நான் ஏன் தலித்தும் அல்ல?

 குளிர்ந்த காற்று சுழன்றடித்துக் கொண்டிருக்கும் ஓர் இனிய மாலையில் மிக ஆபத்தான புத்தகத்தைப் பற்றி பேச நாம் குழுமியிருக்கிறோம். மிகப் புராதனமானதும் கனம் தோறும் புதிய பரிமாணங்களைக் கொண்டு முன்னகர்வதும் எதிர் தரப்பு மெளனமாக கேட்டுக்கொண்டிருக்க மட்டுமே அனுதியிருக்கக் கூடியதுமான ‘தலித்’ உரையாடல்களைப் பற்றிய ஒரு புத்தகத்தை மானுடவியல் சமூகவியல் நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் ஆழங்கால் பட்டவரும் இலக்கியத்தில் தேர்ந்த அறிஞரும் புனைவிலக்கியவாதியும் பேராசிரியருமான திரு.டி.தர்மராஜ் எழுதியிருப்பது எவ்வளவு ஆபத்தானது? இந்த நியாயமற்ற போருக்கு இந்த உரையாடலுக்கு முற்றிலும் புதியவனான நான் நண்பன் எனும் முறையில் அழைக்கப்பட்டிருக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு கலை விமர்சகர் தீப்தா ஆச்சாரின் நேர்காணல் ஒன்று தி இந்துவில் வெளியானது. இந்திய நவீன ஓவியங்களின் உள்ளுறையும் கருப்பொருளும் உள்ளடுக்கும் சாதியப் பரிமாணம் கொண்டவைதான். இதைக் கோடிட்டு காட்டுவதுதான் தலித் ஓவியங்கள் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். டெல்லியின் சவி சவர்க்கர் மற்றும் நமது சந்ரு மாஸ்டரின் ஓவியங்களை இவ்வகைமையைச் சார்ந்தது என அவர் தெரிவித்திருந்தார். அறியாச் சிறுவனாகிய எனக்கு ‘தலித் ஓவியம்’ எனும் சொல்லாடல் ஒரு திடுக்கிடலைத் தந்தது. ஏற்கனவே தலித் இலக்கியம் எனும் பஞ்சாயத்தே இருபத்தைந்து ஆண்டுகளாகத் தீர்ந்திடாத நிலையில் இது என்ன புதுசாக தலித் ஓவியம். அதிலும் மிக ஆழமான உள்ளுணர்வு சார்ந்த வெளிப்பாட்டைக் கொண்ட சந்ரு மாஸ்டரைப் போன்ற மேதைகளை இப்பட்டியல் குறுக்கி விடாதா? தலித் ஓவியங்களைத் தொடர்ந்து தலித் கட்டடக்கலை, தலித் சிற்பம், தலித் சமையல், தலித் தையல் என புதிய வகைமைகள் உருவாகுமா எனும் கேள்விகளோடு சந்ரு மாஸ்டரை நோக்கி ஓடினேன்.
அதுவும் ஒரு இனிய மாலை. அவரும் நானும் விவாதிக்க ஆரம்பித்தோம். நான்தான் இலக்கியக் கோட்டி ஆயிற்றே. பேச்சு ‘தலித் இலக்கியங்களை யார் எழுதலாம்’ எனும் பண்டார வன்னியன் காலத்துப் பழைய விவாதத்திற்குப் போயிற்று. நான் பூமணியின் பிறகு, ஜெயமோகனின் வெள்ளை யானை போன்ற நாவல்களை முன் வைத்து அவரோடு வாதிட்டுக் கொண்டிருந்தேன். அவர் பிறிதொருவர் புலன்களுக்குத் தட்டுப்படாத தலித் வாழ்வின் நுண்ணிய சிக்கல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். விவாதம் விரிந்து கொண்டே இருந்தது. அவர் பேசப் பேச நான் மறுதலித்துக்கொண்டே இருந்தேன். நீங்கள் கவனமாக தலித் அல்லாதவர்களை தலித் உரையாடலிலிருந்து அப்புறப்படுத்துகிறீர்கள் என்றேன். சமூக மனிதனாக எனக்கு பெண்ணூரிமை, உலகமயமாக்கல், சுற்றுச்சூழல், பேரினவாதம் இன்ன பிற சமூகப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க இருக்கும் உரிமை சமூக நீதியைப் பற்றிப் பேசவும் உண்டு என்றேன். விவாதத்தின் ஒரு கட்டத்தில் நான் முன்னெப்போதும் கேட்டிராத ஒரு கடுத்த வார்த்தையை உதிர்த்து ‘நீங்க யாருடா இந்தப் பிரச்சனைகளைப் பேசுறதுக்கு.. ஏன் எங்களுக்கு என்ன வேணும்னு நாங்க பேசிக்கிட மாட்டமா.. நீங்க சரியில்லைங்கறத தொடர்ந்து உக்கிரமா சொல்லிக்கிட்டே இருக்கறதும் எங்க செயல்பாட்டோட ஒரு பகுதிதான்.. நீங்க அத கேட்டுத்தாண்டா ஆகணும்’ என்றார். நான் காயடிக்கப்பட்டதைப் போல உணர்ந்தேன். ஒரு விவாதத்திலிருந்து இதைப் பேசும் தகுதி உனக்கில்லையென நான் முதன் முறையாக வெளியேற்றப்பட்ட தருணம் அது. இதை இங்கே பகிர்வதன் நோக்கம் சந்ரு மாஸ்டரால் நான் அவமதிக்கப்பட்டேன் என்பதைச் சொல்வதற்காக அல்ல. நம்முடைய குருமரபிலும் இன்றைய கார்ப்பரேட் நிர்வாக முறையிலும் அவமதிப்பு என்பது ஒரு முக்கியமான கற்றுக்கொடுக்கும் முறை. சில விஷயங்கள் அவமதிப்பு இல்லாமல் மூளைக்குள் ஏறாது.
எனது நண்பர்களின் காதல் விவகாரங்களில் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் அவ்வப்போது எனக்கு நேரும். அத்தகு விவகாரங்களில் மிகுந்த சிக்கலானது ஒரு வேற்று மதத்தைச் சேர்ந்தவன் இஸ்லாமிய பெண்ணை காதலித்து விடுவது. இந்த காதல்களுக்காகப் பரிந்து பேச போகும் தருணங்களில் பெண் தரப்பில் பெரும்பாலும் வன்முறையோ எதிர்ப்போ சிறிதும் இருக்காது. மிக அமைதியாக மிக உறுதியான குரலில் ‘நாங்க ஒண்ணும் காதலுக்கு எதிர்ப்பில்ல தம்பி.. பையனை முஸ்லீமா மாறச் சொல்லுங்க.. பொண்ணைத் தர்றோம்’என்பார்கள். தலித் அல்லாத ஒருவனுக்கு தலித் உரையாடலில் இடம் இல்லை என்பதும் கிட்டத்தட்ட இதற்கு இணையான ஒன்றுதான். ஆம் தலித் உரையாடல் ஒரு மதமாகிப் போய்விட்டது. அங்கே வேற்று மதத்தினருக்கு இடமே இல்லை என குழப்பத்துடன் அன்றிரவு உறங்கிப் போனேன்.
டி.தர்மராஜின் நாஎத அல்ல நூல் இந்தக் குழப்பங்களைத் தீர்க்கும் என நினைத்தால் அது ஏராளமான துணைக் கேள்விகளின் மூலம் இந்தக் குழப்பத்தை மேலும் தீவிரமடையச் செய்கிறது. தலித் எழுத்தை தலித் அல்லாதோர் எழுதக்கூடாதோ என்றால் ஏன் செட்டியார் இலக்கியத்தையோ வெள்ளாளர் இலக்கியத்தையோ அவர்கள் அல்லாதோர் எழுதக்கூடாதா எனும் கேள்வி ஏழவில்லை? இது அத்தகைய அடையாளங்களால் உருவாகும் ஆதாயங்களை மனதில் வைத்து எழுப்பக் கூடிய பண்டார வாதம் என்கிறார். அரசியல் பொருளாதார லாபங்களைத் துறந்து தலித் வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றிக்கொள்ள முன்வரும் முன்மாதிரியற்ற ஒரு செயல்திட்டம் பேராசிரியரால் முன் வைக்கப்படுகிறது. திகைப்பூட்டும் அந்த முன் வடிவம் மேலதிக விவாதங்களுக்கு வழிகோலுவதாக இருக்குமென நான் நினைக்கிறேன்.
இந்திய சமையலறையில் ஏன் மாட்டுக்கறி இல்லை எனும் கட்டுரை இத்தொகுதியின் மிக முக்கியமான சுவாரஸ்யமான ஒரு கட்டுரையாகப் படுகிறது. நாலாபுறமும் மாட்டுக்கறி வரலாற்றை அலசி கடைசியில் அவற்றை சமைப்பதில் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நுண்ணிய அசூயையும் அதை சமைக்க நமக்குத் தெரியாது என்பதுமே ஒத்துக்கொள்ளக் கூடிய காரணங்களாக இருக்கின்றன. ஒரு பெரும் புனைவுக்குரிய தன்மைகளுடன் நாற்புறமும் விரியும் கட்டுரை. அதனுள்ளே அவரது சின்னாத்தாளின் காதல் சரிதம் ஒரு சிறுகதையாக இருக்கிறது. விரித்து நாவலாக எழுதும் சாத்தியமுள்ள ஜெ.என்.யூவின் மாயக்கவர்ச்சி சூழல் இருக்கிறது.
மெட்ராஸ் திரைப்படத்தை அதன் திரையாக்கத்திற்காக திரைக்கதை பயிலும் மாணவனாகப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் நுண்ணிய உள்ளடுக்குகளை டி.ஆர் அவிழ்க்கும் முறைமை ஆச்சர்யம் தருகிறது. எவ்வளவு விஷயங்களைத் தவற விட்டிருக்கிறோம் என்பது புரிகிறது.
இந்த நூலை நான் பல இடங்களில் வைத்து வாசித்தேன். அலுவலக மேஜையில், பேருந்தில் பயணிக்கையில், ரயிலில், பைக்கை மெக்கானிக்கிடம் கொடுத்து விட்டு காத்திருக்கையில், உணவுக்காக ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கையில் - ஒரு நூலை ஒரு அமர்வில் வாசிக்கும் வாழ்க்கை முறையும் இல்லை - அதற்குரிய பொறுமையான பயிற்சியும் இல்லை என்பதால் - இந்த நூலின் அட்டையைப் பார்த்து சிறிய திடுக்கிடலுடன் மின்னும் கண்கள் அப்புறம் என்னை இயல்பானவனாக நடத்த முடியாத தடுமாற்றத்திலிருந்தே இந்நூலையும் இது பேசும் சிக்கல்களையும் எளிதாகப் புரிந்து கொள்கிறேன். கடந்த ஒரு வார காலமாக இந்தப் புத்தகத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்நூலையும் என்னையும் சேர்த்துப் பார்க்கும் சிலர் மெள்ளத் தயங்கியபடி சுற்றி வளைத்து கேட்க விரும்பும் கேள்வி ‘நீ ஒரு பறையனா?’ என்பதே. அதை நான் புரிந்து கொள்கிறேன். சிலருக்கு அதிரடியாக நான் பறையன் அல்லது பறையன் இல்லை எனும் பதில்களில் எது உங்களுக்கு ஆத்மதிருப்தியளிக்கும் என திருப்பிக் கேட்டேன்.
பொருளாதார முன்னேற்றம் இந்த சிக்கல்களைத் தீர்த்து விடுமா என்றால் அதற்குரிய வாய்ப்பே இங்கு மறுக்கப்படுகிறது என்கிறார். அரசியல் அதிகாரம் இச்சிக்கலைக் குறைக்குமா என்றால் அதற்குரிய முன்னுதாரணமே உலகம் முழுக்க இல்லை என்கிறார். கல்வியில் முன்னேறி அறிவுப்புலத்தைக் கைப்பற்றினால் மாறிவிடுமா என்றால் நானே ஒரு முன்னுதாரணமென நகைக்கிறார். இலக்கியம் மாற்றுமா என்றால் இருபத்தைந்து வருட தலித் இலக்கியம் ஒரு முட்டுச் சந்தில் பரிதாபகரமாக தவிக்கிறது என்கிறார். சினிமாவா என்றால் இப்போதுதான் மெட்ராஸ், பன்றி, சாய்ரத் என உரையாடலே துவக்கியிருக்கிறது என்கிறார். இந்நூல் எவ்வகையிலும் பிரச்சனைகளுக்கான தீர்வு நூல் அல்ல. இந்தப் பத்துக் கட்டுரைகளின் மூலம் மீண்டும் ஒரு புதிய உரையாடலைத் துவக்கியிருக்கிறார், நீண்ட நெடிய தலித் விவாதங்களில் ஒரு தவிர்க்க இயலாத தரப்பாக இந்த நூலை மாற்றியிருக்கிறார். அந்த வகையில் இந்நூல் தலித் அல்லாதவர்களும் வாசிக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
இந்நூலில் திடுக்கிட வைக்கிற அல்லது மேலதிக விவாதங்களைக் கோருகிற நிறைய்ய துணை விஷயங்கள் உள்ளன. ஒரு நூல் வெளியிட்டு விழாவில் அத்தனைக்கும் ஆசிரியனிடமிருந்து தெளிவை எதிர்பார்த்துக்கொள்ள இயலாதுதான். உதாரணமாக சிலவற்றை மட்டும் இங்கே கேட்கலாமென தோன்றுகிறது.
1. ஒடுக்கப்பட்டவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வந்தால் சமத்துவம் பேணப்படும் என்கிறார். அரசியல் அதிகார தளத்தில் நிறுவன தளங்களில் நமக்கு இதில் எந்த முன்மாதிரியும் இல்லை.
2. கைசிக நாடகத்தின் மீட்புருவாக்கம் நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த விஜயநகரத்தை மீட்புறுவாக்கம் செய்வதே - வெளிப்படையான பிராமண திரட்சியை உருவாக்குகிறது என்கிறார். அனைத்து கலைகளும் சடங்கிலிருந்தே துவங்குகிறது என்றால் சடங்கு கோலோச்சிய கலைகளை மீட்புருவாக்கம் ஏன் செய்ய வேண்டும் என்கிற கேள்வியின் ஆபத்து திகைப்பை உருவாக்குகிறது. மெலட்டூர் பாகவத மேளாவிலிருந்து பேட்டையில் கணியான் ஜாதியினர் நிகழ்த்தும் மோகனம் வரை இந்த லாஜிக்கை பொருத்திப் பார்த்தால் எந்த கலையையும் போஷிக்க வேண்டிய தேவையென்னவாக இருக்க முடியும்?
இந்த நூலின் மொழிநடை மயக்கமூட்டுவது. புனைவிலக்கியவாதிகள் கூட பயன்படுத்தியிராத பல புதிய உத்திகளை கட்டுரையாக்கத்தில் பயன்படுத்துகிறார். அதுவே நெடும் கட்டுரைகளை வாசிக்கும் அயற்சியிலிருந்து நம்மை மீட்கிறது. ஆணவக்கொலை போன்ற நிம்மதியிழக்கச் செய்யும் விவகாரங்களைக் கூட சமநிலை இழக்காமல் லும்பன் மொழிக்குத் தாவாமல் பதட்டமோ கோபமோ அச்சமோ சுயபச்சாதபமோ அல்லது நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளும் அவசரமோ இல்லாமல் கூட ஒருவரால் எழுத முடியும் என்பதே சூழலின் ஆச்சர்யங்களுள் ஒன்று. சங்கர் படுகொலை வீடியோ கலப்புத் திருமணம் செய்த இரு வலுவான இடைநிலை மற்றும் மதங்களைச் சார்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்து உடைத்து நொறுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தவனாக என்னுள் உருவாக்கிய சமநிலைக் குலைவை இத்தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன். மீண்டும் மீண்டும் ஒரு பைத்தியத்தைப் போல அரற்றிக்கொண்டும் சொந்தத் தம்பியை இழந்த துக்கத்திலும் தலித் தலைவர்கள் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உள்ளார்ந்த ஆவலுடனும் நான் இருந்தேன். ஆனால், டிஆரின் அந்தக் கட்டுரை ஒரு சிந்தனையாளராக அவரது இடம் தமிழில் எத்தகையது என்பதைக் காட்டியது.
நூலை வாசித்து முடித்த பின் புதிய குழப்பங்கள் தரும் ஆயாசத்துடன் மீண்டும் இந்த வரிகளை வாசித்துக் கொண்டேன். கடந்த ஒரு நூற்றாண்டாக நாம் பேசியிருக்கக் கூடிய பொதுவுடைமை சித்தாந்ததங்கள் பகுத்தறிவுக் கொள்கைகள் தீவிர கலை இலக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் விடலைத்தனங்களாகவே நின்று விட்டன என்பதுதான் வரலாறு நமக்குச் சொல்லும் செய்தியா?
இந்த ஆபத்தான நூலில் தர்மராஜ் எழுப்பும் கேள்விகளை அவரது விவாத கருவிகளைக் கொண்டு சுயமாக எழுப்பிப் பார்த்தால் நான் ஒரு வாணியச் செட்டியாரும் இல்லை.. ஒரு நாடாரும் இல்லை.. ஒரு போயரும் இல்லை..கிறிஸ்தவனும் இல்லை.. இந்துவும் இல்லை.. இந்தியனும் இல்லை.. தமிழனும் இல்லை.. இப்போதைக்கு நான் ஒரு பெருஞ்சமூக வெறுப்பாளன் மட்டுமே. இதையும் கூட டிஆர் நாளைய விவாதத்தில் உடைத்து ஏறியக் கூடிய சாத்தியம் உண்டு.
தர்மராஜிற்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.
(25/06/16 அன்று நெல்லையில் நடந்த ‘நான் ஏன் தலித்தும் அல்ல’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)


Comments

Popular Posts