்தாளன் தனது எழுத்தை ரசிப்பானா என்கிற வினா ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே வந்துவிழும். அந்த வகையில் எனது எழுத்தாசானாகவும், ஆதர்சமாகவும் விளங்கிய சுஜாதாவை அசத்திவிடும் சிறந்த படைப்போடு வெளிவரவேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. அவரால் அடையாளம் காட்டப்பட்ட எழுத்தாளனில் ஒருவனாக அறியப்படவேண்டும் என்ற எனது தீராதவேட்கை அவரது மரணத்தின் மூலம் ஒருபோதும் நிகழாத ஒன்றாகி விட்டது.
சுஜாதா எழுத்தாளர்களை உருவாக்குபவராக இருந்தார். அவரது எழுத்தில் இருந்த எளிமை எவரையும் எழுதத் துண்டுவதாக இருந்தது. கணையாழியின் கடைசி பக்கங்களில் துவங்கி கற்றதும் பெற்றதும்வரை அவர் தனது அன்றாடங்களையும் அனுபவங்களையும் பத்திகளாக்கியது பெரும் வாசகப் பரப்பை ஈர்த்தது. இதுமாதிரியான அனுபவ கட்டுரைகளை, டைரி குறிப்பு போன்ற பதிவுகளை எழுதும் ஆயிரமாயிரம் பதிவர்களை உருவாக்கியது. அவரது பாதிப்பு இல்லாத பதிவர்களே இல்லை என்பது எனது அபிப்ராயம்.
பின்குறிப்பு:
டைம்ஸ் இன்று - தீபாவளி மலரை நண்பர் சுப்ரமணியம் நேற்று பரிசளித்தார். அதில் சிறப்புப் பகுதியாக 'சுஜாதா - சொல்லில் ஒளிரும் சுடர்' என்ற பகுதி மனுஷ்யபுத்திரனால் தொகுக்கப்பட்டு இருந்தது. அவரது எழுத்துக்களைப் போலவே நினைவுகளையும் ஓரே மூச்சில் படித்து முடித்ததனால் ஏற்பட்ட காலம் கடந்த கேவல் இது.

Comments

//அவரது பாதிப்பு இல்லாத பதிவர்களே இல்லை என்பது எனது அபிப்ராயம்.//

சரியாய் சொன்னீர்கள். அண்மையில் ஒரு பதிவர்(என்றென்றும் பாலா என ஞாபகம்) அவரது பத்ரி பயணக்கட்டுரையை பதிவிட்டு எவ்வள்வோ பேர் காபி அடித்தாலும் முயன்றாலும் சுஜாதா மாதிரி வராது என்று எழுதியிருந்தார்.
////அவரது பாதிப்பு இல்லாத பதிவர்களே இல்லை என்பது எனது அபிப்ராயம்./////

உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா ? :-)))))
selventhiran said…
நாகு, மோகன் வருகைக்கு நன்றி.

Popular Posts