வெளிச்ச நகரம்


பாதி வெந்த நிலையில் காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கிய என்னை வரவேற்க தொண்டர்குழாம் மாலை, பொன்னாடைகளோடு காத்திருக்கவில்லை. ஒண்ணுக்கடிக்க கூட ஆட்டோக்காரர்கள் உதவியில்லாமல் ஒதுங்க முடியாதோ என நிணைக்குமளவிற்கு ரயில் நிலைய வாசலில் சுற்றி வளைத்த மாணிக்பாச்சாக்களை தாண்டி டவுண் பஸ்ஸில் ஏறினேன். 'ஒரு துரைப்பாண்டி கொடுங்க' என நான் கேட்டபோது மொத்த பேருந்தும் விலா நோக சிரித்தது. 'சாரிங்க... தொரபாடி கொடுங்க' என சீட்டு வாங்கி ஜன்னலோரம் அமர்ந்து காட்பாடியின் கனபரிமாணங்களைப் பார்த்தபடியே சென்றேன். தன் மேனியெங்கும் வெயிலை சேமிக்கும் வெளிச்ச நகரமாய் இருந்தது வேலுர். உதகை மக்கள் குளிரை எதிர்கொள்வதில் ஒரு மெல்லிய கர்வம் இருக்கும். ஆனால் வேலூரின் ஒவ்வொரு ஜிவராசிகளும் வெளிப்படுத்தும் "உஸ்ஸ்ஸ்ஸ்..." எனும் உஷ்ணப் பெருமூச்சில் வெயிலின் கோரம் வெளிப்படுகிறது.

தந்தை பெரியார் தொழில்நுட்ப கல்லூரியில் எம்.சி.எ. படிக்கும் நண்பனின் ரூமை அடைந்தபோது அவர்கள் சோமபானம் அருந்திக்கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் ஒரு குசும்பன் 'ஏசுவின் ரத்தம் ஜெயம்' எனக் கத்தினான். நான் கலவரமாவதைக் கண்ட மற்றொருவன் அவனை அதட்டினான். முங்க, முங்க குடித்துக்கொண்டிருக்கும் அவர்களோடு வேலுரைச் சுற்றிப்பார்க்க இயலாது எனத் தோன்றியது. விதியை நொந்து கொண்டு வரவழைக்கப்பட்ட குஸ்கா ('வேலூர் ஜெயில் சாப்பாடு இதை விட நன்றாக இருக்கும்' - குசும்பன்) வை விழுங்கிவிட்டு உறங்கிபோனேன்.
அந்திசாய ஆரம்பித்த வேளையில் நண்பனை உலுக்கி கோட்டைக்கு இழுத்துச் சென்றேன். கோட்டையின் நீள, அகலம் என்னை பிரமிக்க வைத்தது. பிரம்மாண்டமான கோவில்களை தரிசிக்கும்போது அதைக் கட்டியவனின் ஆன்மீக உணர்வு கோபுரத்தில் வழிவதாகத் தோன்றும். ஆடல் பெண்டிர் சிற்பங்களை பார்க்கும்போது சிற்பியின் கலை உணர்ச்சி மார்க்கச்சையோடு சேர்த்துக்கட்டப்பட்டிருப்பதாகத் தோன்றும். ஆனால் கோட்டையின் அகழியிலும், கொத்தளத்தில் இருந்த சிறு,சிறு கண்கானிப்பு கோபுரங்களிலும் அதைக் கட்டிய மன்னனின் கண்களில் இருந்த ப்யம் இன்னும் தேங்கி நிற்பதாகத் தோன்றியது எனக்கு. செருப்புக்கால்களோடு கோட்டையின் மேற்சுவரில் ஏறித் தாவி, தாவி நடக்க ஆரம்பித்தோம். கோட்டையின் உயர்ந்த மதில் சுவரில் இருந்து பார்க்கையில் மாலை நேர வேலூர் 'காலை வெயிலுக்கு நான் காரணமில்லை' என எங்கள் காலடியில் விழுந்துகிடப்பது போல இருந்தது. கோட்டையின் மேல் தளத்தின் ஒவ்வொரு பத்து தப்படிக்கும் ஒரு ஜோடி எசகுபிசகான மோனத்திலிருந்தனர். மெரீனாவின் படகு மறைவுகளைவிட பல மடங்கு 'படம் பார்க்கலாம்' என்றான் நண்பன். உடலும் உள்ளமும் உஷ்ணமாகி கிடந்த அவர்களுக்கு கடந்துபோகும் எவரைப்பற்றியும் கவலை இல்லை. அவர்களது சில்மிஷங்களைப் பதுங்கி, பதுங்கி ரசிக்க குஞ்சு, குருணைகள் வேறு. ரத்தம் ஓரே நிறம் படித்து முடித்த ஒரு பின்னிரவில் வேலூர் கோட்டையினைப் பார்த்தே ஆக வேண்டும் என சங்கல்பம் எடுத்ததும், மறுநாள் நூலகத்தில் சிப்பாய் கலகம் குறித்த நூல்களை படித்ததும் நிணைவுக்கு வந்தது. 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசை சேர்ந்த சின்னபொம்மி நாயக்கரால் கட்டப்பட்ட இந்த கோட்டை, சுல்தான்கள், மராட்டிய மன்னர்கள், நவாபுகள், கிழக்கிந்தியக் கம்பெனி என பல கைமாறி இன்று இந்த காதலர்கள் வசம் இருக்கிறது.
கோட்டையின் நடுவே அழகிய ஜலமேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. துவாரபாலகர்கள்கூட கழுத்து நிறைய நகைகளுடன் அருள்பாலிக்கிறார்கள். சுமார் 400 ஆண்டுகளாக பூஜை, புணஸ்காரங்கள் இல்லையாம். அதை நிவர்த்திக்க கோடி தீபம் ஏற்ற சொன்னார்கள். ஏற்றினேன். அந்த இரவில் மின்னொளியில் கோபுரம் ஜொலிக்க, பின்னனியில் தேவாரம் ஒலிக்க. குறுக்கும் நெடுக்குமாய் கடந்து சென்ற சேட்டுப்பெண்களையும் ரசித்துக்கொண்டே கிளம்ப மனமில்லாமல் கிளம்பினேன்.

மறுநாள், திருவண்ணாமலை செல்லும் பஸ் சில விஸ்வரூப ஆஞ்சனேயர்கள் அருள்பாலிக்கும் ஊர்களைக் கடந்து திருவண்ணாமலையை அடைந்தது. ஒன்பது கோபுரங்களும் வாடா ஒரு கை பார்க்கலாம் என்பது போல நெஞ்சு நிமிர்த்தி நின்றுகொண்டிருந்தது. கோவிலின் நுழைவாயிலின் வலது பக்கத்தில் ஒரு மோகினி சிலை இருக்கிறது. தரிசனம் முடிந்து வெளிவரும்போது சிலையை பார்த்தால் ஆலய தரிசனத்தால் ஏற்பட்ட புண்ணியத்தை உறிஞ்சிக்கொள்வாளாம் மோகினி. 'கோவிலுக்குள் சைட் அடிப்பவர்களின் பாவத்தை உறிஞ்சிக்கொள்வாளா?' கூட்டி வந்த உள்ளூர் நண்பரிடம் கேட்க நிணைத்தேன். கேட்கவில்லை. ஆஜானுபாகுவான துவாரபாலகர்கள் சிலையின் கால், கை விரல் நகங்கள் கூட நுட்பமாக வடிக்கப்பட்ட கலைநயமிக்க சிற்பங்களில் ரசனையே இல்லாமல் கலர் பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். இதுமாதிரி முட்டாள்தனங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

எனக்காகத்தான் காத்திருந்தாரோ அண்ணாமலையார் என நிணைக்குமளவிற்கு அபிஷேகத்துடன் அற்புத தரிசனம். எதையும் வேண்டவோ, பிரார்த்திக்கவோ தோன்றவில்லை... காரணங்களேதும் இன்றி நெஞ்சு முட்டி... கண்ணீர் மட்டுமே சுரந்தது. சிறுவயதிலே திருவிழா சொற்பொழிவுகளில் கேட்டறிந்த திருவண்ணாமலை. அங்குபோக வேண்டும் என்ற ஆசை எப்போதும் ஊறிக்கிடந்த என்னை கிறிஸ்தவ நண்பன் அழைத்துவந்து காண்பிக்கிறான். அண்ணாமலையாருக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது போலும். என்னுடன் வந்த உள்ளூர் நண்பருக்கு வரிசையில் நிற்க பொறுமை இல்லாததால், உடனுறை அம்மனை தரிசக்க முடியவில்லை. பண்டாரங்களுக்கு பயந்து ஆயிரங்கால் மண்டபம், தெப்பகுளம் ஆகியவற்றை பூட்டி வைத்திருக்கிறார்கள். ரமணாஸ்ரமம் புணரமைத்த பாதாள லிங்கத்தை தரிசித்துவிட்டு, பெரிய கோபுரத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடையும் சிற்பத்தைக் காட்டி நண்பனுக்கு கதை சொல்ல முயன்றேன். அவன் ஜடைகளைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்ததால் பாதிக்கதையோடு கதாகாலட்சேபத்தை முடித்துக்கொண்டேன்.

திருவண்ணாமலை ஆண்டிப்பண்டாரங்களின் மெக்காவாம். மூன்று வேளைச்சோறு கேரண்டி என்பதால் எவரிடமும் பண்டாரங்கள் பிச்சை கேட்டு தொந்தரவு செய்வதில்லை. ரமணாஸ்ரமத்தில் தியானம் என்ற பேரில் பாதிப்பேர் தூங்கிகொண்டிருந்தார்கள். உலகம் போற்றும் அந்த மகானைப் பற்றித் தெரிந்து கொள்ள சில புத்தகங்கள் வாங்கிகொண்டேன். யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில் தொன்னையில் சரிபாதி அன்பு கலந்து சாதம் தந்தார்கள். உலகெங்கும் சீடர்களைக் கொண்டிருந்த இவர் தன்னை ஒரு பிச்சைக்காரன் எனக் குறிப்பிட்டுச் சொன்ன அருளுரைகள் என்னைக் கரைத்தது. கண்ணாடிப்பெட்டிக்குள் அவரது ஒலைக் காற்றாடியையும், சிரட்டையையும் பார்க்கும்போது, கல்யாண மண்டப சாமியார்கள், கூட்டணிக்கு பாடுபடும் ஆதினங்கள், வாரிசு பீடங்கள் அனைவரையும் ஒரு நடை அழைத்து வந்து காட்டலாம் எனத் தோன்றியது. கூடுதலாக ஒரு கும்பா சாதம் காலியாவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது வருகையால் நிகழாது எனத் தோன்றியது.

திருவண்ணாமலை மக்கள் கோவிலைச் சார்ந்து பிழைக்கிறார்கள். ஆனால், எவரும் ஏமாற்றுவதில்லை. அர்ச்சகர்கள் பயமுறுத்தவில்லை. பிச்சைக்காரர்கள் துரத்த வில்லை. செருப்பு கழற்றிபோட்ட இடத்தில் கிடக்கிறது. வழி கேட்டால் சொல்கிறார்கள். வெயிலின் கடுமை முகத்தில் இருந்தாலும் வார்த்தைகளில் இல்லை. கடைக்காரர்கள் கை பிடித்து இழுப்பதில்லை. ஆஸ்ரமங்கள் நன்கொடை நோட்டை நீட்டவில்லை. மக்களுக்கு தாம் வாழும் இடத்தின் மகத்துவம் தெரிந்திருக்கிறதோ.... பழனியை நிணைத்து பாருங்கள். உங்கள் பாக்கெட்டில் பத்து ரூபாய் குறையும்..!
வேலுரை விட்டு கிளம்பும்போது நண்பன் சொன்னான் ' மன்னன் இல்லா கோட்டை, அழகில்லா பெண்கள், நீரில்லா நதியைக் கொண்டது வேலூர்' என்பது உள்ளூர் சொலவடையாம். அத்தோடு இரக்கம் இல்லா கண்டக்டர்கள் என்பதையும் சேர்க்க சொல்லி உள்ளூர் கலெக்டர் உத்தரவிட்டால் பரவாயில்லை. அத்தனை கடுமையாக கத்துகிறார்கள். காரணம் வெயிலாகத்தான் இருக்குமோ..?!


நண்பர்களே நான் எழுதிய மெலட்டூர் மேஜிக்கை மீண்டும் ஒரு மீள்பதிவு செய்தால், நட்சத்திர வாரத்தில் பல பேர் படித்து தெரிந்துகொள்வார்களே என நண்பர் மடல் எழுதியிருந்தார். மறுபதிவு செய்வதற்கு பதிலாக அதன் இணைப்பை கொடுத்துள்ளேன். சமயம் கிடைத்தால் வாசித்து பாருங்களேன்.



Comments

முதல் இடம் பிடிப்பது வெங்கட்ராமன்

பதிவ பத்தின பின்னூட்டம் பின்னாடி வரும்
Anonymous said…
//'கோவிலுக்குள் சைட் அடிப்பவர்களின் பாவத்தை உறிஞ்சிக்கொள்வாளா?' //

சூப்பரான கேள்வி...... நீங்க பார்த்துட்டு வந்திங்களா பார்க்காம வந்திங்களா? சொல்லவே இல்ல!
இன்னைக்கு வேலூர சுத்தி பார்த்தாச்சு
அருமை செல்வேந்திரன்.

நாளைக்கு எந்த ஊரு, . . . .?
அருமையான எழுத்து நடை செல்வேந்திரன் ;))

அழகான பதிவு ;)
Sud Gopal said…
//ஆனால் கோட்டையின் அகழியிலும், கொத்தளத்தில் இருந்த சிறு,சிறு கண்கானிப்பு கோபுரங்களிலும் அதைக் கட்டிய மன்னனின் கண்களில் இருந்த ப்யம் இன்னும் தேங்கி நிற்பதாகத் தோன்றியது எனக்கு//

//கூடுதலாக ஒரு கும்பா சாதம் காலியாவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது வருகையால் நிகழாது எனத் தோன்றியது.//

ரசித்துப் படித்த வரிகளில் சில.பயணக்கட்டுரை என்பது எல்லாராலும் சுலபத்தில் எழுதி விட முடியாது.கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.

//சிலையின் கால், கை விரல் நகங்கள் கூட நுட்பமாக வடிக்கப்பட்ட கலைநயமிக்க சிற்பங்களில் ரசனையே இல்லாமல் கலர் பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். இதுமாதிரி முட்டாள்தனங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்//

இதற்கான பதிலை மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரனைக் கேட்டால் தெரியுமா? தமிழகத்தின் பேர்வாய்ந்த கலைச்சிறப்பு மிக்க பல கோவில்களைப் புதுப்பிக்கிறேன் பேர்வழி என்று கலாரசனையே இல்லாமல் கர்ணகொடூரமான பெயிண்ட் அடித்தல் நிகழ்ந்தது அன்னாரது ஆட்சிக்காலத்தில் தான்.
PPattian said…
//சுல்தான்கள், மராட்டிய மன்னர்கள், நவாபுகள், கிழக்கிந்தியக் கம்பெனி என பல கைமாறி இன்று இந்த காதலர்கள் வசம் இருக்கிறது. //

:)))))

அருமையாக இருக்கு. கொஞ்சம் நீளம் ஜாஸ்தியோ?
Jazeela said…
கோயிலுக்கு கூட்டி போயி சுத்திக் காட்டியாச்சு, நன்றி. அண்ணாமலையாரை யாரு காட்டினா என்ன? நண்பனை அப்படியெல்லாம் வையுறது கொஞ்சலாக இருந்தாலும் பொதுயிடத்தில் கொஞ்சம் கூட நல்லாயில்லை.
செல்வா
எங்க ஊர் மக்கள் பத்தி நல்லவிதமா சொன்னதுக்கு நன்றி..திருவண்ணாமலை அட்டகாசமான ஊர்ங்க வெளிய தெரியாத அரிய விசயங்கள் நிறைய இருக்கு.திருவண்ணாமலை கோயிலுக்குள்ளவே பார்த்திராத இடம் நிறைய இருக்கு.அடுத்த முறை போகும்போது சொல்லுங்க சில தகவல்கள் தருகிறேன்.வேலூர்லயும் புகழ் அடையாத தலங்கள் அங்கங்க ஒளிஞ்சிட்டிருக்கு.

இந்த ஒரு வரிய தவிர்த்திருக்கலாமோ
/என்னை கிறிஸ்தவ, குடிகார நண்பன் அழைத்துவந்து காண்பிக்கிறான்/
வெகு நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் செல்வேந்திரன்.திரு அண்ணமலைக் கோயில் இந்த உயர்ந்த உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கக் காரணம் அங்கு ஆன்மீகவள்ளல்களின் திட யோகம்தான்.
அந்த யோகம் அமையக் காரணம் அப்பனும் அம்மையும். மீண்டும் திருவண்ணாமலையாரின் அடிக்கமலம் நினைக்கக் கொடுத்தமைக்கு நன்றி.
Anonymous said…
unkal mugathai parthal...
ivvalavu eluthu thiramayaa..
very good - vijai
Boston Bala said…
கலக்கல்... அழைத்துப் போனதற்கு நன்றி :)

---ஆடல் பெண்டிர் சிற்பங்களை பார்க்கும்போது சிற்பியின் கலை உணர்ச்சி மார்க்கச்சையோடு சேர்த்துக்கட்டப்பட்டிருப்பதாகத---

---'கோவிலுக்குள் சைட் அடிப்பவர்களின் பாவத்தை உறிஞ்சிக்கொள்வாளா?'---

---மன்னன் இல்லா கோட்டை, அழகில்லா பெண்கள், நீரில்லா நதியைக் கொண்டது வேலூர்' ... அத்தோடு இரக்கம் இல்லா கண்டக்டர்கள்---

---கூடுதலாக ஒரு கும்பா சாதம் காலியாவதைத் தவிர---

:)
அடுத்த முறை போகும்போது திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் திருக்கோவிலூருக்கு 5 கி.மீ. முன் இருக்கும் தபோவனம் எனும் சிற்றூருக்குச் சென்றுவரமுடிந்தால் செய்யுங்கள். மிக அமைதியான இடம், சிறிய கோவில், எளிமையான ஆசிரமம், பக்கத்தில் தென்பெண்ணை ஆறு. தங்குவதற்கு வசதியான இலவச அறைகள், காட்டேஜ்கள் உள்ளன. மேலதிக தகவல்கள் வேண்டுமானால் மின்னஞ்சல் அனுப்பவும்.
Voice on Wings said…
இன்று காதலர் வசமுள்ள கோட்டையைப் பற்றிய வாக்கியம் அருமை. பலரும் கூறியது போல், நண்பரைப் பற்றிய விமர்சனத்தைத் தவிர்த்திருக்கலாம். தமிழகத்திலேயே பார்க்காமல் விட்டுப் போன பல இடங்கள் உள்ளன என்ற எண்ணம் ஏற்படுகிறது, உங்கள் இடுகையைப் படித்த பின்.
selventhiran said…
வெங்கட்ராமன், விக்னேஷ், சுதர்ஸன் கோபால், பாட்டைய்யன், துளஸி கோபால், ஜெஸிலா, அய்யனார், வல்லிசிம்ஹன், பாஸ்டன் பாலா, சேதுக்கரசி, விங்ஸ் காலம் கடந்து சொல்கிறேன் "உங்கள் வருகைக்கு நன்றி"
நல்ல பயணப்பதிவு செல்வேந்திரன்.

வேலூரில் இன்னும் நிறைய இடம் இருக்கு.

வேலூர் பற்றிய ஏழு அதிசயம்
1. அழகில்லா பெண்கள்
2. வீரமில்லா ஆண்கள்
3. நீரில்லா நதி
4. மன்னனில்லா கோட்டை
5. அதிகாரமில்லாத போலிஸ்
6. சாமி இல்லாத கோவில்
7. மரங்கள் இல்லாத மலை

Popular Posts