புதிய தொழில்கள் முடங்குவது ஏன்?


புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்குவது என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எளிதாக்கப்பட்டிருக்கிறது. தொழில் தொடங்க அனுமதி எளிதாகக் கிடைக்கிறது. நிதியைத் திரட்டிக்கொள்ள வங்கிக் கடன், க்ரவுட் ஃபண்டிங் என ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. என்னையொத்த பல மேலாளர்கள், தாங்கள் செய்துவந்த வேலையை உதறிவிட்டு தொழில் தொடங்குகிறார்கள். இதெல்லாம் சரிதான். ஆனால், அவர்களில் பலர் சிலகாலம் வரைதான் தாக்குப்பிடிக்கிறார்கள். கடன்களைப் பெற்றுச் சமாளிக்கிறார்கள். பின்னர், பெரிய நஷ்டத்துக்குப் பிறகு தொழிலைக் கைவிடுகிறார்கள். இந்தியாவில் ‘ஸ்டார்ட் அப்’புகள் துவங்கும் வேகத்தைவிட தொழில்களைக் கைவிடும் வேகம் அதிகமாக இருக்கிறது.

இவர்களால் ஏன் தாக்குப் பிடிக்க முடியவில்லை? இவர்களது கனவையும் உழைப்பையும் பணத்தையும் விழுங்கிய முதலை எது? ஏன் இந்தியாவில் ‘ஸ்டார்ட்- அப்’என்பதே செயலிகளை (ஆப்ஸ்) உருவாக்குவது அல்லது ஆன் - லைன் ரீடெய்லிங், மென்பொருள் வடிவமைப்பு, விளம்பர நிறுவனம் என்றே பெரிதும் புரிந்துகொள்ளப்படுகிறது? சந்தையின் தேவைகள், வாய்ப்புகள் இவற்றை முற்றாகப் புரிந்துகொண்டுதான் இவர்கள் இறங்குகிறார்களா என்பதெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்!

தோல்வியின் மூலம் எது?

என்னுடைய நான்கு நண்பர்கள் சேர்ந்து புதியதாக ‘பேமண்ட் கேட்வே’சேவையை அளிக்கும் நிறுவனத்தை உருவாக்கினார்கள். ஒருவர் ‘க்ளோஸ் சர்க்யூட்’தொழில் செய்து வந்தார். இன்னொருவர் விளம்பர நிறுவனம் நடத்திவந்தவர். மற்றொருவர் தனியார் வங்கி மேலாளர். நான்காவது நபர் மட்டும் இத்துறையில் ஓரளவு அனுபவம் உள்ளவர். ‘பேமெண்ட் கேட்வே’சேவைக்கு நல்ல சேவைக் கட்டணம் கிடைக்கும் என்பதும் எதிர்காலத்தில் அனைத்து நிறுவனங்களுமே இணைய சேவையில் ஈடுபடும் தேவை இருப்பதால் சந்தை வாய்ப்புகள் அதிகம் என்பதும் அவர்களது நம்பிக்கை. ஏற்கெனவே தாங்கள் செய்துவரும் தொழிலில் வாடிக்கையாளராக அறிமுகம் ஆன நிறுவனங்களைத் தொடர்புகொண்டு இந்தச் சேவையை அளித்தால்கூட லாபம் நிச்சயம் என்று நினைத்தார்கள் நண்பர்கள்.

அற்புதமான எதிர்காலத்தை நோக்கிய கனவுகளுடன் புதிய அலுவலகத்தைத் திறந்தார்கள். ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். வங்கிக்கான காப்புத்தொகையும் தொழில்நுட்பத்துக்கான முதலீடும் மிக அதிகளவில் தேவைப்பட்டன. எனவே, ஏற்கெனவே தாங்கள் செய்துவந்த தொழிலில் இருந்த பங்குதாரர் பங்குகளை விற்று நிதி திரட்டினர். பணம் போதவில்லை. வங்கிக்கடன் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காமல் இழுத்தடித்தது. வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரிடம் குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கினர். மார்க்கெட்டிங் ஆட்களைச் சந்தைக்கு அனுப்பிய பின்தான், தங்களது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே ‘இ-காமர்ஸ்’துறையில் ஈடுபட்டிருப்பதும் முதன்மையான பேமண்ட் கேட்வே நிறுவனங்களோடு ஏற்கெனவே வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பதும் தெரியவந்தது.

இரண்டாம் கட்ட நகரத்தில் பாரம்பரிய முறையில் வர்த்தகம் செய்துவருபவர்களிடம் இ-காமர்ஸின் சாத்தியங்களை இவர்களால் சொல்லி விளங்க வைக்கவும் முடியவில்லை. முட்டுவழிச் செலவினங்கள் அதிகரித்துக்கொண்டே போக, முதலீடு இல்லாமல் நிறுவனம் தள்ளாடியது. ஒரு கட்டத்தில் அவரவர் சொந்த சொத்துக்களை விற்று நிறுவனத்தைக் காப்பாற்ற முயன்றனர். இறுதியில் பலத்த நஷ்டத்துக்குப் பின் நிறுவனம் கைவிடப்பட்டது. நால்வரும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தனர். என்ன பிசகு?

அனுபவமின்மை

அனுபவத்தைத் திரட்டிக்கொண்டு தொழிலில் இறங்காமல், ஆரம்பித்துவிட்டுப் பின்னர் திணற வேண்டி வந்தது. ஒரு தொழில் முதலில் தவழ்ந்து, பிறகு மெள்ள எழுந்து விழுந்து நடைபழகி, அதன் பிறகே ஓட முடியும். ஆனால், அதுவரை தாக்குப்பிடிக்கும் அளவுக்கான வருவாய் ஆதாரங்களை இவர்கள் உருவாக்கவில்லை. ஏற்கெனவே செய்துவந்த தொழில்களையும் இதற்காகச் சேதப்படுத்தியது எரிகொள்ளியால் தலைகோதியது போலாயிற்று. ஆரம்பித்த தொழிலில் எந்தப் புதுமை நோக்கும் இல்லை. ஏற்கெனவே செய்தவர்கள் வழங்கும் சேவையையும் வாய்ப்புகளையும்தான் வழங்க முடிந்தது. வெற்றியைத் தடுத்த அழிவு சக்தி எது என்பதைக் கண்டறிந்துகொள்ள முடியாத தேக்கம். எல்லாவற்றுக்கும் மேலாக அனுபவஸ்தர்களின் வழிகாட்டல் கிடைக்கவே இல்லை.

ஒரு தொழில் வெற்றியடைய சிறப்பான யோசனைகள் மட்டும் போதுமானவையல்ல. களத்தில் அந்த யோசனைகள் நிலைபெற செயலாக்கத்திறன் அவசியம். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வெற்றி என்பது வெறுமனே இணையத்தில் கடை விரிக்கும் யோசனை மட்டுமல்ல. சொந்த விநியோகக் கட்டமைப்பை உருவாக்க முடிந்ததும், இந்தியா போன்ற பாரம்பரியச் சந்தையில் ‘பேமண்ட் ஆன் டெலிவரி’ எனும் கனவைச் சாத்தியப்படுத்த முடிந்ததும்தான் காரணம்.

திட்டமிட்ட பாதையில் தொழில் நகராதபோது, திட்டத்தில் சிறிய மாற்றம் செய்வது அல்லது திட்டத்தையே மாற்றிக்கொள்வது அவசியம். ஜாம்பவான் நிறுவனமான ‘நெட்ஃபிலிக்ஸ்’ சந்தை சாத்தியங்களைத் தீவிரமாக ஆராய்ந்து வீடியோக்களை டிவிடியாக மாற்றும் திட்டத்தைத் தொடங்கியது. தயாரிப்பு சந்தைக்கு வரும் முன் பல்வேறு ஆய்வுகள் செய்திருந்தாலும், திட்டம் தோற்றது. கொஞ்சமும் யோசிக்காமல் அந்த திட்டத்தையே கைவிட்டது அந்நிறுவனம். ஆப்பிள், ஃபேஸ்புக் உட்பட இன்று உலகை ஆளும் பெரிய நிறுவனங்கள்கூட தங்களின் ஆதார யோசனைகளிலிருந்து சிறிது விலகியோ அல்லது முற்றிலும் மாறுபட்டோதான் இந்த இடத்தை அடைந்திருக்கின்றன. ஆனால், அணையா நெடு விளக்காக, பிடித்தபடியாக நிற்பவர்கள் கடைசியில் தோல்வியடைந்து வெளியேறிவிடுகிறார்கள்.

எப்படித் திட்டமிடுவது?

போதிய வழிகாட்டுதல்கள் இல்லாமல், எந்த உயரிய லட்சியமும் புதுமை நாட்டமும் இல்லாமல் வெறுமனே முதலீட்டைத் திரட்டி துவங்கப்படும் ‘ஸ்டார்ட்- அப்’களால் தனி மனிதனுக்கோ நாட்டுக்கோ எந்தப் பலனும் இல்லை. இதனால் வேலைவாய்ப்புகளும் உருவாகப்போவதில்லை. மேலாக, நாடு முழுக்கக் கடனாளிகளின் எண்ணிக்கைதான் பெருத்துப்போகும். ‘பெரிதாகத் திட்டமிடு.. சிறிதாகத் தொடங்கு’ எனும் கனிந்த பனியாவின் சொற்கள் இந்த இளைஞர்களை எட்டவே இல்லை.

இன்று தொழில் முனைவோருக்கு இதுபோன்ற வழிகாட்டல் விஷயங்களில் உதவும் அரசு அமைப்புகள், சில தனியார் தொழில் அமைப்புகள் இருந்தாலும் பெருகிவரும் இளைஞர் சக்திக்கும் ‘ஸ்டார்ட்- அப்’ மோகத்துக்கும் அவை போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை. ஒவ்வொரு தனி மனிதனும் தனியார் நிறுவனங்களும்கூட இந்த வழிகாட்டலை முன்னெடுக்க முடியும். ‘ஸ்டார்ட்- அப் இந்தியா’, ‘மேக்-இன் இந்தியா’ போன்ற அரசு முழக்கங்களோடு தனியார் நிறுவனங்களும் கைகோக்காமல் எதிர்பார்த்த மாற்றம் சாத்தியமில்லை.

உதாரணத்துக்கு, நாளிதழ் விநியோகத்தை எடுத்துக்கொள்ளலாம். நாளிதழ்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மிக வறுமையான பின்புலத்தில் உள்ளவர்கள். நாளிதழ் முகவர்களும்கூடப் பெரும்பாலும் கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான். பார்சல் கட்டுபவர்கள், வாகனங்களை இயக்குபவர்கள் - இவர்களது பிள்ளைகளுக்கும், டெலிவரிப் பையன்களுக்கும் வழிகாட்டும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கலாம். வலுவான ஊடகங்களால் துறைசார் வல்லுநர்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும். வெற்றியாளர்களின் அனுபவங்கள் இவர்களுக்கு மிகப் பெரிய திறப்பாக அமையலாம். இந்தத் தொடர்புகள் பிற்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் இடர்களின்போது ஆலோசனைகள், அறிவுரைகள் பெற உதவலாம். ஒரு நகரத்தின் இரண்டாயிரம் பேப்பர் பையன்களிலிருந்து ஒரு இருபது தொழில் முனைவோர் உருவாகக் கூடும். இது நிச்சயமான சமூகப் பொருளாதார மாற்றத்தை உருவாக்கும்.

பணமோ சிபாரிசோ திட்டமோ அல்ல. அனுபவஸ்தர்களின் வெற்றியாளர்களின் நேரமும் அக்கறையான வழிகாட்டலுமே இளைஞர்களுக்குப் பெரிதும் தேவை. இன்று ‘ஸ்டார்ட்-அப்’முழக்கம் நகர வேண்டியதும் அந்தத் திசையில்தான்!

(தி இந்து நாளிதழில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை) 

Comments

Popular Posts